நீர் சூழ்ந்த வீடுகள், ரம்மியமான படகுப் பயணம், படகு வீடு என இதையெல்லாம் எங்கையேனும் கேள்விப்பட்டளே நம்மில் பெரும்பாலானோரின் நினைவுக்கு வருவது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா தான். படகில் பயணிக்க விரும் சுற்றுலாவாசிகளின் முதல் தேர்வே இந்த ஆலப்புழா நகரம் தான். இதன் காரணமாக இன்று படகு இல்லங்கள் கேரள சுற்றுலாத் துறைக்கு பெரும் வருமானம் ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் அவர்கள் கொள்ளும் அக்கரை என்று கூட சொல்லலாம். ஏனெனில் தமிழகத்தில் இதுபோன்றுள்ள ஓர் அழகியச் சுற்றுலாத் தலத்தை அரசு கவணிக்காமல் விட்டிருப்பதே. சரி, தமிழகத்தில் ஏதுங்க ஆலப்புழா மாதிரியான சுற்றுலாத் தலம் இருக்குன்னு தானே கேள்வி கேட்குறீங்க. நம்ம ஊருள, அதுவும் தஞ்சாவூர் பக்கத்துலதாங்க இருக்கு. வாங்க, அது என்ன ஏரியா, எப்படி செல்வது என பார்க்கலாம்.
முத்துப்பேட்டை
தஞ்சாவூரில் இருந்து வெறும் 70 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர் மாவட்டதில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த சிறிய நகரம் தான் முத்துப்பேட்டை. இந்த ஊரில் இருந்து ஜாம்புவானோடை அருகில் லகூன் என்ற அழகியத் தீவும் உள்ளது. இப்பகுதியில் இருக்கும் அலையாத்திக் காடுகளும், சதுப்புநில பகுதிகளும் சுற்றுலாத் செல்வதற்கு ஏற்ற இன்றும் பெரும்பாலானோருக்கு தெரியாமலேயே உள்ள ஒரு பொக்கிஷமாக உள்ளது.
Marinebalaji
அற்புத மரக் காடு
முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டின் மொத்த பரப்பளவு 120 கிலோ மீட்டர். இந்த காடு முழுக்க வேர்கள் மூலமே சுவாசிக்கும் தன்மைகொண்ட சென்னியா, மெனரனா, அவி என்னும் அரிய வகைத் தாவரங்களும், பிற சதுப்பு நில மரங்களான தில்லை, சுரப்புன்னை, செரியோப்ஸ் டிக்கேன்ட்ரா மரங்களும் முத்துப்பேட்டை சதுப்பு நிலக் காடுகளை அழங்கரிக்கின்றன. புவியியல் அமைப்பில் முக்கியமான ஈரப்பத நிலப்பகுதியாக முத்துபேட்டை அலையாத்தி காடுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது.
L. Shyamal
ரஷ்யாவில் இருந்து இங்கு வரை
ஓவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் முத்துப்பேட்டை சதுப்புக் காடுக்கு வருகின்றன. இப்பறவைகள் சைபீரியா, மத்திய ஆசியா, ரஷ்யாவின் வடக்குப் பகுதி மற்றும் ஐரோப்பா போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்து வருவதாக பறவைகள் ஆர்வலர்கள் மூலம் ஆராயப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பறவைகளான பூநாரை, செங்கால் நாரை, சிறவி, நீர்க்காகம் போன்ற நீர்ப் பறவைகளும் இங்கே அதிகளவில் காணப்படுகின்றன. கொக்கு, மீன்கொத்தி, நாரை போன்ற அழியும் தறுவாயில் உள்ள நீர்ப்பறவைகள் இப்பகுதியில் நிலையாக வசிக்கின்றன.
Marinebalaji
லகூன் காடு
பாமனி ஆறு, கோரை ஆறு, கிளைதாங்கி ஆறு, மரைக்கா கோரையாறு என பல்வேறு ஆறுகள் இப்பகுதியில் வங்க கடலில் கலக்கும் இடமாகும். இந்த ஆறுகள் உருவாக்கியுள்ள லகூன் எனும் பகுதியும், இங்கு அமைந்துள்ள சதுப்பு நில காடுகளும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியை மேலும் ரம்மியமாக்குகிறது.
Marinebalaji
இயற்கை அரணாகும் அலையாத்தி
திருவாரூரை சுனாமி உள்ளிட்ட கடல் சீற்றத்தில் இருந்து காக்கக் கூடிய அரணாக இருப்பது அலையாத்திக் காடுகளே. சாம்புவானோடை படகு துறையில் இருந்து இருபுறமும் அலையாத்தி மரங்களை கொண்ட நீர்ப் பாதையில் சுமார் 7 கிலோ மீட்டர் பயணித்தால் கடல் முகத்துவாரத்தைக் காணமுடியும். இப்பாதையில் ஏராளமான திட்டுகள் குட்டித் தீவுகளாக கண்களுக்கு விருந்தளிக்கும்.
Marinebalaji
முதல் நடை பாலம்
சதுப்பு நிலக் காடுகளின் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாற ஓய்விடங்களும் கூட இதனருகே உள்ளது. மேலும், இங்கே 162 மீட்டர் நீளத்திற்கு மரத்திலான நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற அமைப்பு வேறு எந்த சதுப்பு நிலக் காடுகளில் காணமுடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஓய்விடத்திலிருந்து சதுப்பு நிலக் காடுகளைக் காணும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களும் உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
Marinebalaji
எப்படிச் செல்லலாம் ?
தஞ்சாவூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவாரூரில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகப்பட்டினத்தில் இருந்து 66 கிலோ மிட்டர் தொலைவிலும் உள்ளது இந்த முத்துப்பேட்டை மாங்குராவ் காடுகள். திருச்சி விமான நிலையம் இதனருகில் உள்ள விமான நிலையமாகும். இது சுமார் 114 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் முத்துப்பேட்டைக்கு வர போக்குவரத்து வசதிகள் எளியமுறையில் இணைக்கப்பட்டுள்ளது.