ஆர்ப்பரித்துச் செல்லும் மலானா நதியின் கரைகளில், கடல் மட்டத்திலிருந்து 3029மீ உயரத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாதலம் மலானா ஆகும். குலு பள்ளத்தாக்கிற்கு அருகிலிருக்கும் மலானா சுற்றுலாப் பயணிகளுக்கு டியோ டிபா மற்றும் சந்திரகானி சிகரங்களின் மனம் மயக்கும் காட்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. மிகவும் குறைவான மக்கள் தொகையை உடைய இந்த இடத்தில் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் மற்றும் திபெத்திய பேச்சு வழக்கு மொழிகளின் வடிவமாகிய 'கனாசி' என்பதாகும். நகர வாழ்க்கை முறையின் கவர்ச்சியால் இன்னமும் தொடப்படாமலிருக்கும் மலானாவின் மக்கள் எளிமையான வாழ்க்கை முறையை கடைபிடித்து வருகின்றனர்.
இந்த பகுதியின் முதன்மைக் கடவுளான ஜமுலா ரிஷி தேவ்தா-வை நிர்வகித்து வரும் 11 பிரதிநிதிகளால் இக்கிராமமும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரநிதிகள் இந்த தெய்வத்தின் பெயரால் முடிவுகளை எடுப்பார்கள் மற்றும் இவர்களுடைய நிர்வாகத்தை எதிர்ப்பவர்கள் யாரும் இங்கு கிடையாது. அழகிய சுற்றுச்சூழலிற்காகவும் மற்றும் செழிப்பான கலாச்சாரத்திற்காகவும் அறியப்படும் மலானாவை மையமாக வைத்து 'மலானா - இழந்த தனித்துவம்' மற்றும் 'மலான - ஒரு இமாலய கிராமத்தில் உலகமயமாக்கல்'ஆகிய இரு டாக்குமெண்டரி படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பின்பற்றி வரும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் இந்த இடத்தின் முதன்மையான அம்சங்களாகும். நாட்டுப்புற கதைகளின் படி, மாசிடோனிய மன்னர் மூன்றாம் அலெக்ஸாண்டரின் படை வீரர்களால் உருவாக்கப்பட்ட இடம் தான் மலானா என்று கருதப்படுகிறது. மேலும் மலானாவாசிகள் ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது. மலானா நீர்மின்சக்தி திட்டம் என்ற அணைக்கட்டு திட்டம் மலானா கிராமத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதாக இருக்கிறது. மலானாவிற்கு அருகிலிருக்கும் 'மகாதேவ்' கோவிலுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம். இங்கு பின்பற்றி வரப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை தெரிந்து கொள்ள எளிய வழி மலானாவாசிகளிடம் நேரடியாக பேசுவது தான்.
மலானாவில் இருக்கும் போது சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் மற்றும் அது போன்ற வேறு சில செயல்களையும் செய்ய முடியும். ஆனால், அவர்கள் இங்கிருக்கும் கிராமவாசிகளின் பொருட்களை தொடக்கூடாது, ஏனெனில் அவ்வாறு செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. மலானாவிற்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாக 25கிமீ தொலைவில் இருக்கும் குலு விமான நிலையம் உள்ளது. குலு விமான நிலையம் பெரிய நகரங்களான பதான்கோட், புது டெல்லி, சண்டிகர், தரம்சாலா மற்றும் சிம்லாவுடன் நேரடியாக தொடர்புள்ள விமான தளமாகும்.
சர்வதேச சுற்றுலாப் பயணிகள் புது டெல்லியிலிருந்து குலுவிற்கு நேரடியாக விமானத்தை பெற முடியும். மலானாவிற்கு மிகவும் அருகிலிருக்கும் இரயில் நிலையமான ஜோகிந்தர் நகர் ரயில் நிலையம் சண்டிகர் வழியாக நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சில தனியார் மற்றும் மாநில அரசு பேருந்துகள் குலுவிலிருந்து மலானாவிற்கு தொடர்ச்சியாக சென்று வருகின்றன.