அருந்தவ நாயகியுடன் அழகாக வீற்றிருக்கும் வடமூலநாதர் எனும் ஆலந்துறையார் அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த தலத்தின் விருட்சமாக ஆலமரம் அமைந்துள்ளது. பிரம்ம மற்றும் பரசுராம தீர்த்தங்களும் அமைந்துள்ளன. 1000 வருடங்கள் பழமையானதாக நம்பப்படும் இந்த கோயிலுக்கு நாமும் சென்று வருவோம்.
திருவிழா
இந்த கோயிலின் முக்கிய திருவிழாவாக பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த கோயில் பக்தர்களுக்காக அன்றாடம் பூசை நடைபெறுகிறது.
நடை திறப்பு
இந்த கோயிலின் நடை காலை 6 மணிக்கு திறந்து இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இடையில் மதியம் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் அடைக்கப்பட்டிருக்கும்
வழிபாடு
இந்த கோயிலில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு வந்து வழிபட்டால் வெகுசீக்கிரமே பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்துவிடும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
நேர்த்திக்கடன்
இந்த கோயிலுக்கு வருகை தருவோர் மனதில் நேர்ந்துக்கொண்டு வரும்போது அந்த வேண்டுதலை நிறைவேற்றியதும் இறைவனிடம் வந்து நேர்த்திகடனை செலுத்துகின்றனர். பொதுவாக இந்த கோயிலில் பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதுவே இங்குள்ள நேர்த்திக்கடனாகும்.
புராணக்கதை
கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால் உலகம் இயங்காமல் நின்றுவிட்டதாம். இதனால் முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றார்களாம். விளையாட்டாக செய்தாலும் அது பார்வதி தேவியே என்றாலும், அதுவும் பாவத்துக்கு நிகரானதே என்று கூறிவிட்டாராம் சிவன். இதனால் நீ பூலோகம் சென்று அங்குள்ள யோகவனத்தில் தங்கி தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டதாக புராணக்கதைகள் நம்பப்பட்டுவருகின்றன.
சிறப்பு
இங்கு சிவபெருமான் சுயம்பாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் பதினெட்டாம் தேதி சூரியன் தன் கதிர்களைக் கொண்டு இந்த தல இறைவனை தொடுகிறான்.
எப்படி செல்லலாம்?
அரியலூரிலிருந்து பதினைந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். வெறும் அரை மணி நேர பயணத்தில் எளிதில் அடையும் வகையில், பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் இங்கு கிடைக்கின்றன.