தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு பல முகங்கள் உண்டு. அற்புதமான கோயில்கள், அழகிய கடற்கரைகள், நினைவுச்சின்னங்கள், வரலாற்று சிறப்பு மிக்க தளங்கள், பரப்பரப்பான நகர வாழ்க்கை, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் என எப்பொழுதுமே சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் ஏழில் ஒரு பங்கு மக்கள் கூட்டம் இங்கு இருந்தாலும், இந்த வேகமான நகரத்திலும் கூட சில அமானுஷ்ய நிறைந்த இடங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த இடங்களுக்கு தனியாக செல்வதற்கு மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். ஆம்! இது சாகச விரும்பிகளுக்கான பதிவு. யாருக்கு எல்லாம் இந்த பேய், பிசாசு, ஆவி, அமானுஷ்யத்தில் நம்பிக்கை இல்லையோ அவர்கள் இங்கு சென்று இந்த இடங்களில் என்ன தான் இருக்கின்றன என பரிசோதிக்கலாம்.
உடைந்த பாலம், பெசன்ட் நகர்
சென்னையில் உள்ள சாந்தோம் கடற்கரையை, எலியாட்ஸ் கடற்கரையுடன் இணைக்கும் நோக்கில், மீனவர்களின் நலனுக்காக இந்த பாலம் 1967 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தி வந்தனர். 1977 ஆம் ஆண்டில் கடல் கொந்தளிப்பால் பாதி இடிந்து விழுந்தது. அதிலிருந்து இங்கு மர்மம் குடி கொண்டது.
அடையாளம் காணப்படாத பல இறந்த உடல்கள் இங்கிருந்து மீட்கப்பட்டு இருக்கின்றன. இங்கே அகால மரணமடையும் ஆட்களின் ஆவிகள் இங்கே சுற்றுவதாககவும், இரவில் அலறல் சத்தம் கேட்பதாகவும் இங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் சூரியன் மறைவுக்குப் பிறகு, இங்கு யாரும் செல்வதில்லை.
டி மான்டி காலனி
வீடுகளும் மக்கள் கூட்டமும் நிறைந்த சென்னை அபிராமபுரத்தில் நகருக்கு அமைந்து இருக்கிறது - இந்த டி மான்டி காலனி. பல ஆண்டுகளுக்கு முன்னர் பணக்கார போர்த்துகீசிய வணிகரான டி மான்டி என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவியுடன் ஒரு மகிழ்ச்சியற்ற வாழ்வை இங்கு வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது குழந்தையும் மர்மான முறையில் இறந்து போனது என்று சொல்லப்படுகிறது.
இந்த காலனியில் அடிக்கடி டி மான்டியின் உருவம் சுற்றித் திரிவதாககவும், அவர் பூட்டுகளைத் திறப்பதையும், கதவுகளை மூடிக் கொள்வதையும், ராக்கிங் நாற்காலியில் அமர்ந்து இருப்பதையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள். முழு காலனியிலும் ஒரு விளக்கு கூட இல்லை. பாதுகாப்பிற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட செக்யூரிட்டியும் இறந்து விட்டாராம்.
கரிகாட்டுக்குப்பம்
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெற்காசியா மற்றும் இந்தியாவின் கடலோரங்களை தாக்கிய சுனாமி ஆழிப் பேரலை இந்த ஒரு மீனவ கிராமத்தையே சூறையாடிவிட்டது. இதில் பல நூறு மக்கள் இறந்தனர், வீடுகள் சேதமடைந்தன, எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டிடங்களும், தூசியும் குப்பையுமாக இருக்கிற இந்த இடம் பார்ப்பதற்கே சற்று திகிலாகத் தான் இருக்கிறது.
ஆழிப் பேரலை கொண்டு போன பல நூறு உயிர்களின் ஆவி இங்கு இன்றளவும் சுற்றிக் கொண்டிருப்பதாக இங்கு நடமாடும் மக்கள் சொல்கின்றனர். இங்கு இருக்கும் ஒரு கோவிலில் பெரும்பாலான நாட்களில் ரத்தத் துளிகள் இருப்பதகாவும், சிதறிக் கிடக்கும் உடல் பாகங்கள் இருப்பதாகவும், இன்றளவும் அதற்கு ஏதும் அடையாளம் கிடைக்கதாதகவும் கூறப்படுகின்றன.
எப். 2 கட்டிடம்
சென்னையில் அமானுஷ்யம் நிறைந்த இடங்களில் இந்த மர்மம் நிறைந்த கட்டிடமாகும். பாழடைந்த வீடு, குறுகிய சாலைகள், கும் இருட்டு ஆகியவை இந்த இடத்திற்கு மேலும் திகில் செல்கின்றன. அம்பேத்கர் சாலையில் வால்மீகி நகரில் உள்ள இந்த வீடு சென்னை விமான நிலையத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த வீட்டில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது ஆவி இன்றளவும் சுற்றித் திரிவதாகவும் சொல்லப்படுகிறது.
நள்ளிரவிற்கு பிறகு இந்தப் பெண் வீட்டிற்குள் இருந்து பல வித்தியாசமான சத்தங்கள் எழுகின்றனவாம். இந்த வீட்டை கடந்து செல்லும் நபர்களின் மொபைல் நெட்வொர்க் செயல் இழப்பதாகவும், தானாகவே போனில் டார்ச் ஆன் ஆவதாகவும் கூறுகின்றனர். ஏன், கூகுலில் கூட இந்த இடம், ஹான்டட் ஸ்பாட் என குறிப்பிட்டு இருக்கிறதாம்.
தியோசாபிகல் சொசைட்டி
அடையாரில் 1882 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தியோசாபிகல் சொசைட்டியில் 450 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருக்கிறது. அதில் தான் மர்மம் குடி கொண்டிருக்கிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உரத்த அலறல் மற்றும் மரத்திலிருந்து தெளிவற்ற பெயர்கள் அழைக்கப்படுகிறது.
அதனாலேயே காவலாளி இரவு 7 மணிக்குள் பார்வையாளர்களை வெளியே செல்லும்படி அறிவுறுத்துகிறார். இந்த இடம் சாயங்காலத்திற்குப் பிறகு முழு வீச்சில் அமானுஷ்ய நடவடிக்கைகளின் மையமாக மாறுகிறது என நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பதிவை படித்தப்பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்த இடங்களுக்கு போக வேண்டும் என்று நினைக்குறீர்களா? ம்ம்ம், ஒரு முறை யோசித்து விட்டு திட்டமிடுங்கள்!