சாபங்கள், பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம் என 13 வகைகளாக வகைபடுகிறது. இதில், முதலாவதாக உள்ள பெண் சாபமே மிகவும் வீரியம் மிக்கதாக, வாழ்நாளையே முடக்கிவிடக் கூடியதாக வரையருக்கப்படுகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த வம்சாமுமே அழிந்துவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. இத்தகைய ஒரு பெண்ணின் சாபத்தால் ஒரு நகரமே அழிந்து தற்போது மண்ணில் புதையுண்டு கிடக்கும் அவலநிலையும், அதற்கு பின்னால் இருக்கும் மர்மங்களும் குறித்து தெரிந்துகொள்வோம்.
புதைந்த நகரம்
ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோவில்களைக்கொண்டு சிறப்பான நகரமாக விளங்கியது தலக்காடு. இந்தப் பிரதேச ராணியான அலமேலு என்பவரின் சாபத்தால் தலக்காடு நகரம் மண்ணில் புதையுண்டு போனதாக வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் ஐந்து புகழ் வாய்ந்த சிவன் கோவில்களை கொண்டிருந்த இந்த தலக்காடு நகரம் முதலில் கங்க வம்சத்தினரின் கட்டுப்பாட்டிலும், பின் சோழர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. பின்னர் ஹொய்சள மன்னர் விஷ்ணுவர்த்தனால் சோழர்கள் வெல்லப்பட்டனர். இறுதியில் இந்த நகரம் விஜயநகர அரசர்களால் ஆளப்பட்டு கடைசியாக மைசூர் உடையார் வம்ச ஆட்சியாளர்கள் வசம் சென்றது.
wikimedia
சாபமிட்டு தற்கொலை செய்த ராணி
மைசூர் ராஜா தலக்காடு பகுதியை நோக்கி படையெடுத்தபோது ராணி அலமேலு தன் நகைகளை காவிரியில் வீசிவிட்டு தானும் அந்த நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்படி அவர் இறப்பதற்குமுன் ஒரு சாபத்தையும் விதித்துவிட்டு இறந்தார். அதாவது எதிரி வசம் சென்ற தலக்காடு நகரம் மண் மூடிப்போகும் என்றும், மைசூர் மன்னர் வம்சம் தலைமுடி இழந்து போவார்கள் என்றும் அவர் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே 16ம் நூற்றாண்டில் பழைய தலக்காடு நகரம் மண் மூடிப்போனதாக அறியப்படுகிறது.
Haneeshkm
தலக்காட்டு அடையாளம்
தலக்காடு நகரம் இங்குள்ள ஐந்து முக்கியமான கோவில்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. வைத்யநாதேஸ்வரர் கோவில், பாதாளேஷ்வரர் கோவில், மருளேஷ்வரர் கோவில், அர்கேஷ்வரர் கோவில் மற்றும் மல்லிகார்ஜுனா கோவில் என்பவையே அவை. இந்த அனைத்து கோவில்களும் மண் மூடியே காணப்படுகின்றன. இவை தவிர கீர்த்திநாராயணா கோவில் எனப்படும் ஒரு விஷ்ணு கோவிலும் ஐந்து சிவன் கோவில்கள் மத்தியில் காணப்படுகிறது.
HoysalaPhotos
12 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே
இந்த நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் பஞ்சலிங்க தரிசனம் எனும் திருவிழா மிகவும் பிரசிதிபெற்றது. கடைசி பஞ்சலிங்க தரிசனம் 2009ம் ஆண்டு நடந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி நாளில் குஹயோக நட்சத்திரமும் விசாக நட்சத்திரமும் சேரும் நாளிலேயே இந்த தரிசனம் நடைபெறும்.
Dineshkannambadi
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
திருமாகூடல் நர்சிபூர்
தலக்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள மற்றொரு முக்கியமான ஆன்மீக திருத்தலத்திற்கும் சென்ற வர திட்டமிட்டால் திருமாகூடல் நர்சிபூருக்கும் பயணம் செய்யலாம். இது தலக்காட்டிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு பிரம்மாண்டமான கோபுரம் மற்றும் நான்கு தூண்களாலான மண்டபம் போன்றவை இந்த கோவிலில் காணப்படுகின்றன. வருடாந்தரமாக நடைபெறும் தேர்த் திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர். கோவில் சார்ந்த ஆன்மீக அம்சங்களைத்தவிர தொல்லியல் அம்சங்களுக்காகவும் இந்த திருமாகூடல் தலம் பிரசித்தி பெற்றுள்ளது. புதுக்கற்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள் பல இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. சமாதிப்படுகை எச்சங்கள், மண்பாண்டங்கள், சித்திரவரைபாட்டு பொருட்கள், கற்சின்னங்கள், உலோகக் கருவிகள், மணிகள், வளையல்கள், மிருகங்களின் எலும்புக்கூடுகள், மனித எலும்புக்கூடுகள் மற்றும் மரப்பொருட்களின் படிவங்கள் போன்றவை இங்கு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Nvvchar
வைத்யநாதேஸ்வரா கோவில்
தலக்காடு தலத்துக்கு பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பக்தர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இடம் இந்த வைத்யநாதேஸ்வரா கோவில். இத்தலத்தில் காணப்படும் மனோன்மணி தெய்வம், முருகன் மற்றும் கணபதி சிலைகள் பலநூறு வருடங்களுக்கு முற்பட்டது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மண்டபத்தில் துர்க்கை, சிரத்தாம்பிகை, நடராஜர், பத்ரகாளி மற்றும் காளிகாம்பாள் போன்றோரின் சிலைகளையும் பார்க்கலாம். மண்ணில் புதைந்த நிலையில் காணப்படும் இந்த கோவில் சோழர்களின் ஆட்சியின்போது 14ம் நூற்றாண்டில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. நவரங்கா எனப்படும் பிரதான வாயிலில் இருபுறமும் பெரிய அளவிலான துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.
Shailesh.patil
பிரம்மாண்ட சிவலிங்கம்
கோவிலின் கிழக்கு வாயிலானது நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இங்கு கருவறையில் ஒரு பிரம்மாண்டமான சிவலிங்கம் அமைந்துள்ளது. இதன் பின் புறத்தில் சிவபெருமானின் திருமுகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வதி, விஷ்ணு, அலமேலுமங்கா, ருத்ராக்ஷங்களுடன் காட்சியளிக்கும் சிவலிங்கம், காளிகாம்பாள் மற்றும் கணேசா போன்ற சிலைகளும் கருவறை சிவலிங்கத்துக்கு அருகில் காணப்படுகின்றன. கோவில் பிரகாரத்தில் பல வடிவங்களில் அமைந்த சிவலிங்கங்களை பார்க்க முடிகிறது. தலக்காடு தலத்தின் ஐந்து முக்கியமான கோவில்களில் ஒன்றான இந்த வைத்யநாதேஸ்வரர் கோவிலுக்கு பஞ்சலிங்க தரிசனத் திருநாளின்போது ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
Nvvchar
மருளேஷ்வரா கோவில்
ஒரு பெரிய சிவலிங்கம் அமைந்துள்ள இந்த மருளேஷ்வர் கோவில் கங்க மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இங்குள்ள பெரிய சிவலிங்கம் பிரம்மாவால் அனுக்கிரகிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பஞ்சலிங்க தரிசனத்தின் போது பக்தர்கள் பயணம் செய்யும் ஐந்து கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த மருளேஷ்வரர் கோவிலில் திருமால், வீரபத்ரர், மகேஷ்வரர், சண்முகர், அம்பிகை, நவகிரகங்கள், கணபதி மற்றும் சூரியா போன்றோர் காட்சியளிக்கின்றனர். விஷ்ணுவுக்கான கோவிலான கீர்த்தி நாராயணா கோவிலுக்கு அருகிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது.
Dineshkannambadi
கீர்த்தி நாராயணா கோவில்
தலக்காடு பகுதிக்கு வருகை தரும் பயணிகள் இங்கு 1911ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்ட கீர்த்தி நாராயணா கோவிலைக் காணலாம். இது விஷ்ணுவர்த்தன் எனும் ஹொய்சள மன்னரால் கட்டப்பட்டு கீர்த்தி நாராயணா மற்றும் ரங்கநாதர் சிலைகள் கோவிலுள் அவராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆதியில் சுந்தரவல்லி தாயார் சன்னதியும் இந்த கோவிலில் இருந்துள்ளது. அது பின்னர் நவரங்க மண்டபமாக மாற்றப்பட்டு கீர்த்தி நாராயணாவின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவில் வளாகத்தில் நம்மாழ்வார், ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகரின் சிலைகளும் காணப்படுகின்றன.
Dineshkannambadi
எப்படிச் செல்வது ?
மைசூர் மாவட்டத்தில் உள்ள தலக்காடு நகரம் மைசூரிலிருந்து 49 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 137 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு முக்கியமான பெருநகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால் தலக்காடுவிற்கு பயணம் செய்வது எளிமையானது.