நீங்க உண்மையிலேயே உங்கள பெரிய வீரன்னு நினைச்சிட்டு இருந்தீங்கன்னா இங்க வாங்க....சும்மா 'கிலிய' கிளப்பும்!...
மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தின் பெயர் மஹாபலேஷ்வர்.
ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.
தலை சுற்றவைக்கும் 4718 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலா நகரம் 150 ச.கி.மீ அளவில் பரந்து காணப்படுகிறது.
மஹாபலேஷ்வர் முக்கிய பெரு நகரங்களான மும்பை, புனே போன்றவற்றிலிருந்து முறையே 264 கி.மீ மற்றும் 117 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளதால் ஒரு பரபரப்பான பெரு நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஓய்வெடுக்க மிக பொருத்தமான மலை வாசஸ்தலமாக திகழ்கிறது.
வரலாறு
சிங்கன் எனும் அரசனால் இந்த இடம் கண்டறியப்பட்டு மஹாபலேஷ்வர் என்ற புகழ் பெற்ற கோயிலையும் அந்த அரசன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 1819-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் இந்த இடம் அவர்களின் கோடை வாசஸ்தலங்களின் ஒன்றாக மாறியது.
படம் : Tropicana
பெயர்க்காரணமும், வேறு பெயரும்!
மஹாபலேஷ்வர் என்னும் பெயருக்கு மஹா வலிமை கொண்ட கடவுள் என்பது பொருளாகும். இங்கு வெண்ணா, காயத்ரி, சாவித்ரி, கோன்யா மற்றும் கிருஷ்ணா போன்ற ஐந்து நதிகள் பாய்வதால் 'ஐந்து ஆறுகளின் ஸ்தலம்' என்றும் மஹாபலேஷ்வர் அறியப்படுகிறது. மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலம், 'மால்கம் பேத்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
படம் : Bagheera2
கவின் கொஞ்சும் மலைச்சரிவுகள்!
மஹாபலேஷ்வரின் சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை காண வசதியாக 30 மலைக்காட்சித் தலங்கள் (வியூ பாயிண்ட்ஸ்) இங்கே அமையப்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை தங்கு தடையின்றி பார்த்து ரசிக்கலாம்.
படம் : Abhishekjoshi
வில்சன் பாயிண்ட்
வில்சன் பாயிண்ட் என்ற பெயர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மும்பை மாநகரின் கவர்னராக இருந்த சர் லெஸ்லி வில்சன் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. 1439 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள வில்சன் பாயிண்ட்தான் மஹாபலேஷ்வரில் உயரமான இடத்தில் அமைந்துள்ள இடமாகும். இந்த மலைக்காட்சி தலத்தின் சிறப்பு, இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்த்தமனம் இரண்டையும் கண்குளிர கண்டு ரசிக்கலாம் என்பதே.
படம் : Rdglobetrekker
எப்படி அடைவது?
மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அரசுப்பேருந்துகள் மஹாபலேஷ்வருக்கு இயக்கப்படுகின்றன. அதோடு மஹாபலேஷ்வரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள வாதார் ரயில் நிலையத்தின் வழியே புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பல ரயில்கள் செல்கின்றன. எனவே வாதார் வந்து சேர்ந்த பின்னர் டாக்ஸி மூலம் மஹாபலேஷ்வர் ஸ்தலத்தை வந்தடையலாம். மேலும் மஹாபலேஷ்வரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் புனே விமான நிலையமும், 266 கி.மீ தொலைவில் மும்பை விமான நிலையமும் அமையப்பெற்றுள்ளன.
படம் : Juzerb4u