மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா மார்ச் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று தேரோட்டமும், 29 ஆம் தேதியன்று அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்த கோயிலுக்கு சென்று இவ்விழாவில் பங்கெடுத்து, இறைவன் அருள் பெற பக்தர்கள் நிறைய பேர் வருகை தருகின்றனர். இந்த விழாவில் பங்கெடுத்தால், நோய் நொடி நீங்கி, நல்ல வளம் பெற்று தொழில் விருத்தியடையும் என்பதும், அடுத்த ஆண்டு முழுவதும் வீட்டில் பணம் தங்கும் என்பதும் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
கபாலீஸ்வரர் கோயில்
சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஆகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா மார்ச் 21ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள சென்னை மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்ட மக்களும் பரவலாக வருகின்றனர்.
McKay Savage
திருவிழா
சென்னை பெருநகரின் நடுவில் அமைந்துள்ள மயிலாப்பூரில், நடைபெறும் திருவிழாவில் கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்கள் போலவே பங்குனி பெருவிழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது. மாட வீதிகளில் கடைகளும், ராட்டினம், விளையாட்டு சாமான்கள் என சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திருவிழா கொண்டாடப்படுகிறது. தேரோட்டமும், சப்பரத்தில் 63 நாயன்மார்களின் நகர்வலமும் அமர்களப்படும்.
கயிலை மலைக்கு நிகராக போற்றப்படும் பெருமை கொண்டது மயிலாப்பூர். இங்கு சிவபெருமான் தோன்றியதாகவும் நம்பிக்கை உண்டு. ஆதியும், அந்தமும் இல்லாத சிவபெருமான், ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு கபாலத்தை கிள்ளி கையில் ஏந்தியதால் இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது என்கின்றன புராணங்கள். இது தற்போது கபாலீசுவரர் என்று தமிழிலும், கபாலீஸ்வரர் கோயில் என்று சிலராலும் அழைக்கப்படுகிறது.
Nsmohan
தொன்னம்பிக்கை கதைகள்
கயிலாயத்தில் ஒருநாள் பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அந்த நேரத்தில் அழகான மயில் ஒன்று நடனமாடியது. அதன் அழகில் மயங்கிய அம்பிகை வேடிக்கை பார்த்தார். இதனால் கோபம் கொண்ட சிவன், எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிறப்பாய் என்று பார்வதிக்கு சாபமிட்டார். இதற்கு விமோசனமே கிடையாதா என்று பார்வதி கேட்க, பூலோகத்தில் புன்னை வனத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்றார். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்து அவரை சரணடைந்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.
Jagadeeswarann99
எப்படி செல்லலாம்?
சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திலிருந்து 8கிமீ அல்லது 20 நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது மயிலாப்பூர் கோயில். எழும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து, எம்ஜியார் சிலை, அமீர் மஹால், மல்லேஸ்வர கோயில் வழியாக இந்த கோயிலை அடையலாம். இது மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், அதை கணக்கில் கொண்டு பயணத்தை மேற்கொள்வது நல்லது.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
இதன் அருகிலேயே சாந்தோம் தேவாலயம், நாகேஸ்வரராவ் பூங்கா, மாதவபெருமாள்கோயில், கோலவிழியம்மன் கோயில், கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோயில் என நிறைய இடங்கள் அமைந்துள்ளன.
sowrirajan s