நம் நாட்டில் ஆன்மீகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில், இந்துக்களின் ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிப்பவர்கள் சித்தர்களே. அவர்களை மையப்டுத்தியே பல முக்கியக் கோவில்கள் இன்று பிரசிதி பெற்றுள்ளது. சித்தர்கள் இல்லையென்றால் தற்போது நாம் வணங்கும் வழிபாட்டுத் தலங்கள் இருந்திருக்குமா என்று கூட தெரியவில்லை. பல கோவில்களும், அங்குள்ள கடவுளும் இவர்களால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டதாகத் தானே உள்ளது. ஆன்மீகம் மட்டுமா, ஜோதிடம், மருத்துவம் என அவர்கள் சொல்லாத கருத்துக்கள் இல்லை. ஈடுபடாத துறைகளும் இல்லை. கடவுளைக் கண்டு தெளிந்த சித்தர்கள் குறித்த பல்வேறு விதமான மர்மம் நம் பகுதியில் உலாவிக் கொண்டுதானே உள்ளது. இத்தகைய சித்தர்கள் வாழும் திருத்தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று வர வேண்டும். வாருங்கள், சித்தர்கள் தவம் செய்த, இன்றளவும் அவர்கள் வாழ்ந்துவருவதாக நம்பப்படும் ஓர் மலையில் சித்தர்களைத் தேடிப் பயணிப்போம்.
சதுரகிரி மலை
சித்தர்கள் தவம் செய்த சதுரகிரிமலையில் 18 சித்தர்களும் இன்றளவும் உலாவும் இடம் என்று நம்பப்படுகிறது. அடர்ந்த காடுகள், அதிலேயோர் அருவி, சலசலக்கும் ஆறு என பச்சை பசுமையாகக் காட்சி தருகிறது சதுரகிரிமலை. இந்த மலைப்பகுதியில் ரம்மியமான சூழ்நிலையில் சுனை அருவி ஒன்றும் உள்ளது. சித்தர்கள் தவம் செய்த இடம் என்றாலே சில சுவாரசியங்களும், மர்மங்களும் அடங்கியிருக்கும் தானே. அப்படியொரு இடம்தான் இந்த மலை.
Deepak Kumaran
புத்துணர்ச்சியூட்டும் காட்டு வழி
பொதுவாக ஒரு சில கிலோ மீட்டர் கால்நடையாகச் சென்றாலே அலுத்துப்போய் விடுவோம். வயதானவர்கள் என்றால் சில மீட்டர் தூரம் வரையே. ஆனால், சதுரகிரி மலையில் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை, அதுவும் மலையின் மீது நடந்தால் கூட எவ்வித அலுப்பும் இன்று துவக்கத்தில் இருந்த புத்துணர்ச்சியோடே பயணித்து வரலாம் என்பது கூடுதல் சிறப்பு. இதற்குக் காரணம், மலையில் உள்ள பல அரிய மரங்களில் மூலிகை வாசனை காற்றில் கரைந்து வீசுவதாலேயே ஆகும்.
Kksens85
நாவல் ஊற்று
சதுரகிரி மலை ஏறும் வழியில் சில நீரோடைகளும், சிறிய அருவிகளும் உள்ளன. பயணத்தின் பாதி வழியில் நாவல் ஊற்று என்னும் வற்றாத சிறிய சுனை உள்ளது. தெளிந்த, சுவையான இந்த தண்ணீர் நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. மேலும், அபூர்வ சக்தி படைத்த மூலிகைகள், அதிசய மரங்கள், விலங்குகள் நிறைந்த வனம் தான் சதுரகிரி மலை.
I, Kbh3rd
சித்தர்கள் பூமி
பதினெட்டு சித்தர்களும் தவம் செய்த இடம், இப்பொழுதும் அரூபமாக உலவும் இடம் என்று சொல்லும் இடம் மலை உச்சி. சுமார் 10 கிலோ மீட்டர் நடந்தால் அப்பகுதியை அடைந்து விடலாம். அதுவரையிலான மலைப் பாதைகள் பல சுவாரசியம் நிறைந்ததாகவும், சித்தர்கள் குறித்தான பல தகவல்களை அழிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
Deepak Kumaran
ஒத்தையடி பாதை
மலையேறத் துவங்கியதில் இருந்து முதலில் நம் கண்ணில் தென்படுவது சந்தனமகாலிங்க கோவில். இதனருகே உள்ள ஒத்தையடி பாதை வழியே சென்றால் அடர்ந்த காட்டுக்குள் ஒரு காளி சிலை உள்ளது. பார்ப்பதற்கு பயத்தை தூண்டும் வகையில் உள்ள இந்த காளி அம்மன் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Deepak Kumaran
மரத்தில் தோன்றும் சித்தர்
காளி சிலை அமைந்துள் இடத்தின் அருகேயே உள்ள பெரிய மரம் ஒன்றில் சித்தர் ஒருவரின் உருவமும் தெரிவதைக் காணலாம். சித்தர்கள் சாவையே வென்று இந்த பகுதியில் வாழ்ந்து வருவதாக இங்கு வரும் பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களைத் தீர்க்கவல்லது. இந்த மலையேற்றத்தின்போது வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்று பட்டு நோய்கள் குணமாவதாக கூறுகின்றனர்.
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
தவசி குகை
சந்தன மகாலிங்கம் கோவிலில் இருந்து பார்த்தால் தவசிப் பாறை சிறியதாகத் தெரியும். தவசிப் பாறைக்கு கீழே தவசி குகை இருக்கிறது. இதில் சித்தர்கள் கண்ணுக்கு தெரியாமல் சில சமயங்களில் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. இரண்டடி உயரம் கொண்ட குகை என்பதால் பத்தடி தூரத்துக்கு தவழ்ந்துதான் போக வேண்டும். அதைக் கடந்தால் 5 அடி தூரத்துக்கு அமர்ந்தபடி முழங்காலிட்டுப் போகலாம். அதையும் கடந்தால் நின்றபடி நடக்க முடியும். தவசிப்பாறையை சென்ற பின் கீழே இறங்கும் மற்றொரு வழியில் வந்தால் பெரிய மகாலிங்கம், வெள்ளை விநாயகர், மாவூத்து போன்றவற்றை வணங்கி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்து சேரலாம்.
Deepak Kumaran
பெரிய மகாலிங்கம்
பெரிய மகாலிங்கம் என்பது மிகப் பெரிய பாறையில் இயற்கையாக உருவான லிங்கமாகும். சிவலிங்கம் போலவே காட்சி தருவதால், பெரிய மகாலிங்கம் என்ற திருநாமத்தைப் பெற்றுள்ளது. இந்த பாறை கீழே விழுந்துவிடாமல் மரத்தின் வேர்கள் சடை போல் பின்பக்கம் பிடித்து பாதுகாப்பது அதிசயத்தின் உச்சம்.
Deepak Kumaran
சந்தன மயம்
சதுரகிரி மலையில் உள்ள கோவிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என அனைத்துக் கடவுள்களுமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் தனியே சிலையும் உள்ளது. இங்கே தரிசனத்தை முடித்துவிட்டு மலைப் பாதை வழியாக ஒரு கிலோ மீட்டர் பயணித்தால் வனகாளி கோவிலை அடையலாம்.
Srithern
மதிமயக்கும் வனம்
இந்த மலைப் பகுதியிலேயே நிறைய அழகும், அதே சமயம் ஆபத்தும் நிறைந்த இடம் எதுவென்றால் அது மதிமயக்கி வனம் தான். மலையில் மிக அடர்ந்த பகுதியில் உள்ள இந்த வனப்பகுதிக்குள் உள்ளே சென்றவர்கள் யாரும் வெளியே வர முடியாது. அவர்கள் தங்களது சுயநினைவை இழந்து காட்டுக்ளேயே உலா வருவர் என்கின்றனர் விசயம் அறிந்த ஊர்ப் பெரியவர்கள்.
Deepak Kumaran
எப்படிச் செல்வது ?
மதுரையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சதுரகிரி மலை. மதுரையில் இருந்து தென்காசி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி, மகாராஜபுரம் கடந்தால் சதுரகிரியின் அடிவாரமான தாணிபாறையை அடையலாம். சதுரகிரி மலைக்கு மதுரை சாப்டூர் அருகிலுள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகிலுள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியிலிருந்தும் எளிதாகச் சதுரகிரிக்குச் செல்லலாம்.