என்னதான் நீங்க யாருக்கும் துரோகம் செய்யாம உங்க வேலையுண்டு, நீங்க உண்டுன்னு இருந்தாலும் ஒரு சில தடங்கல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதற்குக் காரணம், உங்களது வளர்ச்சி, மகிழ்ச்சி கண்டு, பிறர்கொள்ளும் பொறாமையாகக் கூட இருக்கலாம். இதை கண்ணு பட்டுவிட்டது என்றுகூட உங்கள் வீட்டு பெரியவர்கள் கூற நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
இதில், கொடுமை என்னவென்றால் கண்ணுக்கு தெரிந்த பல எதிரிகளை விட நம்முடன் நெருங்கி இருந்துகொண்டே சிலர் எரிச்சல்கொல்வதுதான். அவர்களை அறிவது அவ்வளவு எளிதல்ல. இதில் இருந்து எப்படி நீங்குவது என்று அறியாமல் நீங்கள் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் ஒரு முறை இந்தக் கோவிலுக்கு சென்று வழிபட்டுட்டு வாங்க... பிடித்த சனியெல்லாம் நீங்கி ஒரு சில நாட்களிலேயே வளர்ச்சியடைவதை கண்கூடாகக் காண்பீர்கள்.
எங்க இருக்கு தெரியுமா ?
Map
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் குகைகளுடன் கொண்ட கோவில். இங்கு பிரகலாதனுக்கு இறைவன் காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோவிலில் பிரகலாதனுக்காக இறைவன் வெளிப்பட்ட உக்கிர தூண் உள்ளது. தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே அவதாரங்கள் எனப்படுகின்றது. அவ்வகையில் மனித உடலுடனும் சிங்க முகத்துடனும் மாலவன் எடுத்த அவதாரம் தான் இதன் சிறப்பு.
திவ்ய தேசக் கோவில்
PC : sai sreekanth mulagaleti
அகோபிலம் என்ற திவ்ய தேசக் கோவிலில்தான் உங்களது எதிரிகளிடம் இருந்து காக்கும் கடவுள் மூலவராக உள்ளார். 'அகோ' என்றால் சிங்கம், 'பிலம்' என்றால் குகை. இந்த திருத்தலம் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாகக் கருதப்படுகிறது. அகோபில நரசிம்மர், பார்க்கவ நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர் உள்ளிட்ட திருமாளின் ஒன்பது அவதாரங்களும் ஒரு மலைத் தொடரில் ஆங்காங்கே சிதறி காணப்படுகின்றன.
தல வரலாறு தெரியுமா ?
PC : Gopal Venkatesan
திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாகக் கருடன் கேட்ட போது பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களை வழிபட்டதாக தல புராணம் மூலம் அறியப்படுகிறது. இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டதாகும். இற்தக் கோவிலே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகவும் விளங்குகிறது.
நரசிம்மர் மலை
PC : Ilya Mauter
புராதனப் பெருமாளான உக்ரமூர்த்தி அகோபில நரசிம்மர் மலைமீது எழுந்தருளியுள்ளார். மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இரண்டாம் அவதாரமான பார்க்கவ நரசிம்மர் உள்ளார். மலையின் தென்கிழக்கு திசையில் மூன்றாவது அவதாரமான யோகானந்த நரசிம்மர் உள்ளார். கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சத்ரவட நரசிம்மர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் உள்ள மூலவர் அரிய வகை கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு.
பாபநாசினி நதிக்கரை
PC : Ilya Mauter
அடுத்த அவதாரமான குரோத என்னும் வராக நரசிம்மர் பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத்தாக்கு தெரியும். தொடர்ந்து, மேல் அகோபிலத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சார்ங்க நரசிம்மரும், அகோபிலத்தின் அருகே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஏழாவது அவதாரமான மாலோல நரசிம்மரும் உள்ளனர். இக்கோவிலில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கடந்து சென்றால் பவனி நதிக்கரையில் பாவன நரசிம்மரும், குறுகிய மலைப்பாதை வழியாக சில தூரம் பயணித்தால் ஜ்வாலா நரசிம்மரும் வீற்றுள்ளனர்.
மலைமேல் ஓர் ஆன்மீகம்
PC : RameshSharma1
மலைக்குமேல் உள்ள இந்த ஒன்பது குகைக்கோவில்களுக்கும் சென்று பார்க்கவேண்டுமென்றால் எப்படியும் ஒரு வாரம் தேவைப்படும். பல கோவில்கள் அடர்காட்டில் அமைந்துள்ளதால் உடல் வலிமையும், மன வலிமையும் உடையவரே நடை பயணம் மூலம் செல்ல முடியும். நீங்கள் மலை ஏறுவதை விரும்புபவராக இருந்தால் இந்தப் பயணம் உற்சாமூட்டும். மலையின் ஈரக்காற்று, பசுமை வாசம் உங்களை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும்.
என்னெல்லாம் இருக்கு ?
PC : ahobilam
நரசிம்மர் கோவில் உண்மையிலேயே ஒரு குகைக்கு முன்னால் எழுப்பப்பட்டுள்ளது. இதன் உள்ளே பொன்னாலான மூலவர் சிலையும், தேவி சிலையும் உள்ளன. வெளியே செஞ்சுலட்சுமியின் சன்னிதி உள்ளது. அகோபிலத்தை ஒருநாளில் பார்த்து முடிப்பது சிரமம். குறைந்தது நான்குநாட்கள் அங்கேயே தங்கி ஆட்டோ அல்லது ஜீப் வைத்துக்கொண்டு குறுகிய மலைப்பாதைகளில் பயணம்செய்துதான் அனைத்து நரசிம்மர் அவதார ஆலயங்களையும் பார்க்க முடியும்.
எப்படி செல்லலாம் ?
Map
நவநரசிம்மர் கோவில்களுக்குச் செல்ல ஆலகட்டா மற்றும் கடப்பாவில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும், நந்தியால் மற்றும் கர்நூல் ரயில் நிலையங்களும் இந்த கோவில் அமையப்பட்டுள்ள பகுதி அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் நாகார்ஜுனா அணைக்கும் விஜயவாடா நீர்த்தேக்கத்திற்கும் இடையில் ஐந்து நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.
சென்னை - கர்னூர்
PC : Superfast1111
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்சல் எக்ஸ்பிரஸ், எக்மோரில் இருந்து கச்சிகுடா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு ரயில் சேவைகள் உள்ளன.