கோவில் என்றாலே ஆன்மீகமும், கொஞ்சம் அதிசயங்களும் நிகழும் இடமாகவே உள்ளது. குறிப்பாக நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலும் எந்த அளவிற்குச் சிறப்பு பெற்றதாக உள்ளதோ அந்த அளவிற்கு ஏதேனும் ஒரு மர்ம நிகழ்வை, பின்னணியைக் கொண்டதாகவே உள்ளது. நமது தொகுப்பிலேயே இதுபோன்ற பல அதிர்ச்சியூட்டும் கோவில் நிகழ்வுகள் குறித்து பார்த்திருப்போம். அந்தப் பட்டியலில் இன்று நாம் பயணம் செய்யப் போவது நிறம் மாறும் ஓர் சிவ தலத்தை நோக்கித் தான். தென்னகத்தில் இதுபோன்ற அரிய நிகழ்வுகள் சில தலங்களில் மட்டுமே நிகழுந்திருந்தாலும், அவற்றை மிஞ்சும் வகையிலான இக்கோவிலில் அப்படி என்னதான் உள்ளது என பார்க்கலாம் வாங்க.
தல சிறப்பு
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது 14-வது சிவதலம். திருவள்ளூரில் அமைந்துள்ள இக்கோவிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். இக்கோவில் அமைந்துள்ள பகுதியில் மழை வருகையில் சிவலிங்கத்தின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் முன் சிவப்பு நிறமாகவும் மாறிமாறிக் காட்சியளிக்கிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் ஆகும்.
Shashankshanker
கோவில் வரலாறு
அசுரர்களிடையேயான போரின் போது அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் சிவபெருமான் விநாயகரை நினைக்காமல் சென்று விட்டார். அவருடன் சென்ற தேவர்களும், சிவன் உள்ளபோது என்ன கவலை என விநாயகரை வழிபடத் தவறிவிட்டனர். இதனால் கோபமடைந்த விநாயகர் சிவனின் தேர்ச்சக்கரத்தின் அச்சை உடைத்து விட்டார். இது விநாயகரின் செயல்தான் என அறிந்த சிவன், விநாயகரை மனதில் நினைத்துச் செல்லும் போர் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். விநாயகரும் தேர் அச்சை சரிசெய்தார். தேரின் ஏர்க்கால் பதிந்த கூரத்திலேயே சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடம் என்பதால் இந்த ஊர் கூரம் என்று பின் கூவம் என தற்போது அழைக்கப்படுகிறது.
Bernard Gagnon
தல அமைப்பு
ராஜகோபுரத்திற்கு நேர் எதிரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜருக்கு தனிச் சன்னதி உள்ளது. மூலவரின் வலது புறத்தில் அம்பாள் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறை விமானம் கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக உள்ளது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் காட்சியளிக்கிறார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக உள்ளனர்.
Meisam
காயம்பட்ட சிவபெருமான்
மூலவரின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால் லிங்கத்தைத் தொட்டு பூஜை நடப்பதில்லை. தலைக்கு மேல் பச்சை கற்பூரம் மட்டும் தூவி, பாலபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தலத்தில் சிவபெருமான் தவக் கோலத்தில் இருப்பதால் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் தவளைகள் வாழ்வதில்லை. தவளையின் சத்தம் சிவனின் தவத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் தவளைகள் வசிப்பதில்லை என நம்பிக்கை உள்ளது.
Ssriram mt
வழிபாடு
இத்தலத்தின் மூலவரான திருபுராந்தகரிடம் வேண்டிக்கொண்டால் உடலில் ஏற்பட்டுள்ள நோய்கள் விலகும். குடும்பத்தில் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள், துன்பங்கள் விலகும். புதிதாகச் சொத்து வாங்குவோர் இத்தலத்துச் சிவனை வணங்கிச் சென்றால் சிறப்பாக வேலைகள் முடியும். சிவனின் தேர்ச்சக்கரத்தை முறித்த விநாயகர் இத்தலத்தில் அச்சிறுத்த விநாயகர் என்ற திருநாமத்துடன் பிரகாரத்தில் உள்ளார். தொழில் தொடங்குவோர், தேர்வுக்குச் செல்வோர் இவரை வழிபட்டுச் செல்வது சிறப்பு.
Shashankshanker
நேர்த்திக்கடன்
வேண்டிய காரியங்கள் நிறைவேறியதும் மூலவருக்கும், அம்பாளுக்கும் புது ஆடைகள் காணிக்கையாக படைத்து, சிறப்பு அபிஷேக பூஜை செய்து வழிபட வேண்டும். அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
Meisam
நடை திறப்பு
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது.
Meisam
திருவிழா
இக்கோவிலில் சித்திரை மாதத்தில் பத்து நாட்களுக்குப் பிரம்மோற்சவம் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அதேப்போன்று ஆடி மாதத்தில் அம்மனுக்கு பத்து நாட்கள் பூப்பாவாடைத் திருவிழாவும், சிவராத்திரை, கார்த்திகை உள்ளிட்ட விழாவும் இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.
SukanyaNagarajan
எப்படிச் செல்வது ?
திருவள்ளூர் மாநகரில் இருந்து தாமரைப்பாக்கம், திருபசூர், கடம்பாத்தூர் வழியாக சுமார் 44.5 கிலோ மீட்டர் பயணித்தால் கூவத்தில் அமைந்துள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோவிலை அடையலாம். அரக்கோணத்தில் இருந்து மாநில நெடுஞ்சாலை 58-யில் தக்கோலம், காலம்பாக்கம், பேரம்பாக்கம் வழியாக சென்றாலும் கூவத்தை வந்தடையலாம். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் என சுற்றுவட்டாரத்தில் இருந்து இக்கோவிலைச் சென்றடைய பேருந்து வசதிகள் எளிய முறையில் இணைக்கப்பட்டுள்ளது.