இது தெரியாதா.. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தானே நாஞ்சில் நாடு என்று அழைப்பர் என்று சிலர் கூறலாம். ஆனால் உண்மை அதுவல்ல.. இந்தியாவின் கடைசி... ச்சி.ச்சி.. இந்தியாவின் தென் முனை தொடங்குமிடம் குமரி. வங்கக்கடலும், அரபிக்கடலும், இந்து மா சமுத்திரத்துடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டு, மக்களை குதூகலிக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்திய முனை. இந்த குமரி மாவட்டம் முன்பு கேரள மாநிலத்துடன் இருந்தது. அதாவது திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த ஒரு பகுதியாகும். இதன் ஒரு பகுதியே நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. வாருங்கள் நாஞ்சில் நாட்டுக்கு உலா செல்வோம்.
நாஞ்சில் நாடு
நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுவது, கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆகும். இப்பகுதி பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இந்த தேசம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. ஆனால் இங்கு வாழ்ந்தவர்கள் பேசிய மொழி தமிழ்தான். ஆட்சி செய்பவர்கள் மலையாள மொழி பேசிவந்துள்ளனர்.
Infocaster
எல்லைகள்
இன்று நாம் குமரி மாவட்டம் என்று அழைக்கும் ஊர் அப்போது ஆய்நாடு, நெங்கநாடு, படப்பநாடு, வள்ளுவநாடு, குறுநாடு, புறத்தாநாடு, நாஞ்சில்நாடு என பல குறுநாடுகளாக இருந்தன. அவற்றில் நாஞ்சில் நாடு மிகச் சிறப்புவாய்ந்ததாகும்.
கிழக்குப்பகுதியில் ஆரல்வாய்மொழியும், மேற்கே ஆளூர் வாய்க்காலும், வடக்கில் கடுக்கரை மலை, தெற்கின் மணக்குடி காயல் ஆகியன இந்த நாஞ்சில் நாட்டின் எல்லைகள்.
பழையாறு
வடக்கு மலையில் தோன்றி ஊரை வளமாக்கி எல்லை வரை குதூகலித்தோடும் பழையாறு நதி, ஒரு காலத்தில் நாஞ்சில் நாட்டை வளமிக்க பகுதியாக வைத்திருந்தது. தற்போது குமரியின் ஒரு பகுதி மிகவும் பசுமையாக காணப்பட்டாலும், மாசு, நீர்நிலை கள் சரியாக பேணப்படாமல் குமரி நாட்டிலும் நீர் ஆதாரங்கள் காணாமல் போய்விட்டன.
குண்டு சம்பா அரிசியும், தென்னை, வாழையும், பனை மரங்களும் இந்த பகுதியின் கொள்ளை கொள்ளும் அழகாகும்.
Infocaster
நாஞ்சில் நாட்டின் உணவு
பனை மரங்களும், வயல்வெளிகளுமே நாஞ்சில் நாட்டின் அடையாளம். வாழையில் மட்டும் பச்சை, மட்டி, ரசகதலி, கதலி, துளுவன், செந்துளுவன், நெய்த்துளுவன், மொந்தன், பாளையங்கொட்டன், பேயன், நேந்திரன் என பல வகைகள் இருக்கின்றன. இதன் மூலம் செய்யப்படும் உணவு வகைகளும் வேறெங்கும் கிடைக்காதவை. அற்புத சுவை கொண்டவை ஆகும்.
Reynaldo
சுவையோ சுவை
நேந்திர வற்றல், பாயாசம், பழம்பொறி, சக்கரை வரட்டி, புளிச்சேரி என வாழைப்பழங்களிலேயே பல நூறு வகை பதார்த்தங்களை தயார் செய்கிறார்கள் இப்பகுதியினர். திருமணம் உள்ளிட்ட விருந்து உபசரிப்புகளுக்கென குமரி மாவட்டத்துக்கு சென்றிருக்கிறீர்களா?
புளிச்சேரி, எரிச்சேரி, இஞ்சிக்கறி, அவியல், தீயல், கிட்சடி என எங்குமே கிடைக்காத பல வகை உணவுகள் உங்கள் இலைகளை ஆக்கிரமிக்கும். அத்துடன் பருப்பு, சாம்பார், ரசம், போளியுடன் பாயாசம் சில சமயம் இரண்டு வகை பாயாசமும் கிடைக்கும்.
Augustus Binu
தொழில்கள்
பனைத்தொழில்கள் மிகவும் சிறப்பானதாக இருந்துள்ளது நாஞ்சில் நாட்டில். வீட்டுக்கொரு பனை இருக்கும் என்றும் சொல்கிறார்கள். மிகவும் உயர்ந்த பனை மரங்களில் பால் சேகரித்து, அதை பதப்படுத்தி வைக்கிறார்கள். பதநீர் உடலுக்கு மிகவும் நல்லது. அதன்மூலம் தயாரிக்கப்படும் கருப்பட்டிதான் இவர்களின் முக்கிய மூல இனிப்பு. பதநீர் அல்லது உள்ளூர் மொழியில் பய்நி பல வகைப்படும். கூழ்பதனி, பயத்தம்கூழ் பதனி, அண்டிப்பருப்பு பதனி, புளிப்ப பதனீ என் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு, இவற்றின் உருவாக்கும் ஒரேமாதிரிதான் என்றாலும் சுவை மாறுபடக்கூடியதாகும்.
Abdulhaimba
பாயாசம்
நாஞ்சில் நாட்டில் 35 க்கும் மேற்பட்ட பாயாசங்கள் இருக்கின்றன. நேந்திரம்பழம் பாயாசம், கடலை, பால், அடை, சிறுபயறு, சேமியா, சேனை, தடியங்கா, கோதுமை, மட்டிப்பழ பாயாசம் என எக்கச்சக்க வகைகள்.
மலையாளிகளின் பண்டமாக இன்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் பல வகை பண்டங்கள் நாஞ்சில் நாட்டிலிருந்து சென்றவைதான். பழம்பொறி, புட்டுப்பயிறு, அரிசி, உளுந்து களி, காடி, பலாக்களி, உன்னியப்பம், சுக்குப்பால், கருப்பட்ட அதிரசம் என எக்கச்சக்க உணவுப் பண்டங்கள் நாஞ்சில் நாட்டில் உற்பத்தியான பொருள்கள் கொண்டு தயார் செய்யப்பட்டவை.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
நாகர்கோயில், சுசீந்திரம், வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, சிதறால் மலைக்கோயில், மாத்தூர் தொட்டிப்பாலம், திருநந்திக்கரை குகைக்கோயில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில், உதயகிரி கோட்டை, உலக்கை அருவி, பேச்சிப்பாறை அணைக்கட்டு, பெருஞ்சாணி அணைக்கட்டு, திற்பரப்பு அருவி, முட்டம் கடற்கரை, தேங்காய்ப்பட்டணம் கடற்கரை, சங்குத் துறை கடற்கரை, ஆலஞ்சிக் கடற்கரை என எக்கச்சக்க சுற்றுலாத் தளங்கள் நாஞ்சில் நாட்டைச் சுற்றி காணப்படுகிறது.
AishwaryaGovindarajan