கர்நாடக மாநிலத்தின் நுழைவாயில் மங்களூர் ஆகும். மிகவும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது அரபிக்கடலுக்கும், இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது.
மங்களாதேவி எனும் கடவுளின் பெயரில் அமைந்திருக்கும் இந்த மங்களூர் நகரம் பல காலமாக ஓய்வில்லாத ஒரு துறைமுக நகரமாகவே விளங்கி வந்திருக்கிறது.
புவியியல் ரீதியாக முக்கிய இடத்தில் இருப்பதால் மங்களூர் நகரம் பல ஆட்சியாளர்களிடம் மாறி மாறி இருந்து வந்துள்ளது. இந்த நகரத்தை கைப்பற்ற போர்த்துக்கீசியர்களும், ஆங்கியலேயரும் மைசூர் மன்னர்களான திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியுடன் பல கடுமையான போர்களை நட்த்தியுள்ளனர்.
மங்களூரின் ஒப்பிட முடியாத இயற்கை வனப்பு ஒரு விசேஷ கீர்த்தியை அதற்கு தந்திருக்கிறது. நேத்ரவதி மற்றும் குர்புரா என்ற இரு ஆறுகளின் முகத்துவார நீர்த்தேக்கங்களை ஒட்டி 132.45 சதுர கி.மீ பரப்பளவுக்கு மங்களூர் நகரம் அமைந்திருக்கிறது.
அரபிக் கடலின் மாசற்ற பொன் நிற கடற்கரைகள் காற்றில் அசையும் பனை மரங்களோடு இங்கு காட்சியளிக்கிறது. அவற்றுக்கு பின்னே பசுமையான் மலைகளும் சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட பாரம்பரிய வீடுகளும் அழகுற காட்சியளிக்கின்றன. சுமார் 6 லட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர்
இந்த நகரில் குறிப்பிட த்தக்க கலையம்ச விசேஷங்களாக யக்ஷகானம், கிருஷ்ண ஜன்மாஷ்டமி, கரடி வேஷ நடனம் போன்ற வற்றை குறிப்பிடலாம். தசரா கொண்டாட்டங்களின் போது மங்களூர் ராஜ களை பூணுவதால் இதை கண்டு களிக்க வெளி நாடுகள் பலவற்றிலிருந்து ரசிகர்கள் வருகின்றனர்.
பழமையான மங்களூரின் அடையாளமாக திகழும் இடங்களாக கதரி மஞ்சுநாதர் கோயில், செயிண்ட் அலோசியஸ் பீடம், ரொஸாரியோ தேவாலயம் மற்றும் ஜமா மஸ்ஜித் போன்றவை விளங்குகின்றன. தங்க நிற கடற்கரையை சூரிய வெளிச்சத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு சோமேஸ்வரா கடற்கரை மற்றும் தன்னீர்பாவி கடற்கரை போன்றவை உள்ளன.