நம்ம நாட்டுல உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம், ஒட்டுமொத்த நாட்டிற்கு ஒரு தலைநகரம் இருப்பது நாம் அறிந்ததே. தமிழகத்திற்கு சென்னை, கேரளாவுக்கு திருவனந்தபுரம், மேற்கு வங்கத்திற்கு கொல்கத்தா இப்படின்னு பட்டியல் நீளும். நாட்டோட ஒட்டுமொத்த தலைநகரமா டெல்லி இருக்கு. அதெல்லாம் சரி, நம்ம நாட்டின் தகவல் தொழில்நுட்பத்திற்கு மட்டுமே ஒரு தலைநகரம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா ?. உலக அளவுள உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கான தலைமையமா தேர்ந்தெடுத்துள்ள ஒரு பகுதியே இந்த தொழில்நுட்ப தலைநகரம். வாங்க, இந்தியாவுல இருக்குற அந்த தலைநகரத்தைத் தேடிப் போவாம்.
தொழில் நுட்ப தலைநகரம்
உத்திரப் பிரதேசத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நொய்டா. இதோட நிர்வாகத் தலைநகரம் அருகிலுள்ள நகரமான கிரேட்டர் நொய்டாவில் உள்ளது. குர்கானுடன் சேர்ந்து நோய்டாவும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப துறை மையமாகவும் மற்றும் எல்லா பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்களையும் கொண்டுள்ள இடமாகவும் உள்ளது. மிராக்கிள், ஃபுஜிட்சு, ஏஓஎன் ஹெவிட், ஈபிக்ஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்.சி.எல், டெக் மஹிந்த்ரா இன்னும் பல இங்குள்ள புகழ் பெற்ற பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக உள்ளன.
Sunil Kumar
மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா
நொய்டா சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குவதால் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் நொய்டாவை தங்களுக்கான தலைமையகமாகத் தேர்ந்தெடுக்கின்றன. உண்மையில், இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை முன்னுக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் தலைமையகமும் நொய்டாவில் தான் உள்ளது. இத்தகைய நொய்டாவுக்கு தொழில் ரீதியாகவோ, அல்லது சுற்றுலாச் செல்ல திட்டமிட்டால் எங்கவெல்லாம் சென்று வரலாம்னு பார்க்கலாம்.
Chhabs63
நொய்டாவைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்
வட இந்தியாவிலேயே மிகப்பெரிய பல்லடுக்கு வணிக மையமாக விளங்கும் தி கிரேட் இன்டியன் பிளேஸில் அனைத்து வகையான பிராண்டுகளும் கடை விரித்துள்ள இடமாகும். அது மட்டுமின்றி இன்னும் சில பொழுதுபோக்கு மற்றும் வானுயர்ந்த வணிக மையங்களும் நோய்டாவில் உள்ளன. இப்படிப்பட்ட பெருமை மற்றும் கவர்ச்சியான அம்சங்களைக் கொண்ட இடங்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான தாமரை கோவில், சாய் பாபா கோவில், கிருஷ்ணர் கோவில் உள்ளிட்ட தலங்களும் உங்களுக்காகவே உள்ளது. இதில், மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலம் என்றால் இது ஓக்லா பறவைகள் சரணாலயம் தான்.
Vanished2009
ஓக்லா பறவைகள் சரணாலயம்
ஓக்லா பறவைகள் சரணாலயம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் இருந்து இடம் பெயர்ந்த பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. நொய்டா- டெல்லியின் எல்லையில், யமுனை ஆறு உத்திரப் பிரதேசத்தை நோக்கி செல்லத் துவங்கும் இடத்தில் இந்த சரணாலயம் உள்ளது. யமுனை நதியின் நீரை தேக்கி நிறுத்துவதற்காக கட்டப்பட்டுள்ள ஏரிதான் இந்த சரணாலயத்தின் முக்கிய அம்சமாகும். இந்த ஏரியில் மட்டும் 319 வகையான இடம் பெயரும் பறவைகள் வசித்து வருகின்றன. இவற்றில் சுமார் 50 சதவிகிதம் திபெத், ஐரோப்பா மற்றும் சைபீரியா போன்ற இடங்களிலிருந்து வந்து, தங்களுடைய குளிர்காலத்தை இந்திய நாட்டின் இந்த பகுதியில் வெப்பத்துடன் கழிப்பதற்காக வருவதாகவும் பறவைகளின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Awankanch
செக்டார் 18 மார்க்கெட்
நொய்டாவில் உள்ள செக்டார் 18 மார்க்கெட், டெல்லி மற்றும் குர்கானைப் போல ஒரு சர்வதேச நகரமாக நொய்டாவையும் உயர்த்தி வருகிறது. இந்த மார்க்கெட்டில் அல்ட்ரா மாடர்ன் ஷாப்பிங் மால்கள், தரம்மிக்க உணவகங்கள், பல்லடுக்கு வளாகங்கள் மற்றும் மாறுபட்ட பொழுதுபோக்கு, வணிக மையங்கள் ஆகியவை உள்ளதால், தேசிய தலைநகரப் பகுதியில் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக நோய்டா விளங்கி வருகிறது. டெல்லியிலிருக்கும் கன்னாட் பிளேஸ் அல்லது தெற்கு டெல்லி மார்க்கெட்களை விட அதிக அளவு திருப்தியைத் தரும் இடமாக இந்த செக்டார் 18 மார்க்கெட் விளங்குவதால், இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமான இடமாக இது உள்ளது.
Angry s0ul
தாமரை கோவில்
பஹாய் இனத்தவரால் 1986-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தாமரை வடிவிலான கோவில் கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறது. டெல்லியிலேயே மிகவும் சிறந்த மற்றும் பிரமிக்கத்தக்க வகையிலான கட்டிடமாக இருப்பதால் நொய்டாவின் ஒரு அடையாளச் சின்னமாகவும் இது விளங்குகிறது. அதன் கட்டிடக் கலை வடிவமைப்பிற்காகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் பல்வேறு சர்வதேச விருதுகளை இந்த கோவிலுக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
IM3847
தல அமைப்பு
தாமரை மலர் பாதி திறந்திருப்பதைப் போன்று கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் அமைதியும், தெய்வீகமும் கலந்திருக்கின்றன. பளிச்சிடும் வெண்மை நிற மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த வழிபாட்டுத் தலத்தைச் சுற்றிலும், செயற்கையாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிகள், தோட்டங்கள் மற்றும் நடைபாதைகள் போன்றவையும், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள தடுப்புகளும் கண்களைக் கவரும். இந்த இடத்தில் படிகள் மற்றும் பாலங்களுடன் கூடிய ஒன்பது குளங்களும் பயணிகளை வெகுவாக ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த கோவிலின் கீழ் தளத்தில் இந்த கோவிலிற்கான முதன்மையான வழிபாட்டு கூடம் உள்ளது. அதன் பக்கவாட்டுப் பகுதிகளில் வரவேற்பு மையம், நூலகம் மற்றும் நிர்வாகப் பிரிவு ஆகியவை உள்ளன. இந்த தாமரையின் மேற்பகுதி கண்ணாடியால மூடப்பட்டுள்ளதாகவும் மற்றும் மழை மற்றும் மோசமான பருவநிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டாக இரும்பினாலும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், கண்ணாடியாலான மேற்பகுதியின் வழியாக இயற்கையாகவே ஒளி புகும் இடமாகவும் இந்த கோவில் உள்ளது.
Anandrahulkumar
தி கிரேட் இண்டியா பிளேஸ்
தி கிரேட் இண்டியா பிளேஸ் நாட்டிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் வளாகங்களில் ஒன்றாகும். நொய்டாவில், செக்டார் 18-ல் உள்ள வேர்ல்ட்ஸ் ஆஃப் ஒன்டர் என்ற பொழுது போக்கு பூங்காவின் ஒரு பகுதியாக இந்த ஷாப்பிங் வளாகம் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் அறியப்படும் பல்வேறு வகையிலான பிராண்டட் ஷோரூம்களின் இருப்பிடமாக இந்த வளாகம் அமைந்துள்ளது. ஷாப்பர்ஸ் ஸ்டாப், குளோபஸ், பாண்டலூன்ஸ், பிக் பஜார், ஹோம் டவுன், உட்லேண்ட், லைப் ஸ்டைல் போன்ற பல சர்வதேச நிறுவனங்கள் ஒரே இடத்தில் இங்கே குடிகொண்டுள்ளன. நொய்டாவின் பரபரப்பான ஷாப்பிங் மையங்களில் சிறந்த இடமான தி கிரேட் இண்டியா பிளேஸ் சென்றால் ஒட்டுமொத்த ஐட்டங்களையும் அள்ளி வரலாம்.
Nayanhalder57
கிருஷ்ணர் கோவில்
டெல்லியில் உள்ள கிழக்கு கைலாஷ் பகுதியில், நொய்டாவுக்கு மிக அருகிலுள்ள சான்ட் நகர் என்ற இடத்தில் உள்ள பிரமிக்க வைக்கும் இஸ்க்கான் கோவிலை சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் சங்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பக்தர்கள் கிருஷ்ணரை நோக்கி முழங்கியவாறே செல்வதால் இந்த இஸ்க்கான் கோவில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கும் நற்செய்தியை உலகுக்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
iskconnoida