சம்பனேர், குஜராத் மாநிலத்தில் இருக்கும் பாழடைந்த பழமையான நகரமாகும். இது ஒரு காலத்தில் குஜராத்தின் தலைநகரமாக விளங்கியிருக்கிறது. வதோதரா நகரில் இருந்து 47கி.மீ தொலைவில் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ளது.
சவ்தா வம்சத்தின் முக்கியமான அரசராக இருந்த வனராஜ் சவ்தா என்பவரால் 8ஆம் நூற்றாண்டில் சம்பனேர் நகரம் நிறுவப்பட்டிருக்கிறது. 15ஆம் நூற்றாண்டில் சம்பநேர் நகருக்கு அருகிலிருக்கும் பவகத் நகரை கஹிசி சவுஹான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்துவந்திருக்கின்றனர். 1482ஆம் ஆண்டு சம்பனேர் நகரை கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து குஜராத்தின் சுல்தானான மஹ்முத் பேகதா வெற்றிபெறுகிறார்.
அப்போதைய சம்பநேரின் அரசரான ஜெயசிம்ஹா பவகத் நகரில் தஞ்சம் புகுந்தார். பின்னர் 20 மாதங்கள் தொடர் முற்றுகைக்கு பின்னர் பவகத் நகரை குஜராத் சுல்தான் மஹ்முத் பேகதா கைப்பற்றினார்.
அதன்பிறகு சம்பனேர் நகரை முஹமெதாபாத் என்று பெயர் மாற்றிய மஹ்முத் பேகதா 23 வருடங்கள் அந்நகரில் தங்கி சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறார். பின்னர் காலப்போக்கில் இங்கு வசித்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிடவே சம்பனேர் நகரம் பாழடைந்து போயிருக்கிறது.
இந்த நகரம் இன்றும் கவனிக்கப்பட காரணமாக இருப்பது சுல்தான் பேகதாவால் கட்டப்பட்ட ஜமா மசூதி தான். குஜராத்தில் இருக்கும் மிகச்சிறந்த வரலாற்றுக் கட்டிடங்களில் ஒன்றான இந்த மசூதியில் முப்பதடி உயரமுள்ள இரண்டு மிகப்பெரிய தூண்கள், 172 தூண்களுடன் பிரம்மாடண்டமாக காட்சியளிக்கிறது.