இராம சேது அல்லது இராமர் பாலம் என்ற பெயரில் அழைக்கப்படும் ஆதாம் பாலத்தை இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற உதவிய வானரங்கள் மூலம் இராமர் கட்டினார். இராமாயணத்தில் இந்த பாலம் சேது பந்தனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுண்ணாம்புப் பாறைகளை வரிசையாக நீட்டிவிட்டு தமிழ் நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா தீவுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்ட இடம் தான் ஆதாம் பாலம். இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில், இப்படியொரு பாலம் இருந்ததையும், அது மனிதர்கள் நடந்து செல்ல வசதியாக இருந்ததையும் புவியியலாளர்கள் உறுதி செய்கின்றனர். கிறிஸ்தவ வரலாற்று கதைகளிலும் இந்த பாலம் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. இலங்கையில் இருந்த ஆதாம் சிகரத்தின் உச்சிக்கு சென்று ஒற்றைக் காலில் ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பதற்காக ஆதாம் இந்த பாலத்தைப் பயன்படுத்தி இலங்கையை அடைந்ததாகவும், அதனாலேயே இந்த பாலம் ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுவதாகவும் கிறித்துவ நூல்களில் கூறப்படுகிறது. இன்னும் பல வரலாற்று சிறப்புகளைக் கொண்டு இராமாயணம் காலம் தொட்டு இன்று முதல் நீடித்து இருக்கிறது இந்தப் பாலம். இராமர் பக்தர்கள் இதை புனிதமாகக் கருதுகின்றனர். இப்படி இருக்கும் இராமர் பாலத்தின் ஒரு கல்லைக் கொண்டு ஒரு கோவிலில் பூஜையே நடத்தப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?. இந்தக் கல்லுக்கு இருக்கும் முழு சக்தி குறித்து தெரிந்துகொண்டால் மூக்கின் மீதே விரலை வைத்து விடுவீர்கள். அப்படி இருக்கும் பல சக்தி கொண்ட கல் எங்கே உள்ளது ? எப்படிச் செல்வது என பார்க்கலாமா ?
எங்கே உள்ளது ?
விழுப்புரத்தில் இருந்து விக்கிரவாண்டி, பேரணி, மைலம் என சுமார் 62.5 கிலோ மீட்டர் பயணம் செய்தால் கிளியனூர் அடுத்து அமைந்துள்ளது அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில். விழுப்புரம், மைலம் இருந்து வானூர் வழியாக 51 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம். மேலும், பாண்டிச்சேரியில் இருந்து 12.5 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. பாண்டிச்சேரியில் இருந்து சென்னை - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், டோல்கேட்டைக் கடந்து திண்டிவணம் நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும்.
Rai Marlecha
சிறப்பு
ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சுமார் 36 அடி உயரத்திற்கு மூலவராக ஆஞ்சநேயர் விற்றுள்ளார். இராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்தப்பட்ட கல் இத்தலத்தில் வைத்து பூஜிக்கப்படுவது முக்கிய சிறப்பாகும். குறிப்பாக, மிதக்கும் தன்மை கொண்ட இக்கல் தண்ணீர் நிறைந்த பெரிய பாத்திரத்தில் மிதக்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் இக்கல்லின் எடை சுமார் 8 கிலோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Smartshiva1988
திருவிழா
ஆஞ்சநேயருக்கு உகந்த நாட்களான ஸ்ரீநாம நவமி, அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்படுகிறது.
Naidu.gopal
நடை திறப்பு
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலின் நடை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் இத்தலத்தில் வழிபடுவதால் கூடுதல் நேரம் நடை திறக்கப்படுவது வழக்கம்.
Dsesringp
வழிபாடு
பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிப்பட்டால் மனதில் உள்ள தேவையற்ற சங்கடங்கள் விலகி, தொழில் இலாபப் பாதையில் செல்லும். மேலும், இல்லறத்தில் நீடித்து வந்த பிரச்சனைகள் தீரும். நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும்.
Dohduhdah
நேர்த்திக்கடன்
வேண்டிய யாவும் நிறைவேறியபின் ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சிறப்பு அலங்கார, அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
Chitrinee
கோவில் அமைப்பு
சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் தெற்கு பார்த்து பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கன், பரதன் ஆகியோர் சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவரான ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயரத்தில் விமானமும், அதன் மீது 5 அடி உயரம் கொண்ட கலசமும் உள்ளது. சுமார் 36 அடி உயரம் கொண்ட இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயர்தூக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திருவுருவத்திற்கு அபிஷேகம் செய்வதென்றால் 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்கு பொருத்தப்பட்டுள்ள 1200 கிலோ எடையுள்ள மாபெரும் மணியை ஒலித்தால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம்வரை இதன் ஒலிக் கேட்கும். தலத்தின் ஒரு பகுதியில் ராமரின் பாதுகைகளும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ganeshk
பஞ்சமுகத்திற்கான காரணம்
இராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ராவணன் ஆயுதங்களை இழக்க நேர்ந்தது. ஆயுதமற்ற ராவணனை வதம் செய்ய விரும்பாத இராமன் அவரை இன்று போய் நாளை வா என அனுப்பி விட்டார். இராமர் இப்படிச் செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை உணராத ராவணன் மீண்டும் இராமருடன் போர் செய்ய அசுரனின் துணையுடன் போருக்குச் சென்றார். ராமரை அழிக்க அசுரன் யாகம் நடத்த திட்டமிட்டான். இந்த யாகம் நடந்தால் ராம லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், யாகத்தைத் தடுத்து, அசுரனை அழிக்க இராமன் ஆஞ்சநேயரை அனுப்பினார். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து அசுரனை அழித்தார். அந்த பஞ்சமுகம் கொண்ட ஆஞ்சநேயரே இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
Vimalkalyan
வரலாறு
பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயருக்கு என கோவில் கட்ட முடிவு செய்தனர். ஆஞ்சநேயர் மாபெரும் சக்திகொண்டவர் என்பதால், மிகப் பிரமாண்டமான அளவில் சிலை அமைக்கப்பட்டது. இதற்காக, செங்கல்பட்டு அடுத்த சிறுதாமூரில் இருந்து சுமார் 150 டன் எடைகொண்ட கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டது.
இராமர் பாலத்தின் கல்
இத்தலத்தில் காணப்படும் மிதக்கும் கல் இராமாயணக் காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்தப்பட்ட கல்லின் ஒரு பகுதி என சான்றுகள் உள்ளன. சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. வானரங்கள் இந்த பாலப்பணியை மேற்கொண்டனர். அப்போது பாலம் கட்ட பயன்படுத்தப்பட்ட மிதக்கும் கல்லின் ஒரு பகுதியே இக்கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக் கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் பூக்களால் அலங்கரித்து மிதக்கும் நிலையில் வைத்துள்ளனர்.
எப்படிச் செல்வது ?
விழுப்புரம் மாவட்டம், பஞ்சவடியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு மைலம், திருபுவணி, திண்டிவனம் என மூன்று சாலை வழியாக பயணம் செய்யலாம். மாநகரத்தில் இருந்து பேருந்து வசதிகள் எளிமையான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச் சேரியில் இருந்தும் இத்தலத்திற்குச் செல்ல பேருந்துவசதிகள் அதிகளவில் உள்ளது. பாண்டிச்சேரி விமான நிலையத்தில் இருந்து இக்கோவில் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து தனியார் வாடகைக் கார்கள் மூலம் ஆஞ்சநேயர் கோவிலை அடைய முடியும்.