ஆகம என்ற மூன்று எழுத்துக்களுக்கும் தனித்தனியே பொருள் உள்ளது. ஆ-கதம், கதம், மதம் என மூன்று சொற்களின் முதல் எழுத்தக்களின் சேர்க்கையே இந்த ஆகம என்ற சொல்லாகும். ஆகமம் என்றால் வந்தது என பொருள். அதாவது, சிவனுடைய முகத்தில் இருந்து உபதேசமாக வந்தது ஆகும். கதம் என்றால் சென்றடைந்தது என பொருள். சிவபெருமான் உபதேசிக்க உமாதேவி கேட்டது என பொருளாகும். இந்து சமயங்களின் பிரிவுகளான சைவம், வைணவத்தின் மதக்கோட்பாடுகள், கோவில் அமைப்பு, வழிபாடு இவை அனைத்துமே இந்த ஆகம விதிப்படியே பின்பற்றப்படுகின்றன. இத்தகைய ஆகம விதிகளின் படி ஒரு கோவிலில் ஈஸ்வரனையே 28 அடி அளவிற்கு கருவறையில் புதைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
எங்கே உள்ளது ?
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் போற்றப்படுகிறார்.
Dharanees
தலஅமைப்பு
சுக்ரீஸ்வரர் கோவிலில் மூலவராக சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுற்றியுள்ள பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர் என தனித்தனியே சன்னிதிகள் உள்ளது. மேலும், வேறெந்த சிவன் கோவில்களிலும் காணக்கிடைக்காத சிறப்பாக இக்கோவிலின் கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Senthilvael
பஞ்சலிங்கங்க கோவில்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.
Benjamín Preciado
நான்கு யுகங்களைக் கடந்த கோவில்
இக்கோவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை வல்லுனர்களால் கூறப்படுகிறது. இருப்பினும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும் வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் இந்தக் கோவிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
PRADHEEP J V
கோவில் மேல் கோவில்
1952-ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Ssriram mt
மர்மம் நிறைந்த குகை
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்தபடியாக, சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக இந்த சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன. அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
Ilasun
தலத்தின் புராணக் கதைகள்
ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது மாறுவேடத்தில் வந்த சிவபெருமான் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். பின்னர் அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூட்டைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூட்டைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூட்டைகள் மிளகு மூட்டைகளாக மாறின. இதனாலேயே இத்தல ஈஷ்வரன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களால் மிளகு ஈஸ்வரரே என்று அழைக்கப்படுகிறார். மேலும், இக்கோவிலில் வந்து மிளகு பூஜை செய்தால் வேண்டிய காரியத்திற்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Nandhinikandhasamy
இரண்டு நந்தி
இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியவில்லை. மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும், மற்றது பின்னால்தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
Nandhinikandhasamy
மருகு நீக்கும் மிளகீசன்
சுக்ரீஸ்வரர் கோவில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது. இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் மரு உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் மருக்கள் மறைந்துவிடும்.
Benjamín Preciado
திருவிழா
ஆனி மாத அனுஷம் நட்சத்திரத்தில் இத்தலத்தில் கும்பாபிஷேக விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது 1008 திருவிளக்கு பூஜை பிரசிதிபெற்றது. புரட்டாசியில் நவராத்திரி விழா, கார்த்தினை, ஆருத்ரா தரிசனம், தை பவுர்ணமியில் முருகனுக்கு தைப்பூச விழா என வருடம் முழுவதும் இக்கோவில் திருவிழாக் கோலமாகத்தான் இருக்கும்.
Jothi Balaji
நடை திறப்பு
அருள்மிகு சுக்ரீஸ்வரர் கோவில் நடை காலை 7.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். விசேஷ நாட்களில் இதில் மாறுபாடு நிலவும். பகல் 1 மணி அளவில் நடைபெறும் உச்சி பூஜை வழிபாடு மிகவும் பிரசிதிபெற்றது.
KARTY JazZ
எப்படிச் செல்வது ?
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் பயணித்தால் சர்க்கார் பெரியபாளையம் முன்னதாக இடதுபுரம் இக்கோவில் அமைந்துள்ளது. திருப்பூர், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், அவிநாசி, கோயம்புத்தூர் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து இக்கோவிலை அடைய பேருந்துவசதிகள் உள்ளது.