கல்சுபை மலை ஷயாத்ரி மலைத்தொடரில் அமைந்திருக்கும் ஒரு மலைச்சிகரமாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 5400 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் இருக்கும் மிகப்பெரிய மலைச்சிகரமாக இது இருப்பதால் 'மகாராஷ்டிராவின் எவரஸ்ட்' என்று இந்த சிகரம் அழைக்கப்படுகிறது.
வருடம் முழுக்கவும் மலையேற்றம் செய்பவர்கள், கல்சுபை மலையில் இருக்கும் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள வனவிலங்கு சரணாலயத்திற்கு வரும் ஆர்வலர்கள் என மகாராஷ்டிராவின் முக்கியமான சுற்றுலாத்தலமாக கல்சுபை மலை திகழ்கிறது.
எப்படி அடைவது?:
கல்சுபை மலை மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இருந்து 180கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மும்பை-நாசிக் சாலையில் இகத்புரி வழியாக பயணித்து பாரி என்ற கிராமத்தை அடைய வேண்டும். பாரி கிராமத்தில் இருந்து தான் கல்சுபை மலைக்கான மலையேற்றப்பயணம் துவங்குகிறது.
கல்சுபை மலையேற்றம்:
கல்சுபை மலையில் மலையேற்றம் செய்பவர்கள் பொதுவாக பாரி கிராமத்தில் இருந்து தங்கள் பயணத்தை துவங்குகின்றனர். இந்த கிராமத்திலிருந்து மலைஎற்றத்தை துவங்கி சில கி.மீ தொலைவு சென்ற பிறகு ஒரு அனுமன் கோயில் வருகிறது. அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் பயணத்தை துவங்கலாம்.
இந்த மலையேற்றப்பாதை சுலபமான ஒன்றுதான் என்றாலும் சில இடங்களில் மிகவும் ஆபத்தான ஏற்றங்கள் இருக்கின்றன. அங்கே இப்போது சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக இரும்பு ஏணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பருவமழை நேரத்தில் இங்குள்ள பறவைகள் வழுக்கும் எனவே அந்நேரங்களில் மலையேற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது.
கல்சுபை கோயில்:
பல வருடங்களுக்கு முன்பு இந்த மலைக்கு அருகில் உள்ள பண்ணையில் கல்சுபை என்ற பெண் வாழ்ந்துவந்ததாகவும், அந்த பண்ணையாரின் கொடுமை தாங்க முடியாமல் இந்த மலைக்கு தப்பித்து வந்தபோது மாயமாக மறைந்துவிட்டால் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் பணிப்பெண் நினைவாகவே இங்கே ஒரு கோயில் எழுப்பப்பட்டு ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பூசை நடக்கிறது.
மும்பையில் இருந்து வார விடுமுறைக்கு சுற்றுலா செல்ல கல்சுபை மலை ஒரு அற்புதமான சுற்றுலாத்தலமாகும்.