இந்தியாவில் தீவுகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அந்தமான் தீவு, முதலைத் தீவு, கோவாவில் உள்ள கோரா தீவு, டையூ, லட்சதீப், நிக்கோபர் உள்ளிட்டவைகளே. மேலும், சில தீவுகள் ஒரு சில மாநிலங்களில் அமைந்துள்ளது. ஆனால், இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆற்றுத் தீவு எது என தெரியுமா ?. இந்திய அளவில் பிக்னிக் கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்ற தலங்களில் இத்தீவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி, இந்த தீவு எங்கே உள்ளது ? எப்படிச் செல்வது என பார்க்கலாம் வாங்க.
விஜயவாடா
சீமாந்திரா மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் விஜயவாடா நகரம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது. மூன்று புறமும் நீர்நிலைகளாலும், ஒரு புறம் மலையினாலும் சூழப்பட்டிருப்பதால் இந்த நகரம் அற்புதமான இயற்கை அழகோடு வீற்றிருக்கிறது. இந்த நகரத்தின் தென்பகுதியில் சுற்றுப்புறப் பகுதிகள் அனைத்தும் பசுமை வளம் கொழிக்கச் செய்தவாறு சலசலத்து ஓடிக் கொண்டிருக்கிறது கிருஷ்ணா நதி. இதன் நடுவே தான் பவானி என்னும் புகழ்பெற்ற தீவு அமைந்துள்ளது.
FlickrWarrior
பவானி தீவு
கிருஷ்ணா ஆற்றின் நடுவே சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் பிரகாசம் அணைக்கட்டிற்கு அருகிலேயே அமைந்துள்ள பவானி தீவு சொர்க்கத்தின் மறுதோற்றம் என்றே கூறலாம். கிருஷ்ணா ஆற்றிலுள்ள மிகப்பெரிய தீவாக இது அமைந்துள்ளது. சமீப காலமாக ஒரு முக்கியமான பிக்னிக சுற்றுலாத் தலமாகவும் இது பிரபலமடைந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காகவே நீச்சல் குளங்கள் மற்றும் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த தீவுக்கு செல்வதற்கு துர்க்கா காட் எனும் ஆற்றுத் துறையிலிருந்து படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. சாகச நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த தீவில் காணப்படுவதால் கோடைகாலத்தில் எப்போதும் கலைகட்டியே இருக்கும். ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலமான இந்த பவானி தீவிற்கு பயணம் செய்வதற்காகவே விஜயவாடா நகருக்கு ஒரு பிரத்யேக பயணம் மேற்கொள்ளலாம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
Saisumanth Javvaji
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
பவானி தீவிற்கு அருலேயே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் மொகலாராஜபுரம் குகைகள், செயிண்ட் மேரி தேவாலாயம், நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோவில், பிரகாசம் அணைத்தடுப்பு உள்ளிட்டவை மிகவும் பிரசிதிபெற்றவை. விஜயவாடாவிற்கு செல்வதாக இருந்தால் தவறாமல் இப்பகுதிகளுக்கும் சென்று வருவது பயணத்தை மேலும் சிறப்பாக்கும்.
Koushik
மொகலாராஜபுரம் குகைகள்
மொகலாராஜபுரத்தில் அமைந்துள்ள குடைவறைக் கோவில்கள் 5-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. புராதன தோற்றத்துடன் அற்புதமான சிற்ப வடிப்புகளை இவை கொண்டுள்ளன. 10 அடி உயரம் கொண்டவையாக 5 குகைக் கோவில்கள் இந்த தொகுப்பில் காணப்படுகின்றன. தூண்களுடன் கூடிய நுணுக்கமான வாசல் அமைப்புகள் மற்றும் சிற்பங்களுடன் இவை காட்சியளிக்கின்றன. இந்த குகைக் கோவில்களில் நடராஜர், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் விநாயகர் சிலைகள் காணப்படுவதால் பக்தர்களும் இந்த குகைக் கோவில்களை தரிசிக்க வருகை தருகின்றனர்.
Kalli navya
செயிண்ட் மேரி தேவாலாயம்
செயிண்ட் மேரி தேவாலாயம் அல்லது குணாடலா மாதா கோவில் என்று அழைக்கப்படும் இந்த தேவாலயம் விஜயவாடா நகரத்துக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் அவர் லேடி ஆஃப் லூர்து திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்காலத்தில் ஏராளமான பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். இந்த ஆலயத்தினுள்ளே புராதன புனிதப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Myrtleship
ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோவில்
விஜயவாடா நகரத்தில் சித்திநகர் பகுதியில் இந்த ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோவில் அமைந்துள்ளது. நகரலா எனப்படும் ஒரு நாட்டார் சமூகத்தாரால் இது பராமரிக்கப்பட்டு வருவதால் இந்த பெயரை பெற்றுள்ளது. விஜயவாடா நகரத்திலுள்ள ஒரு முக்கியமான கோவிலாக இந்த ஸ்ரீ நகரலா மஹாலட்சுமி அம்மவாரி கோவில் பிரசிதி பெற்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா திருநாளின்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
Krishna Chaitanya Velaga
பிரகாசம் அணைத்தடுப்பு
கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பிரகாசம் அணைத்தடுப்பானது ஒரு ஏரி போன்ற நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளது. அணைத்தடுப்பு மீதிருந்து இந்த பிரம்மாண்ட நீர்த்தேக்கத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம். பிரமிக்க வைக்கும் 1223.5 மீட்ட நீளமுடைய இந்த அணையின் கட்டுமானம் கிருஷ்ணா மாவட்டத்தையும் குண்டூர் மாவட்டத்தையும் ஒரு பாலம் போன்று இணைக்கிறது. இந்த நீர்த் தேக்கத்திலிருந்து புறப்படும் மூன்று கால்வாய்கள் விஜயவாடா நகரத்தின் வழியே ஓடுவது வெணிஸ் நகர கால்வாய்கள் போன்று ரம்மியமானக் காட்சியாக இருக்கும்.
Mity05