இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகை ஒன்றான நவராத்திரியின் உற்சாகம் நாடு முழுக்க ஆரம்பமாகிவிட்டது. தென்னிந்தியா, வட இந்தியா, வட கிழக்கு என ஒவ்வொரு மூலையிலும் நவராத்திரி திருவிழா ஒவ்வொரு பாணியில் கொண்டாடி மக்கள் பரவசமடைகிறார்கள்.
ஆனால், அனைத்திற்கும் ஆணி வேறாய் இருப்பது துர்கா தேவி தான், அவரை கொண்டாடவும் மகிழ்விக்கவும் தான் இந்த ஒன்பது நாள் நவராத்திரியே! இந்த நாட்களில் அவரது கோவில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். அன்னை மகிழ்ச்சியுடன் நம்மை ஆசீர்வதிப்பார்.
நீங்கள் நவராத்திரியின் போது டெல்லியிலோ அல்லது டெல்லிக்கு அருகில் இருந்தாலோ, நிச்சயம் அங்கு இருக்கும் இந்த பிரபலமான துர்காதேவி கோவில்களுக்கு சென்று வாருங்கள்!
சத்தர்பூர் கோவில்
டெல்லியில் வசிக்கும் அனைவர்க்கும் தெரியும், இந்தக் கோவிலுக்கு அறிமுகமே தேவையில்லை என்று! இந்த கோவிலுக்கு சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் டெல்லியின் தென்மேற்குப் புறநகரில் அமைந்துள்ள இந்தக் கோயில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கோயில் வளாகத்தைக் கொண்டுள்ளது. அதன் அற்புதமான கட்டிடக்கலை ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
காத்யாயனி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவிலின் மா காத்யாயனி என்ற முக்கிய தெய்வத்தை நவராத்திரி காலத்தில் மட்டுமே தரிசிக்கலாம். மா காத்யாயனியின் புனித தரிசனத்திற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு கூடுவார்கள். இந்த நவராத்திரி காலத்தில் தரிசனம் செய்ய வேண்டிய கோவில்களில் இதுதான் முதன்மையானது.
ஜாண்டேவாலன் கோவில்
மா ஆதி சக்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் டெல்லியின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில், பிரார்த்தனைக் கொடிகள் அல்லது ஜந்தாக்கள் வழங்கப்பட்டதால், இந்த ஆலயம் 'ஜாண்டேவாலன்' என்று பெயர் பெற்றது.
நவராத்திரியை முன்னிட்டு, மலர்களாலும், மின்னும் விளக்குகளாலும் அழகாக அலங்கரிக்கப்பட்ட டெல்லியின் இந்த கோவிலில் சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது. டெல்லியில் நவராத்திரி கொண்டாட்டத்தை காண செல்ல வேண்டிய சிறந்த கோவில்களில் இதுவும் ஒன்று.
ஸ்ரீ ஷீட்லா மாதா மந்திர்
ஸ்ரீ ஷீத்லா மாதா மந்திர் டெல்லியில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் பெரிய கோவில்களில் ஒன்றாகும். நவராத்திரியின் போது இந்தக் கோவில் வளாகமே விழாக்கோலம் பூணும். எங்கிருந்து பார்த்தாலும் மின்னும் அமைப்பில் ஜொலிக்கும்.
தேவி சிலைக்கு மலர்கள், மாலைகள் கொடுத்து பூஜிக்கலாம். மனமுருகி வேண்டுவோருக்கு அன்னை அனைத்தையும் வாரி வழங்கி ஆசீர்வதிக்கிறார் என்பது ஐதீகம்.
காளி மந்திர்
சித்தரஞ்சன் பூங்காவில் அமைந்துள்ள இந்தப் புகழ்பெற்ற கோயில் காளி தேவியின் வீடாகவே பூஜிக்கப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் தேவி மா துர்காவின் அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். அதனால் இது பெங்காலி சமூகத்தால் ஆழமாக வழிபடப்படும் டெல்லியில் உள்ள துர்கா தேவி ஆலயமாகும்.
நவராத்திரி மற்றும் துர்கா பூஜையின் போது இந்த இடம் மிகவும் உயிரோட்டமாய் காணப்படுகிறது. தங்கள் பிரார்த்தனைகளையும் நன்றியையும் தெரிவிக்க ஏராளமான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.
கல்காஜி கோவில்
கல்காஜி எனப்படும் கல்கா கோயில் டெல்லியின் மற்றொரு பழமையான கோயிலாகும். இது துர்கா தேவியின் காளி அவதாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கி.பி 1764 இல் கட்டப்பட்ட இக்கோயிலில் மகாபாரதத்தைச் சேர்ந்த பாண்டவர்களும் வழிபட்டதாக நம்பப்படுகிறது.
இந்தக் கல்காஜி கோவில் 'மனோகாம்னா சித்த பீடம்' அல்லது 'ஜெயந்தி பீடம்' என்று நம்பப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் கருத்துப்படி, காளி தேவி பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் இடமாக இது உள்ளது. மேலும் நவராத்திரியின் போது கல்காஜி கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். நவராத்திரி விழாவைக் கொண்டாடக்கூடிய கோயில்களில் கல்காஜி கோயிலும் ஒன்று.
குர்பா கோவில்
ப்ரீத் விஹாரில் அமைந்துள்ள குர்பா கோயில் இப்பகுதியில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலின் மூலஸ்தான தெய்வம் மாதா வைஷ்ணோ தேவி ஆவார்.
ஒவ்வொரு நவராத்தியின் போதும் இந்த இடம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி சன்னதியின் உணர்வுகளைத் தூண்டும் முயற்சியில் இந்த புனித சன்னதி வளாகத்திற்குள் ஒரு பெரிய குகையும் உள்ளதாம்.
ஆகவே, இந்த நவராத்திரி சமயத்தில் துர்கா தேவியின் ஆசியைப் பெற இக்கோவில்களுக்கு சென்று வாருங்கள்!