கேரளா என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது பசுமை நிறைந்த மலைப் பகுதிகளும், கடற்கரை ஓரங்களும், கலைகளுமே. இங்குள்ள மக்களின் கலாச்சாரத்தையும், இயற்கையையும் கண்டுகழிக்கவே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கேரளாவினை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு சுற்றுலா பயணிகளின் கண்களில் படாத ஏராளமான எழில்கொஞ்சும் பகுதிகள் இந்த மாவட்டத்தைச் சுற்றிலும் காணப்படுகிறது. குறிப்பாக மலை ஏற்றத்தையும், வாகன சாகசத்தையும் விரும்பும் இளைஞர்களுக்கு எனவே ஓர் பகுதி தனது பசுமையை விரித்துக் காத்திருக்கிறது. அங்கே ஓர் சுற்றுலா செல்வோமா, வாங்க...
தேனி:
சமவெளி மற்றும் மலைப் பகுதிகளைக் கொண்ட ஓர் மாவட்டமே தேனி. வைகை, முல்லைப் பெரியாறு, சோற்றுப்பாறை உள்ளிட்ட அணைகளைக் கொண்டுள்ள தேனி மாவட்டத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை-183 வழியாகக் கம்பம், குமிழி மலைப் பாதை வழியாக மூன்று மணி நேரம் இயற்கையினூடே உள்ள பயணம் மனதிற்கு ரம்யமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அந்தப் பயணத்தையும் வாகனத்தின் உள்ளே அடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தேனியில் இருந்து காட்டு வழிப்பாதையில் நாம் பயணிக்கும் பாதையே சுருளி நீர் வீழ்ச்சி, கும்பக்கரை அருவி, மேகமலை, வெள்ளிமலை, சின்ன சுருளி அருவி என பல சுற்றுலாத் தளங்களை கொண்டுள்ளது.
Kujaal
மேகமலை:
மலைச்சிகரங்கள் சூழ நடுவே அமைந்துள்ள பள்ளத்தாக்குதான் மேகமலை. தமிழகத்தில் மலைப்பாங்கான சுற்றுலாவிற்குப் பெயர்பெற்றது இந்த மலை. கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் கொண்டுள்ளதால் எந்தக் காலநிலையிலும் இங்கு மேக மூட்டம் படர்ந்து காணப்படுவதாலேயே இதற்கு மேகமலை என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டங்களும், கால்நடை வளர்ப்பும் பிரசிதிபெற்ற இந்தப் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பயணிகளின் அதிகப்படியான தேர்வாகவும் உள்ளது.
Mprabaharan
உரும்பிக்கரை:
மேகமலை அடுத்து குமிளி வழியாக குட்டிகாணம் மலைக் கிராமத்தை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் பாதிப்படையாத சோலைவனக் காடுகளைக் கொண்டுள்ளது உரும்பிக்கரை வனப் பகுதி.
உரும்பிக்கரை இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியாகும். பசுமைகள் நிறைந்த பள்ளத்தாக்குகள் மற்றும் பிரமிப்பூட்டும் பாறைகளால் அழகாகக் காட்சியளிக்கிறது இது. குறிப்பாக வாகன சாகசம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்குச் சிறந்த இடம் இதுவாகும். கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட இந்த மலைப் பகுதி இயற்கையின் மீதான உங்களின் பார்வையை நிச்சயம் மாற்றும். குறிப்பாக, சோலைவனக் காடுகளுக்கே உரித்தான வாசனைகள் மனதை இலகச் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
pradeepvkrishna.
காணவேண்டிய இடங்கள்:
வேம்பிளி, வள்ளபாறை நீர் வீழ்ச்சி, இருமலச்சி நீரோடை, பள்ளிக்கண்ணு பாறைக்குன்று, குழந்தைகளுக்கெனவே நீர்வீழ்ச்சியுடன் அடங்கிய குட்டிகண்ணம் பூங்கா உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளுக்கெனவே அமைந்துள்ள வரப்பிரசாதமாக அமைந்துள்ளது உரும்பிக்கரை.
இப்பகுதியைச் சுற்றியுள்ள மலைச் சிகரம், நீர்வீழ்ச்சி, குளிர்ந்த நீரோடைகள் என ஒட்டுமொத்த அழகையும் கொண்டுள்ள உரும்பிக்கரைக்கு கோட்டையம் வழியாக வருவோர்க்கெல்லாம் வழிநெடுகிலும் காத்திருக்கிறது ஓர் அற்புத அதிர்ச்சி. கோட்டையத்தில் இருந்து ரப்பர் தோட்டங்கள் நிறைந்த காட்டுவழிப்பாதை வழியாக இதனை வந்தடையலாம்.
Kattapana
வேம்பிளி தேவாலயம்:
உரும்பிக்கரை மலைக்காடுகளின் மத்தியிலான பயணத்தின் போது சற்று ஓய்வெடுக்கச் சிறந்த இடம் வேம்பிளி கிராமம். நான்கு பகுதிகளிலும் மலைகளால் சூழப்பட்ட இந்த வேம்பிளி, களிக்காவு கிராமத்தில் அமைந்துள்ள கிருத்துவ தேவாலயம் அப்பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தளமாக அமைந்துள்ளது.
Kattapana
வெல்லப்பாறா நீர் வீழ்ச்சி:
உரும்பிக்கரை காட்சிமுனையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வெல்லப்பாறா நீர்வீழ்ச்சி. இருசக்கர வாகனத்தில் நீங்கள் சென்றிருந்தால் தவறாமல் இந்த நீர் வீழ்ச்சிக்கும் போய் பார்த்துவிட்டு வாங்க. காட்டுப்பாதையில் நடைபயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கும் இப்பகுதி நல்ல தேர்வாக அமையும். வளைந்து நெளிந்த காட்டுப்பாதையில் ஒரு மணி நேர நடைப்பயணத்திற்குப் பின் மலைக் காடுகளினால் உருவான நீரோடை உங்கள் சோர்வை முற்றிலும் மறக்கச்செய்யும்.
unknown
இருமலச்சி நீரோடை:
இந்த நீரோடை நீங்க இருக்கிற உரும்பிக்கரைக்கு ரொம்ப பக்கத்திலேயே தாங்க இருக்க. வெறும் இரண்டு நிமிட நடைபயணத்துல உரும்பிக்கரையில இருந்து இருமலச்சி நீரோடைக்கு போய்விடலாம். பிரமிப்பூட்டும் பாறைகள், காட்சி முனைகள், இரவு நேர ஃபையர் கேம்புன்னு இந்த இடம் நமக்கு அத்தனை நினைவுகளை தருதுங்க.
unknown
குட்டிகண்ணம் முகாம்:
உரும்பிக்கரை அடுத்த மலைச்சரிவின் அருகே அமைந்துள்ள குட்டிக்கண்ணம் முகாமானது சுற்றுலாப் பயணிகளால் அதிகப்படியாக பயணிக்கப்படும் பகுதியாகும். தொங்கும் பாலம், நீர்வீழ்ச்சி, முகாம், காட்டு வழி பயணிக்க நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவை இங்கு மக்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பதிவின் மூலம் அங்கு வாகனத்தில் பயணிப்போர் கரடி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் சாம்பார் மான், சிறுத்தைப்புலி, சிங்கவால் குரங்கு, லங்கூர் குரங்கு, பைத்தோன், ராஜநாகம் உள்ளிட்டவற்றைக் காணலாம்.
Mprabaharan
பெரியார் தேசிய பூங்கா:
அழகிய நீர் ஓடைகளும், பாதுகாக்கப்பட்டு வரும் உயிரினங்களும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் தன்மையுடையது பெரியார் தேசிய பூங்கா. உரும்பிக்கரையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பூங்கா 1982-ல் 305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 925 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது. இந்த பூங்காவில் புலி, யானை, காட்டுப்பன்றி, சாம்பார் மான், மான், மலபார் பெரிய அணில், சிறுத்தைகள், நாகங்கள், ஊதா நிற தவளை மற்றும் நூற்றுக்கணக்கான பறவையினங்கள் உள்ளன. குறிப்பாக, இப்பகுதியில்தான் ராஜநாகங்கள் அதிகளவில் இருக்கின்றன.
Anand2202
எந்தெந்த வழியாக பயணிக்கலாம்:
தமிழகத்தில் இருந்து தேனி வழியாக சின்னமன்னூர்- கம்பம் வந்து உரும்பிக்கரையை அடையலாம். கேரள மாநிலம் கோட்டையம் வழியாக வர விரும்புவோர் பம்பாடி- கோதலா- வழூர்- பொன்குன்னம்- கஞ்சிப்பள்ளி- சோட்டி- கொக்கையார் சாலை வழியாக இதனை அடையலாம்.