ஒடிசாவின் வரலாற்றுச் சுவடுகளை இன்றும் அந்த பொழிவு மாறாமல் பாதுகாக்கப்பட்ட நகரம் ஜெய்பூர். மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள இது அடர்ந்த பசுமையான மலைக் காடுகளையும், பொட்டும் அருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிழக்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்நகரத்தின் மூன்று திசைகளிலும் அரக்கு மலை எனும் மலை அரனாக அமைந்துள்ளது. வருடத்தின் எந்த மாதம் சென்றாலும் குளுகுளு காலநிலையைக் கொண்டுள்ளதாலேயே உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. இங்குள்ள தேவ்மாலி மலைப் பள்ளத்தாக்கு, சுனபேதா காட்டுயிர் சரகம், கோலாப் ஆறு பிரசித்தமான சுற்றுலாத் தலங்களாகும். இவை அனைத்திற்கும் மேலாக ஷக்தி, பகரா மற்றும் துதுமா என்ற மூன்று நீர்வீழ்ச்சிகள் ஜெய்பூரை நோக்கி பயணிகளை கவர்ந்திழுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி அந்த நீர்வீழ்ச்சிகளில் என்னதான் உள்ளது, எங்கே உள்ளது என காணலாம்.
ஷக்தி நீர்வீழ்ச்சி
ஷக்தி நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி ஆங்கில எழுத்தான ‘S' வடிவத்தில் காட்சியளிக்கிறது. மலை மீதிருந்து 20 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி விழும் அழகே தனிதான். அடர்ந்த பசுமையான காடுகள் மற்றும் மலைப் பகுதிகளால் சூழப்பட்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிப் பகுதி கூடாரம் அமைத்து தங்கும் சுற்றுலாவாசிகளை வெகுவாகக் கவரக்கூடியது. குறிப்பாக, சாகச விரும்பிகள் இந்த மலைப்பகுதியில் டிரக்கிங் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும் வழக்கம். நீர்வீழ்ச்சி மட்டுமல்லாமல், அடர்ந்த வனப்பகுதி, பறவைகள் கீச்செலி போன்றவற்றுடன் ஒரு இயற்கையின் சொர்க்கமாக இந்த மலைப்பிரதேசம் கவர்ந்துவருகிறது. தற்போது இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியில் பல தங்கும் விடுதிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளதால் ஹனிமூன், பிக்னிக் வருவோர் தங்களது காதலுடன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு பல நினைவுகளை பெற்றுச் செல்லலாம்.
Lockalbot
பாகரா நீர்வீழ்ச்சி
பாகரா நீர்வீழ்ச்சி ஜெய்பூரில் உள்ள முக்கியமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. நகரத்திற்கு அருகில் 6 மைல் தூரத்தில் உள்ள கொண்டகுடா இடத்திலிருந்து மண் சாலைகள் வழியாக 3 மைல் பயணம் செய்தால் பாகரா நீர்வீழ்ச்சியை அடையலாம். இந்த நீர்வீழ்ச்சியில் மூன்று வீழ்ச்சிகள் 30 அடி உயரத்திலிருந்து விழுகின்றன. பயணிகளின் வசதிக்காக இந்த நீர்வீழ்ச்சியின் அருகிலேயே ஒரு ஓய்வு விடுதியும் உள்ளது. இங்கு கவிழ்ந்திருக்கும் இயற்கை எழில் அம்சங்களை ரசிப்பதற்காக உள்ளூர் மக்கள் இப்பகுதிக்கு பிக்னிக் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வர். இந்த 30 அடி உயர நீர்வீழ்ச்சியில் பால் போன்ற வெண்ணிறத்தில் வழியும் பிரவாகத்தின் அழகு நிச்சயம் உங்களை சொக்க வைத்துவிடும். ஜெய்பூர் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் அனைவருமே இந்த நீர்வீழ்ச்சிக்கு தவறாது சென்றுவரலாம். ஜெய்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு செல்ல பேருந்து வசதிகள், டாக்சி மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளது.
Armineaghayan
துதுமா நீர்வீழ்ச்சி
ஜெய்பூரில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த துதுமா நீர்வீழ்ச்சி மச்சகுண்ட் என்னும் ஆறின்மூலம் உருவாகிறது. தென்னிந்தியாவிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எனும் பெருமையையும் இது கொண்டுள்ளது. 157 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி வீழ்கிறது.
சைதன்ய பிரபு இந்த அருவிக்கு பயணம் செய்ததால் இந்த மச்சகுண்ட் ஆறு மற்றும் அருவி ஆன்மீகத் தலமாகவும் விளங்குகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் ஒருபகுதி ஒடிஷாவிலும் மற்றொரு பகுதி ஆந்திர மாநிலப் பகுதியிலும் வீழ்வதால் இது இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Bitan.ari
எப்படி செல்லலாம் ?
ஜெய்பூருக்கு அருகில் உள்ள விசாகப்பட்டிணத்தில் விமான நிலையம் வழியாக இங்கு வரலாம். இது 237 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து பேருந்து மற்றும் ரயில் பயணம் மூலமாக அரக்கு மலைகளின் அழகை ரசித்தபடியே பயணிகள் ஜெய்பூரை வந்தடையலாம்.
Sranjanm2002