ஹரியானா மாநிலத்தில் இயற்கைக்காட்சிகளும், தனித்தன்மையான சுற்றுலாத்தலங்களும் நிரம்பியுள்ளன. மஹாபாரதப்போர் நடந்த குருக்ஷேத்ரா தலமும், ஃபரிதாபாத் நகரில் உள்ள பத்கால் ஏரியும் இம்மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களாகும். இதனைத் தவிர்த்து, கோவில்கள், கோட்டைகள், ஏரிகள், பூங்காக்கள் என அனைத்துத் தரப்பு சுற்றுலாப் பயணிகளையும் ஹரியானா தன்வசம் கொண்டுள்ளது. இன்னும் ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ள ஹரியானாவிற்கு பயணம் செய்தீர்கள் என்றால் வரலாறும், அறிவியலும் நிறைந்த அருங்காட்சியகங்களுக்கும் சென்று வாருங்கள். சரி, ஹரியானாவில் குருக்ஷேத்ரா என்னும் பகுதியில் மட்டும் எத்தனை அருங்காட்சியங்கள் உள்ளது, அங்கே என்ன சிறப்பு என பார்க்கலாம் வாங்க.
கல்பனா சாவ்லா கோளரங்கம்
இந்தியாவை பெருமைப்படவைத்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா ஹரியானா மாநிலத்தின் கர்னால் பகுதியில் பிறந்தவராவார். ஹரியானா அரசு இவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரில் கோளரங்கம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கே கல்பனா சாவ்லாவின் விண்வெளி சாதனைகள் குறித்த விபரங்களும் இந்த கோளரங்கத்திலுள்ள ஒரு பிரத்யேக பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதி நவீன புரொஜக்டர் கருவிகள் மற்றும் சரவுண்ட் சவுண்ட் சாதனங்கள் ஆகியவற்றோடு இந்த அரைக்கோள வடிவ அரங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. 12 மீட்டர் விட்டமுடைய இந்த கோளரங்கத்தில் ஒரே சமயத்தில் 120 பார்வையாளர்கள் ஒரு திசை நோக்கியவாறு அமர முடியும். முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கிற்கு தடையின்றி மின்சாரம் பெறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அஸ்ட்ரனாட் மற்றும் ஒயசிஸ் இன் ஸ்பேஸ் எனும் இரண்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்காகவும் முக்கியமாக மாணவர்களுக்காகவும் இந்த அரங்கில் காண்பிக்கப்படுகின்றன. இந்த வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தின் காட்சிக்கூடங்களில் வானவியல் மற்றும் விண்வெளி குறித்த காட்சித்திரை மற்றும் தொடுதிரை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் சுயமாக இயக்கி விபரங்களையும் காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.
kcmp
தரோஹார்
தரோஹார் ஹரியானா மியூசியம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் ஹரியானா நாட்டுப்புற கலை மற்றும் பாரம்பரிய மையம் அமைந்துள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் இந்த மையத்திற்கு வருகை தருகின்றனர். ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, மலேசியா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பயணிகள் இங்கு பயணம் செய்வது வழக்கம். இந்த அருங்காட்சியகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புராதன அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகள் தவிர இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், இலக்கியம், மரபு, கட்டிடக்கலை, கல்வி, அரசியல் மற்றும் வரலாறு குறிந்து தெரிந்துகொள்ள விரும்பும் ஆராய்ச்சியாளர்களும் இங்கு வருகை தருகின்றனர்.
Sudhirkbhargava
கிருஷ்ணா மியூசியம்
இந்தியாவின் மிக முக்கியமான பழமையான இதிஹாசமான மஹாபாரதம் முழுதுமே கிருஷ்ணரை மையமாகக்கொண்டு பின்னப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. எல்லா பாத்திரப்படைப்புகளும் கிருஷ்ணரால் இயக்கப்பட்டு தங்கள் செயல்களை நிகழ்த்துவதாக இந்த காவியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெய்வீக பிறப்பு மற்றும் வீரம் போன்ற அம்சங்களை கொண்டிருந்த கர்ணன், துரோணாச்சாரியா மற்றும் பீஷ்ம பிதாமகர் ஆகிய அனைவருக்குமே கிருஷ்ணரின் வல்லமையும் இயக்கமும் தெரிந்தே இருந்திருக்கிறது. இருப்பினும் அவரவர் அவரவர்க்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர். குருக்ஷேத்ரா நகர வளர்ச்சி வாரியத்தின் மூலம் இந்த கிருஷ்ணா மியூசியம் 1987ம் ஆண்டு துவங்கப்பட்டிருக்கிறது. பின்னர் இது தற்போதுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிற்து. அப்போதைய குடியரசுத் தலைவரான ஆர். வெங்கடராமன் இதனைத் திறந்து வைத்துள்ளார். 2012-ம் ஆண்டில் மேலும் இரண்டு அங்கங்கள் இந்த வளாகத்தில் சேர்க்கப்பட்டு ஷீமதி பிரதிபா பாடீல் திறந்து வைத்தார். இவற்றில் மல்டிமீடியா மஹாபாரதம் மற்றும் கீதை கேலரி போன்றவை இடம் பெற்றுள்ளன. விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணர் போதித்த தத்துவங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு பொருட்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன். கலைப்பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள், எழுத்துப்பிரதிகள், சின்னங்கள் மற்றும் இதர அரும்பொருட்கள் இந்த காட்சி தொகுப்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Giridharmamidi
லைட் அன்ட் சவுண்ட் ஷோ
குருக்ஷேத்ராவில் உள்ள யாத்திரை தலங்களின் முக்கியத்துவத்தையும் வரலாற்றுப் பின்னணியையும் எடுத்துக்காட்டுவதற்காக ஹரியான மாநில அரசு இங்கு பல இடங்களில் ஒலி-ஒளிக்காட்சி சேவைகளை வழங்கும் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணா மியூசியம் மற்றும் ஜோதிஸார் தலங்களில் இந்த காட்சிச்சேவைகள் பார்வையாளர்களுக்காக வழங்கப்படுகின்றன. குருக்ஷேத்ராவில் பிரதான யாத்திரை அம்சமான ஜோதிஸார் தலத்தில் ஒவ்வொரு மாலையும் இந்த ஒலி-ஒளிக்காட்சி சேவை திரையிடப்படுகிறது. குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்தபடி கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் காட்சி சிற்ப அமைப்பாக ஜோதிஸார் தலத்தில் வடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பகவத் கீதையின் சிறப்பை குறிப்பிடும் அடையாள சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிற்ப அமைப்பு ஒரு பீடத்தளத்தின்மீது அமைக்கப்பட்டிருக்கிறது. 1967ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதியான சங்கராச்சாரியார் இதனை நிர்மாணிக்க செய்துள்ளார்.
Vishal14k