கர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் பரவியுள்ளன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் விரும்பிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது அளவுகடந்து காதல் கொண்டவர்களுக்கும் பிரத்யேகமாக எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் கர்நாடகாவை சுற்றி அமைந்துள்ளன. இதில், கர்நாடகாவின் காப்பித் தோட்டமான சிக்மகளூர் மாவட்டமும், அம்மாவட்டத்தின் அழகிய அருவிகளுக்கு சொந்தமான கெம்மனகுண்டியும், பசுமையான குதுரேமுக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள். கொடகு மாவட்டம் அதன் பச்சை புல்வெளிகளை கொண்ட கவின் கொஞ்சும் பள்ளத்தாக்குகளால் இந்தியாவில் பிறபகுதிகளில் இருந்தும் பயணிகளை ஈர்க்கிறது. இந்த எழில் நகரம் கர்நாடகாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. சரி, இந்த கொடகு மாவட்டத்தில் எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், அவை அனைத்திற்கும் முதன்மையாக இருக்கும் தடியாண்டமோல் மலைப் பிரதேசத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
தடியாண்டமோல் சிகரம்
கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்திலேயே மிக உயரமான சிகரம் இந்த தடியாண்டமோல் சிகரமாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் 5724 அடி உயரத்தில் இந்த சிகரம் அமைந்துள்ளது. இது மலை ஏற்ற சாகச விரும்பிகளுக்கும் மற்றும் இயற்கை ரசிகர்களுக்கும் மிகவும் விருப்பமான இடமாக உள்ளது. மேலும் இது கர்நாடக மாநிலத்திலேயே மூன்றாவது உயரமான மலைச்சிகரமாகவும் உள்ளது. தடியண்டமோல் எனும் இந்த பெயருக்கு உயரமான அகலமான மலை என்பது பொருளாகும். இந்த சிகரத்தில் உள்ள நலக்நாட் கோட்டை ஆங்கிலேயர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் திரிகோண பூகோள அளவைத்திட்டத்தில் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. தடியண்டமோல் சிகரத்தில் சோலைக்காடுகள் அல்லது வெப்பப்பிரதேச ஈரக்காடுகள் நிறைந்து கண்ணுக்கினிய காட்சிகளை பயணிகளுக்கு அளிக்கின்றன. தடியண்டமோல் சிகரத்தின் இயற்கை வனப்பை கண்டு ரசிக்க பயணிகள் அவசியம் இங்கு சுற்றுலாச் செல்லலாம்.
Shyamal
தடியாண்டமோல் சிகரம்
கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து எளிதாக அடையும் வகையில் உள்ள தடியாண்டமோல் மலையின் பெயர் மலையாள மொழியிலிருந்து பிறந்ததாகும். இதற்கு பெரிய மலை என்பது பொருள். ஏறுவதற்கு கடினமானதாக இருந்தாலும் உச்சியியை அடைந்ததும் காணக்கிடைக்கும் காட்சி எல்லா சிரமங்களையும் மறக்க வைத்து விடும் என்பது உண்மை. மலையடிவாரத்தில் உள்ள நலக்நாட் அரண்மனை ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். இது தொட்ட வீரராஜேந்திராவால் 1792ம் ஆண்டில் தன் படையினர் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ளது. சிகரத்தை அடைவதற்கு சில கிலோ மீட்டருக்கு முன்பாக பயணிகள் பாடி இக்குதப்பா எனும் கோவிலில் ஓய்வெடுக்கலாம். இங்கிருந்து 321 கிலோ மீட்டர் தூரத்தில் பெங்களூர் விமான நிலையமும், 263 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூர் ரயில் நிலையமும் அமைந்துள்ளது.
L. Shyamal
அருகில் உள்ள சுற்றலாத் தலங்கள்
தடியாண்டமோல் மலைப்பிரதேசம் செல்லத் திட்டமிட்டீர்கள் என்றால் கூடவே இதன் அருகில் இருக்கும் பாடி இக்குதப்பா கோவில், விராஜ்பேட், நலக்நாட் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்திற்கும் சென்று வரலாம். இவை அனைத்துமே தடியாண்டமோலில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது.
Gaurav Vasare
பாடி இக்குதப்பா கோவில்
இக்குதப்பா எனும் தெய்வத்துக்காக அமைந்துள்ள இந்த பாடி இக்குதப்பா கோவில் கூர்க் பிரதேசத்தில் கக்கபே பகுதியில் வசிக்கும் கொடவா இன மக்களின் பழமையான கோவிலாகும். லிங்கராஜேந்திரா மன்னரால் 1810-ம் ஆண்டு இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இக்குதப்பா, இப்பிரதேசத்தின் மழைக்கடவுளாகவும் வணங்கப்படுகிறது. மழை வேண்டி இங்குள்ள விவசாயிகள் இக்குத்தப்பா கடவுளுக்கு காணிக்கைகள் வழங்கி பூஜிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். துலாபார காணிக்கை முறையும் இந்த கோவிலில் பின்பற்றப்படுகிறது. அதாவது பக்தரின் எடைக்கு எடை தேங்காய்கள், பழங்கள், அரிசி போன்ற பொருட்கள் காணிக்கையாய் இங்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இங்குள்ள மக்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக இந்த கோவில் விளங்குகிறது. தடியண்டமோல் மலைஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் இந்த பாடி இக்குதப்பா கோவிலை தரிசிக்க வேண்டும்.
Aneezone
விராஜ்பேட்
கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட் நகரம் இங்குள்ள காபி மற்றும் வாசனை பணப்பயிர்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரத்தில் உள்ள ஐயப்பன் கோவில் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இக்கோவிலுக்கு வருடந்தோறும் லட்சக் கணக்கான எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். மலேதிரிக்கே மலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கீழே பார்க்கையில் நகரத்தின் மொத்த காட்சியும் அழகாய் கண்முன் விரிகிறது. விராஜ்பேட் நகரத்திற்கு வருகை தரும் பயணிகள் நகரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ககோட்டுபரம்பு எனும் அரை உருளைவடிவில் காட்சியளிக்கும் மலைக்கும் சிற்றுலா செல்லலாம்.
L. Shyamal
v
கொடகு மன்னரான தொட்ட ராஜ வீரேந்திராவால் 1792 - 1794-ஆம் ஆண்டுகளில் இந்த நலக்நாட் அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இது தடியண்டமோல் சிகரத்தின் அடிவாரத்தில் யவகபாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் கர்நாடகாவில் கொடகு மாவட்டத்தில் உள்ளது. ஒரு வேட்டை மாளிகையாக கட்டப்பட்டு பின்னர் கொடகு நாட்டின் கடைசி மன்னரான சிக்க வீர ராஜேந்திராவின் பாதுகாப்பு மாளிகையாகவும் இது பயன்பட்டிருக்கிறது. இது, இரண்டு தளங்களுடன் கேரள பாணியில் ஓட்டுக்கூரை அமைப்புடன் பாரம்பரியத் தோற்றத்துடன் இந்த அரண்மனை காட்சியளிக்கின்றது. இதனுள் அமைந்துள்ள 12 தூண்களில் கலையம்ச வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. மலை ஏறிகள் இந்த அரண்மனையில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது தற்சமயம் கர்நாடக மாநில தொல்லியல் அருங்காட்சியகத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. நேரம் இருப்பின் தடியண்டமோல் மலைப் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த அரண்மனையையும் கண்டு ரசிக்கலாம்.
Shashidhara halady