பயணம் செய்வதற்கு மிகவும் ஏற்ற காலம் மழைக்காலம். மரங்களும், மலைத்தொடர்களும் மழைக்காலத்தில் கூடுதல் அழகைத் தரும். மற்ற காலங்களைப் போல், நாம், நாள் முழுதும் அலைய வேண்டிய தேவைகூட கிடையாது.
நமக்குப் பிடித்த ஒரு மலைவாசஸ்தலத்தில், ஒரு விடுதியின் ஜன்னலருகே , சூடான தேனீரோடு, வெளியே பெய்யும் சாரலைப் பார்த்தாலே போதும், பல நாள் அலுப்பு, மனச் சோர்வு சில நிமிடங்களில் வடிந்து போகும்.
அப்படிப்பட்ட சில அருமையான இடங்களைப் பார்க்கலாம் :
Photo Courtesy: Gopal Vijayaraghavan
கூர்க்
இந்தியாவின் ஸ்காட்லாந்து என அன்போடு அழைக்கப்படும் கூர்க், மழைக்காலத்தில் செல்ல மிகச்சிறந்த இடமாகும். குளுமையான வானிலை, மிதமான அருவிகள், பூங்காக்கள், பசுமையான சூழல், மடிகேரி கோட்டை, ஓயாது பெய்யும் சாரல் என ஒட்டுமொத்தமாய் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் ஒரு மலைவாசஸ்தலம்.
காட்டேஜுகள், விடுதிகள், ரிசார்ட்டுகள் எனப் பல வகையில் தங்குவதற்கு இடங்கள் இருக்கின்றன.
ஆகும்பே
Photo Courtesy : Mylittlefinger
ஆர்.கே. நாராயணின் சிறுகதைகளின் தொகுப்பை மையமாக வைத்து ஷங்கர் நாக் எடுத்த புகழ்பெற்ற தொடர் மால்குடி டேஸ். சுதந்திரத்திற்குமுன் உள்ள காலகட்டத்தில், மால்குடி எனும் கற்பனை ஊரில் உள்ள எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியிருப்பார் ஷங்கர் நாக்.
அந்தக் காலகட்டத்தை திரையில் காட்ட அவர் தேர்ந்தெடுத்த இடம் ஆகும்பே. ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்தான் ஆகும்பே. பெங்களூரில் இருந்து 360 கி.மீ தொலைவில் இருக்கிறது. மொத்தம் 500 பேரே மக்கள் தொகை கொண்ட் ஊர் இது. ஒரு மலைப் பகுதி. தென்னகத்தின் சிரபூஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது.
Photo Courtesy : Harsha K.R
சுற்றியும் மழைக்காடுகள், வித விதமான அருவிகள், மரங்கள், பழைய காலத்து வீடுகள் என முற்றிலும் நவீனம் கால் பதிக்காத கிராமம்.
இங்கிருந்து ஷ்ருங்கேரி 24 கி,மீதான். ஷ்ருங்கேரியில்தான் புகழ்பெற்ற வித்யஷங்கர கோவில் இருக்கிறது.
ஃபோட்டோ எடுக்க விரும்புவோர், இயற்கை ஆர்வலர்கள் தவற விடக்கூடாத இடம்.
சிக்மகளூர்
Photo Courtesy : Riju K
சிக்மகளூர் - காஃபி இலைத் தோட்டங்கள், இனிமையான வானிலை; இதுபோக சுற்றியிருக்கும் சுற்றுலா தளங்கள் - பாபா பூதான் கிரி மலை, அய்யனகெரே ஏரி, அம்ருதேஸ்வர கோவில், மனிக்யதரா அருவி எனப் பல இடங்கள் இருக்கிறது.
Photo Courtesy : Riju K