'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் அர்த்தம் பொதிந்த தமிழ் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்து வருவது பறவை இனங்கள்தான். இந்தப் பூவுலகில் எங்கும் எப்போதும் வீசா, பாஸ்போர்ட் என்று எவ்வித தொந்தரவும் இல்லாமால் கட்டற்ற சுதந்திரத்துடன் சுற்றித் திரிய பறவைகளால் மட்டுமே முடியும். இதன் காரணமாகவோ என்னவோ கலாச்சாரம், பண்பாடு போன்ற கூண்டுகளில் அடைபட்டு கிடக்கும் மனிதர்கள் பறவைகளை கண்ட மாத்திரத்திலே மனது லேசாகி, குழந்தைக்களை போல குதூகலிக்க தொடங்குகிறார்கள். கொக்கரே பெல்லூர் சரணாலயத்துக்குள் நுழைந்தவுடனேயே பறவைகளின் இன்னிசை கீதம், குழந்தைகளின் மழலை மொழிகளை போல உங்கள் சித்தங்கலங்க வைத்து விடும்.
எங்கும் வியாபித்து இருக்கும் பறவைகளின் அர்த்தமற்ற கீச்சிடும் ஒலி, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைய நம்முடைய மொழிகளையெல்லாம் நொடிப்பொழுதில் பொருளற்றதாக்கிவிடும். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் இயற்கையின் அரவணைப்பில் அமைந்திருக்கும் கொக்கரே பெல்லூர் கிராமத்தில் மனிதர்களோடு மனிதர்களாக, அவர்கள் வீட்டு பிள்ளைகளாக ஆனந்தமாக வசித்து வருகின்றன பறவைகள்.
இந்த கிராமத்தில் வாழும் மக்களும் தங்கள் குடும்பத்து நபர்களை பேணிக் காப்பது போல மிகுந்த அக்கறையோடு இந்தப் பறவைகளை பராமரித்து வருகிறார்கள். எனவே ஒரு சரணாலயம் என்றே கொக்கரே பெல்லூரை சொல்ல முடியாது. மாறாக மனிதயினம், பறவையினம் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு வார்த்தைகளில் விவரிக்க இயலா உன்னத வாழ்க்கை ஒன்று கொக்கரே பெல்லூர் கிராமத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது. கொக்கரே பெல்லூர் கிராமத்துக்கு நவம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நீங்கள் சுற்றுலா வரும் போது 2500-க்கும் மேற்பட்ட செங்கால் நாரைகளையும்,1000-க்கும் அதிகமான நாரைகளையும் பார்த்து ரசிக்கலாம்.
இந்த சரணாலயத்தை பற்றி ஒரு முறை மைசூர் அர்மேச்சூர் நேச்சுரலிஸ்ட் அமைப்பின் செயலாளர் மனு.கே குறிப்பிடுகையில், 'கொக்கரே பெல்லூர் கிராம மக்களுக்கும், இந்த நாரைகளுக்குமான பந்தம் புதுமையானதும், அற்புதமானதும் ஆகும். சில நேரங்களில் ஆறு குளங்களிலிருந்து மீன்களை பிடித்து வந்து இந்த நாரைகள் கிராம மக்களிடம் கொடுக்கும் விந்தையான சம்பவங்களும் நடந்தேறும். அந்தளவுக்கு மக்களோடு மக்களாக நெருக்கமாக பறவைகள் இந்த கொக்கரே பெல்லூர் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றன' என்றார். மேலும் 'நான் 1994-ஆம் ஆண்டிலிருந்து கொக்கரே பெல்லூர் கிராமத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதோடு இந்த நாரைகளை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன். இந்த கிராமம் செங்கால் நாரைகளின் புகலிடமாக திகழும் இந்தியாவின் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது' என்றும் மனு.கே தெரிவித்தார்.
இங்கு நாரைகளை தவிர சதுப்பு நில கொக்கு, ஐபிஸ், எக்ரெட்ஸ் போன்ற பறவையினங்களும் குறிப்பிட்ட பருவ காலங்களில் வந்து செல்லும்.