வடக்கே பீஹார், மேற்கே சட்டிஸ்கர், தெற்கே ஒடிஷா, கிழக்கே மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை தனது எல்லைகளாக கொண்டது இந்த ஜார்கண்ட் மாநிலம். ஜார்கண்டில் பெருபாலான நிலப்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் புலிகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை இங்கு சற்று அதிகமாக காணப்படுகின்றன. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் ஈர்க்கும் வகையிலான விதவிதமான சுவாரசிய சுற்றுலாத் தலங்களை அளிக்கும் இங்கு சாகசத்திற்கு ஏற்ற ஓற் சுற்றுலாத் தலம் என்றால் அது கிரிதிஹ் தான். வாங்க, அங்கே என்ன உள்ளது ? என்னவெல்லாம் சிறப்பு என பார்க்கலாம்.
கிரிதிஹ்
கிரிதிஹ், பரஸ்நாத் மற்றும் சத்பஹார் மலைப்பகுதிகள் சாகச பயணிகளின் பொழுதுப்போக்குகளுக்கு ஏற்ற தலமாக பிரசிதிபெற்றுள்ளது. சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களை விரும்பும் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த மலைப்பகுதியை தேடி வருவது வழக்கம். பாராகிளைடிங், நீர் விளையாட்டுகள் மற்றும் பாராசெய்லிங் போன்றவை இங்கு பிரசித்தமான சாகச பொழுதுபோக்கு அம்சங்களாக பயணிகளை ஈர்த்துவருகின்றன.
CaptVijay
நீர் விளையாட்டுக்கள்
கிரிதிஹ்த்தில் உள்ள சுற்றுலா அம்சங்களில் நீர் விளையாட்டு பொழுதுபோக்குகள் முதன்மையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள கொண்டலி எனும் அணைத்தேக்கப்பகுதி இந்த வகையான பொழுதுபோக்குகளின் கேந்திரமாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான பறவை இனங்களையும் கண்டு ரசிக்கலாம். நீர் விளையாட்டுகள் மட்டுமல்லாது யானை சவாரி, ஒட்டகச் சவாரி போன்றவையும் இதர சுவாரசிய அனுபவங்களாக இங்கு காத்திருக்கின்றன. படகுச்சவாரி, பாறையேற்றம் மற்றும் மிதவைப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம்.
Shogun~enwiki
ஹாட் ஏர் பலூன் ரைட்
ஹாட் ஏர் பலூன் ரைட் எனும் பலூன் சவாரியும் கிரிதிஹ் சுற்றுலாத் தலத்தில் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆரம்ப கால விமானப்பயண தொழில் நுட்பமாக விளங்கிய இந்த பலூன் பறப்பு தற்போது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்தப்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்கள் அளிக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டலுடன் இங்கே பறக்கும் அனுபவத்தில் பயணிகள் ஈடுபடலாம். பாராசெயிலிங் எனும் மற்றொரு துணிகர சாகச பொழுதுபோக்கு இப்பகுதியில் சிறப்பு பெற்றது. இங்கு சாகசப்பிரியர்கள் 300 அடி உயரத்தில் பாராசூட் பறப்பில் ஈடுபடலாம். நிலப்பகுதியில் ஒரு ஜீப் மூலமாகவோ, நீர்ப்பரப்பில் ஒரு மோட்டார் படகு மூலமாக பாராசூட் இழுத்துச்செல்லப்படுகிறது. அதில் அந்தரத்தில் தொங்கியபடி பயணிகள் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை ரசிக்கலாம்.
Rescher~commonswiki
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
கண்டோலி
கிரிதிஹ் நகரத்திற்கு வட கிழக்கே 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கண்டோலி. ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கண்டோலி எனும் இந்த கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் சாகச ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்றது. இந்த அணைப்பகுதி இங்குள்ள நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சாகச விளையாட்டுகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள ஒரு காவல் கோபுரத்தின் உச்சியிலிருந்து கண்டோலி அணைத்தேக்கத்தின் அழகு முழுவதையும் தெளிவாக காண முடியும். 600 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மீது இந்த கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. படகுச்சவாரி, சிகரமேற்றம், பாறையேற்றம், பாராசெய்லிங் மற்றும் மிதவைப்படகு சவாரி போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் இங்கு சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம்.
J.M.Garg
குழந்தைகளுக்காக...
இந்த அணைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பூங்காவின் உள்ளே பார்வையாளர்கள் பார்த்து மகிழும் வகையில் சில பறவைகள் மற்றும் விலங்குகள் கூண்டுகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. குளிர்காலத்தில் புலம்பெயர் பறவைகளை அதிகம் பார்க்க முடியும் என்பதால் அச்சமயம் இங்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள பூங்காவில் விளையாட்டு ரயில் மற்றும் குழந்தைகளுக்கான ஊஞ்சல் அமைப்புகள் போன்றவை அமைந்துள்ளன.
Mohitjamshedpurian
மதுபண்
ஜார்க்கண்டில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த மதுபண் எனும் கிராமம். இங்கு 2000 ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்று அமைந்திருப்பதே இதன் புகழுக்கு காரணமாக உள்ளது. ஜைன மதத்தினரின் முக்கியமான யாத்திரை தலமாகவும் இக்கிராமம் விளங்கிவருகிறது. சமோஸ்ஹரன் கோவில் மற்ரும் போமியாஜி அஸ்தான் ஆகிய இரண்டும் இந்த மதுபண் கிராமத்திலுள்ள இரண்டு முக்கியமான கோவில்களாகும். மேலும் இங்கு அமைந்திருக்கும் ஜைன மியூசியத்தின் ஜைன புனித நூற்பிரதிகள், எழுத்துப்பிரதிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மியூசிய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொலைநோக்கியின் மூலமாக பார்வையாளர்கள் பரஸ்நாத் மலைக்கோவிலை தரிசிக்கலாம். பரஸ்நாத் கோவிலை நோக்கி மலையேற்றப்பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த மதுபண் கிராமத்திலிருந்துதான தங்கள் பயணத்தை துவங்க வேண்டியுள்ளது. கோவிலின் வடபகுதியை நோக்கிய 15 கிலோ மீட்டர் தூரமுடைய மலையேற்றப்பாதையாக இது அமைந்திருக்கிறது.
Bodhisattwa
உஸ்ரி நீர்வீழ்ச்சி
கிரிதிஹில் உள்ள உஸ்ரி எனும் இந்த நீர்வீழ்ச்சி துண்டி சாலையில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ் நகரத்திற்கு கிழக்கே 15 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இது வீற்றிருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி தலத்தில் மூன்று வீழ்ச்சிகளாக பிரியும் ஆறானது 40 அடி ஆழப்பிளவில் கீழ்நோக்கி விழுகிறது. உஸ்ரி நீர்வீழ்ச்சியை சுற்றிலும் அடர்ந்த பரஸ்நாத் வனப்பகுதி சூழ்ந்து காணப்படுகிறது. மலையிலிருந்து பாயும் ஆற்றின் ரம்மியத்தை பார்த்து ரசிக்கும் அனுபவம் மறக்க முடியாத சுற்றுலா நினைவாக பயணிகள் மனதில் பதியும் என்பதில் சந்தேகமேயில்லை.
Skmishraindia
ஹரிஹர்தாம்
ஹரிஹர்தாம் எனும் இந்த முக்கியமான ஆன்மீகத் தலத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் 65 அடி உயரத்தில் வீற்றிருக்கிறது. 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கோவில் வளாகத்தை சுற்றி ஆறு ஒன்றும் ஓடுகிறது. இங்குள்ள பிரம்மாண்டமான சிவலிங்கத்தை கட்டி முடிக்க 30 வருடங்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷ்ரவண் பூர்ணிமா தினத்தன்று நாடெங்கிலுமிருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு பயணம் செய்கின்றனர். சுற்றுலாப்பயணிகளை பொறுத்தவரையில் வருடம் முழுதுமே இந்த பிரம்மாண்ட சிவலிங்க அமைப்பை தரிசிக்கும் ஆவலில் வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vsvinaykumar2
பரஸ்நாத் மலைகள்
பரஸ்நாத் மலைகள் அல்லது ஸ்ரீ சம்மேத ஷிகார்ஜி என்று அழைக்கப்படும் இந்த மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 4480 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிரிதிஹ் பிரதேசத்தில் அமைந்துள்ள மலைத்தொடரான இதில் 1350 மீட்டர் உயரமுள்ள சிகரம் அமைந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உயரமான சிகரம் என்பது மட்டுமல்லாமல் இமயமலையின் தென்பகுதியின் அமைந்துள்ள உயரமான சிகரம் எனும் பெருமையையும் இது பெற்றிருக்கிறது. இங்குள்ள பழமையான ஜைனக்கோவில் 1775ம் ஆண்டைச் சேர்ந்ததாகும். ஜைன மதத்தார் மத்தியில் ஒரு முக்கியமான யாத்ரீக தலமாக இந்த பரஸ்நாத் மலை தலம் பிரசித்தி பெற்றுள்ளது. ஜைன மதத்தின் 24 தீர்த்தங்கரர்களில் 21 பேர் இந்த கோவில் தலத்தில் முக்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது. பரஸ்நாத் என்று அழைக்கப்பட்ட 23 வது தீர்த்தங்கரரின் பெயரிலேயே இந்த மலைப்பகுதி இன்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த மலையை நோக்கிய பயணத்தின் நடுநடுவே தீர்த்தங்கரர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கும்டி எனப்படும் சிறு சன்னதிகளை யாத்ரீகர்கள் தரிசிக்கலாம். இவற்றில் சில சன்னதிகள் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையை உடையது.
Pankajmcait