அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் என்றால் அது சங்கரன் கோவில் தான். சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின் சர்ச்சைக்கு மூலகாரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர். பார்வதியோ, இருவருமே ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அந்த சிவனிடமே வரம் கேட்டாள். சிவபெருமானும் மனமுவந்து, அகத்திய முனிவர் தவமியற்றிய பொதிகை மலைப்பகுதியில் புன்னை விருட்சமாகப் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன் என்றார். சிவனை வணங்கிய பார்வதியும் புன்னைவனத்துக்குப் புறப்பட்டார். அங்கே கொண்ட தவம், தல சிறப்பு, விசித்திர வழிபாடு என தொடர்ந்து பயணிப்போம் வாங்க.
சகல வரம் தரும் சங்கர நாரயணர்
புன்னை வனமாகிய சங்கரன்கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் முனிவர்கள், தேவர்கள், தெய்வப் பெண்களுடன் தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் சங்கரநாராயணராக, உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சிகொடுத்தார். அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், வேண்டிய வரங்களைக் கேள் என சிவபெருமான் கூறினார்.
இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திருவுருவைக் கொள்ள வேண்டும் என அம்பாள் கேட்டாள். ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார்.
Ms Sarah Welch
மூன்று சந்நிதிகள்
சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார். மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும். ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்.
Ssriram mt
அபிஷேகம் கிடையாது
குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே செய்யப்படுகிறது. அதனால் சந்திர மெளலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு. சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசீ தீர்த்தம் உண்டு, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு. இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு.
Shashankshanker
நோய் தீர்க்கும் புற்றுமண்
ஐம்பூதங்களில் இந்தக் கோவில் நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்கிறது. இதனால், இக்கோவிலில் உள்ள 'புற்றுமண்" வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், வயல், வீடுகளின் செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
செய்வினை நீக்கும் கோமதி
கோமதி அம்மன் சந்நிதி முன்பு உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கி தவம் செய்தால் அவை நீங்கும். அதே பகுதியில் உடல் உபாதைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வீட்டிலும் கனவிலும் விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் தென்பட்டாலும், விபத்து போன்றவற்றில் காயம், உறுப்புகளில் பிரச்னைகள் ஏற்பட்டால், இக்கோவிலில் விற்கப்படும் உலோகத்தினால் செய்யப்பட்ட தகட்டால் ஆன பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் உருவம், மனித கை, கால், மார்பு, தலை போன்ற உறுப்புகளின் தகட்டை வாங்கி உண்டியலில் செலுத்தி வணங்குவதன்மூலம் பாதிப்புக்கள் நீங்கும், நிவர்த்தி கிட்டும் என்பது இத்தல நம்பிக்கையாக உள்ளது.
TRYPPN
பன்னிறுநாள் திருவிழா
ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர். உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்ததால் அம்மனுக்கு என்று தனித்தேர் உள்ளது. திருவிழாவின் இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது. ஒரு கையில் விபூதிப் பை, ஒரு காலில் தவம், சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி பரவசத்தை ஏற்படுத்தும்.
Kumarappanghelliah
ஒருகாலில் தவம்
திருவிழாவின் முக்கிய நிகழ்வே தபசுக் காட்சியும், சங்கரநாராயணராக ஈசன் காட்சியருளிய வைபவமும் தான். தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளும் நிகழ்வும், சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் தெற்கு வீதியில் தபசுக்காக சிவபெருமான் எழுந்தருளும் நிகழ்வும் நடக்கிறது. அப்போது தன் வலது காலை உயர்த்தி, இடக் காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தபசுக் காட்சி அருள்கிறாள். இந்தக் காட்சியை பல்லாயிரம் பக்தர்கள் கண்டு வணங்குகிறார்கள்.
Sankar.s
ஆடிச்சுற்று
ஆடித் தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று" என்ற பெயரில், பக்தர்கள் கோவிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவது வழக்கம். அதிக எண்ணிக்கையில் சுற்ற விரும்புவோர் ஆடி மாதம் முழுவதும் காலை, மாலை என சுற்றி வருவர். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
Ssriram mt
எப்படிச் செல்வது ?
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநாராயணர் கோவில். சங்கரன்கோவில் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் நஞ்சங்குளம், தேவர்குளம் என சுமார் 65 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடைந்துவிடலாம். ராஜபாளையத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலும், குற்றாலத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ள இக்கோவிலை அடைய மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சங்கரன் கோவில் திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுச் சென்றால் சிறப்பு தரிசனத்தை கண்டு ரசிக்கலாம்.