சம்மர் வந்தாலே இந்த வெயிலுல கிடந்து தவிக்க வேண்டியதா இருக்குது, குழந்தைகளுக்கு வேற லீவு விட்டுட்டாங்க, அவங்களையும் சமாளிக்க முடியல... வாட்டியெடுக்குற வெயிலுல இருந்து தப்பிச்சு எங்கயாச்சும் போயிடலாம் போல இருக்கு... இப்படியெல்லாம் அன்றாடம் அவதிப்பட்டுட்டு இருப்பவரா நீங்க ?. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாக இருந்தாலும் கையில லம்ப்பா ஒரு அமோன்ட் இல்லாம எங்கய்யா போறது ?-ன்னு தினரிட்டு இருக்கீங்களா ?. டோன்ட் வொரி சாரே... நம்ம ஊருலயும் ஓரிரு நாட்கள்ல போய்ட்டு வரமாதிரி கோடைக்காலத்துக்கு ஏற்ற சுற்றுலாத் தலங்களெல்லாம் இருக்கு.
குளிர்பிரதேசம்
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஆனைமலை, ஏலகிரி போன்ற பல மலைப் பிரதேசங்கள் சுற்றுலாத் தலங்களாக அறியப்பட்டிருந்தாலும் பெரும்பாலோரின் பார்வையில் இருந்து சற்று விலகி பசுமை போர்த்திய சொர்க்கமாக திகழ்வது மாஞ்சோலை. முக்கால்வாசிப் பகுதி ஆங்கிலேயர்களால் பயிரிடப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்தாலும் சில்லென்ற சீதோஷனம் உங்களை மூழ்கடிக்கச் செய்துவிடும்.
மாஞ்சோலை
'மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ'...ன்னு பாரதிராஜா படத்துல பாட்டு கேட்ட ஞாபகம் இருக்குதா..? மாஞ்சோலை மலை என்ற மலைப்பகுதி தேயிலை தோட்டத்திற்கு பெயர் பெற்றது. இந்த மலையின் உயரம் சுமார் 1162 மீட்டர். இங்கே உதகையைப் போலவே விதவிதமான தேயிலைகள் பயிரிடப்படுகின்றது.
புலிகள் சரணாலயம்
வெறும் தேயிலைத் தோட்டத்திற்கும், சுற்றுலாத் தலங்களுக்கு மட்டும் மாஞ்சோலை பெயர்பெற்றது இல்லைங்க. தென்னிந்தியாவில் இப்பகுதி புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் உள்ளது.
எங்கே உள்ளது ?
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ளது இந்த சொர்க்க பூமியான மாஞ்சோலை.
தரைப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 2800 அடி உயரத்திலிருக்கும் இதற்கு மேலே 3800 அடி உயரத்தில் ஊத்து, அங்கிருந்து உயரமாக குதிரைவெட்டி, நாலுமுக்கு, மலைப் பிரதேசததிற்கு மேலே 4800 அடி உயரத்தில் அப்பர் டேம் உள்ளிட்டவை உள்ளது.
டூரிஸ்ட் கெஷ்ட்ஹவுஸ்
மாநிலத்தின் பிற பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் மாஞ்சோலை மலை பணி மூட்டத்துடனேயே காணப்படுவது வியக்கத்தக்க ஒன்றாகும். தனியார் கம்பெனிகளின் தேயிலை தோட்டங்களில் தவிழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்களைக் காண கண்கள் இரண்டு போதாது என்றுதான் சொல்ல வேண்டும். தொழிலாளர்களின் குடியிருப்பு, ஆங்காங்கே டூரிஸ்ட்கள் தங்குவதற்கு என வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் கெஸ்ட் ஹவுஸ், மாஞ்சோலையின் அழகை ரம்மியமாக கண்டு ரசிக்கலாம்.
அருகில் என்ன உள்ளது ?
மாஞ்சோலைக்கு பயணம் செய்ய திட்டமிட்டீர்கள் என்றால் மலைச் சிகரங்கள், தேனீர் தொழிற்சாலை, கக்கச்சி, நலுமுக்கு, அகத்தியர் மலை அருவி உள்ளிட்ட பகுதிகளைக் காண தவறிவிடாதீர்கள்.