நம்மில் சிலருக்கு சில குழப்பங்கள் இருக்கும். உருவத்தைப் பார்த்து சில குழப்பங்கள், பெயரைப் பார்த்து சில குழப்பங்கள் இருக்கலாம். இப்படி சுற்றுலாத் தளங்களிலும் சில குழப்பங்களை சந்திக்கலாம். சுற்றுலா செல்வது, சுற்றுலாவுக்கான வழிகாட்டிகள் எல்லாம் நாம் பார்த்திருப்போம். அதன்படி, கர்நாடக மாநிலத்திலுள்ள முக்தேஸ்வரர் கோயிலுக்கு போய் வரலாமா.. என்ன முக்தேஸ்வர் கோயில் கர்நாடகத்தில் இருக்கிறதா.. அது உத்தரகண்ட்டில் அல்லவா இருக்கிறது என்று விவரம் அறிந்தவர்களுக்கு புரியும். இப்படி பெயரில் இருக்கும் வேறுபாடுகளால் என்ன நடந்துவிடப்போகிறது என்று கேட்கலாம்.
நண்பர் ஒருவர் முக்தேஸ்வர் கோயிலுக்கு சென்று வரலாம் என்று திட்டமிட்டு, அவருடைய நண்பர்கள் எல்லாரிடமும் கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் அனைவரும் சரி, இங்குதானே இருக்கிறது கர்நாடகம். சென்றுவிட்டு வருவதால் என்ன என்று திட்டமிட்டால், கடைசியில் அது உத்தரகண்ட்டில் இருக்கிறது என்று தெரியவந்தால்.. அங்குதான் பெயர் பிரச்னை. சரி இப்படி ஒரேமாதிரியான பெயர்கள் கொண்ட ஊர்களைப் பற்றி இந்த தொகுப்பில் வரிசையாக காணலாம். இன்று உத்தரகண்ட்டில் இருக்கும் முக்தேஸ்வர் கோயில் மற்றும் கர்நாடகத்தின் முருதேஷ்வர் கோயில், அவற்றின் சிறப்புகள், அங்கு செல்லும் வழிமுறைகளைக் காண்போம். வாருங்கள்.
முக்தேஸ்வரும் முருதேஷ்வரும்
இரண்டும் சிவன் கோயில்தான். இரண்டும் இந்தியாவில்தான் இருக்கிறது. ஒன்று வட இந்தியாவில், இன்னொன்று தென்னிந்தியாவில்.
முக்தேஸ்வர் கோயில்
முக்தேஸ்வர் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அழகிய மலைப் பகுதியாகும். இது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைநிடால் மாவட்டத்தில் உள்ள குமயோன் வட்டாரத்தில் அமைந்திருக்கிறது. மிகவும் அழகான மலைப் பிரதேசமாக விளங்கும் முக்தேஸ்வர் கடல் மட்டத்திலிருந்து 2286 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது.
முருதேஸ்வர் கோயில்
உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. சிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.
PC: Thejas Panarkandy
தோற்றமும் அமைப்பும்
முக்தேஸ்வர் கோயில்
கடந்த 350 வருடங்களாக இந்து சமய கடவுளான சிவபெருமானுக்கு முக்தேஸ்வரில் ஒரு அழகிய ஆலயம் இருந்து வருகிறது. இந்த ஆலயம் முக்தேஸ்வர் தாம் என்று அறியப்படுகிறது. இந்த ஆலயத்தின் பெயரை வைத்தே இந்த பகுதி முக்தேஸ்வர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் தன்னை நோக்கி வரும் பக்தர்களுக்கு மோட்சம் வழங்குவார் என்ற நம்பிக்கையும் இந்த பகுதியில் உள்ளது.
முருதேஸ்வர் கோயில்
249 அடி உயர கோபுரம் கொண்ட இந்த கோயிலில், 123 அடி உயர சிவன் சிலை உலகின் இரண்டாவது பெரியது எனும் பெருமையை இந்த கோயிலுக்கு பெற்று தந்துள்ளது. மேலும் இந்த கோயில் கட்டப்பட்ட ஆண்டு எப்போது என்பது தெரியவில்லை.
PC: Jim McDougall
முக்தேஸ்வர் பற்றிய தகவல்கள்
முக்தேஸ்வர் பற்றிய தகவல்களை காண்போம். க்தேஸ்வர் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அழகிய மலைப் பிரதேசம் சிட்லா ஆகும். முக்தஸ்வருக்கு அருகில் இருக்கும் சிட்லா கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த மலைப் பிரதேம் 39 ஏக்கர்களில் பரந்து விரிந்து இருக்கிறது.
சிட்லாவிலிருந்து, கம்பீரமாக அமைந்திருக்கும் இமய மலைத் தொடரைப் பார்த்து ரசிக்கலாம். மேலும் ஓக் மற்றும் பைன் மரக் காடுகளால் சிட்லா பகுதி நிறைந்திருக்கிறது. முக்தேஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்ததாக சவுலி காலி ஜாலி என்று அழைக்கப்படுகின்ற சவுதி ஜாலி என்ற பகுதி அமைந்திருக்கிறது. இந்த பகுதி பராணங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரு முறை தீய சக்திக்கும், பெண் தெய்வத்துக்கும் இடையே இங்கு போர் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாக யானைத் தந்தமும், ஒரு வாளும் மற்றும் மார்புக் கவசமும் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். ராஜராணி என்ற இன்னுமொரு மிகப் பழைய ஆலயமும் இந்த பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் 11 ஆம் நூற்றாண்டில் அழகிய கற்களால் அழகிய வேலைப்பாட்டுடன் கட்டப்பட்டது. அடுத்ததாக பிரம்மேஸ்வரா என்ற ஒரு ஆலயமும் இந்த பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் கிபி 1050ல் கட்டப்பட்டதாகும். இந்த ஆலயத்தில், கற்களால் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்களைக் காண முடியும்.
Chetan bisht
முருதேஷ்வர் பற்றிய தகவல்கள்
முருதேஸ்வர் ஆலயமும், அதன் ராஜகோபுரமும் கண்டுக கிரி குன்றில் அமைந்திருக்கிறது. மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய தீபகற்பமாய் திகழ்கிறது முருதேஸ்வர் ஆலயம்.
இந்தக் கோயில் இருக்கும் இடத்தில்தான் முன்பொரு முறை பிராமண சிறுவன் வடிவில் இருந்த விநாயகர், ராவணனுக்காக வைத்திருந்த ஆத்ம லிங்கத்தை கீழே தவறவிட்டுவிட்டதாக புராணம் கூறுகிறது. இங்கு வரும் பயணிகள் 123 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலையுடன், சிவலிங்கத்தையும் காணலாம். இந்தக் கோயிலை சுற்றிலும் நிறைய கான்க்ரீட் கல்வெட்டுக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்தக் கோயிலின் ராஜகோபுரம் உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இச்சிறப்புகளை காட்டிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோயில் தென்னிந்திய கட்டிடக் கலையின் உன்னத சாட்சியாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
aanantha.krishnan
முக்தேஸ்வர் அருகே என்னவெல்லாம் பார்க்கமுடியும்
இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம்
முக்தேஸ்வரில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் ஆகும். கேட்டில் பிளேக் கமிஷனின் பரிந்துரையின்படி இந்த மையம் 1893ல் அமைக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் இருந்த கால்நடைகளுக்கு ஏற்பட்ட கொடிய நோய்களைக் குணப்படுத்துவதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டது. இந்த மையம் இந்தியாவில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையகங்களில் முக்கியமான ஒன்றாகும்.
பிரம்மேஸ்வரா ஆலயம்
முக்தேஸ்வர் பகுதியில் இருக்கும் இன்னுமொரு ஆன்மீகத் தலம் பிரம்மேஸ்வரா ஆலயம் ஆகும். இந்த ஆலயம் முக்தேஸ்வரிலிருந்து 1 கிமீ தொலைவில், முக்கிய சாலையில் அமைந்திருக்கிறது.
இந்த ஆலயம் 1050-ல் கட்டப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். இந்த ஆலயத்தில் ஏராளமான அழகிய சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மேஸ்வரா ஆலயத்தின் வளாகத்திற்குள், 4 சிறிய ஆலயங்களும் கட்டப்பட்டிருக்கின்றன.
நதுவக்கான்
முக்தேஸ்வர் பகுதியில் நதுவக்கான் என்ற ஒரு அழகிய குக்கிராமம் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் முக்தேஸ்வரிலிருந்து 14 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1940 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
நதுவா கான் என்ற இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரால் இந்த கிராமம் நதுவக்கான் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறிய கிராமம் டலண்டா, நேவடா, மலட்டண்டா, கவோன், கஃபால்தரி, கனலா, ஜோப்ரோ, பனோலா, புங்கா, பகீசா, லமக்கான் மற்றும் டபுக் என்று பல சிறுசிறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சிட்லா
முக்தேஸ்வரில் இருக்கும் மிக முக்கிய சுற்றுலாத் தலம் சிட்லா என்ற மலைப் பிரதேசம் ஆகும். சிட்லா, முக்தேஸ்வரிலிருந்து 5 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பிரதேசத்திலிருந்து இமயமலையின் அழகிய உயரமான மலைச் சிகரங்களைப் பார்த்து ரசிக்கலாம்.
சிட்லா பகுதி ஏறக்குறைய 39 ஏக்கர் அளவில் பரவியிருக்கிறது. இந்த பகுதி முழுவதும் பசுமையன ஓக் மரங்கள், பைன் மரங்கள் மற்றும் ஆர்ச்சர்ட் மரங்கள் சூழ்ந்திருக்கின்றன.
Deepak Rohilla
முருதேஷ்வர் அருகே என்னவெல்லாம் பார்க்கமுடியும்
கடற்கரை
அரபிக்கடல் அமைதியாகவும், அழகாகவும், காணப்படுவதால் நீங்கள் கடலில் நீந்துவது, படகு சவாரி செய்வது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். கோயிலை சுற்றி உள்ள இடங்களில் மக்கள் சிறு உலா போகலாம், அதோடு அரபிக் கடலில் ஆதவன் மறைந்துபோகும் கண்கொள்ளா காட்சியை பார்த்து மகிழலாம்.
அலைக் குளம்
அப்பகுதியின் மற்றொரு பிரபலமான இடம் அலைக் குளம். இங்கு குடும்பத்தோடு வருபவர்கள் தங்கள் குழந்தைகளோடு குதூகலமாக பொழுதை களிக்கலாம். உங்களை சுற்றி நாற்புறமும் தண்ணீர் சூழ்ந்திருக்க பெரிய பெரிய உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் அனுபவம் அலாதியானது. உங்கள் வசதிக்கு ஏற்ற உணவகங்களும், தங்கும் விடுதிகளும் இங்கே நிறைய இருக்கின்றன.
அருகிலுள்ள தளங்கள்
பத்க்கல் நகரம் மற்றும் சஹயாத்ரி குன்றில் காணப்படும் உல்லாச விடுதிகள், திப்பு சுல்தானின் கோட்டை போன்றவை முருதேஸ்வருக்கு வெகு அருகில் காணப்படும் பிரபலமான சுற்றுலா பகுதிகள்.
தீவு
பத்க்கல் நகருக்கு அருகில் ஜன சஞ்சாரமற்ற புறாத் தீவு என்றழைக்கப்படும் நேத்ராணி தீவு உள்ளது. பத்க்கல்லிலிருந்து படகுகளோ, மீன்பிடி படகுகளோ அமர்த்திக்கொண்டு பயணிகள் புறாத் தீவுக்கு செல்லலாம். ஆடு, மாடுகளை தவிர வேறு ஜீவன்களையே காண முடியாத புறாத்தீவு பயணிகளின் அலுத்து போன நகர வாழ்க்கைக்கு அருமருந்தாக இருக்கும்.
Thejas Panarkandy
இரண்டு கோயில்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்
இவ்விரண்டு கோயில்களும் சிவன் கோயில் ஆகும்.
முக்தேஸ்வர் கோயில் வடஇந்தியாவில் அமைந்துள்ள அதே வேளையில், தென்னிந்தியாவில் அமைந்துள்ளது முருதேஷ்வர் கோயில்.
முக்தேஸ்வர் கோயில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு செல்வது டிரெக்கிங் சென்ற அனுபவத்தை தரும்
முருதேஷ்வர் கோயில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இங்கு சென்றுவருவது மனதுக்கு நல்ல புத்துணர்ச்சியை தரும்
முக்தேஸ்வரிலிருந்து, இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான மலைச் சிகரமான நந்த தேவி சிகரத்தைப் பார்க்கலாம்.
உலகின் இரண்டாவது உயரமான சிவன் சிலை முருதேஷ்வரிலேயே உள்ளது.
இதுபோன்ற மேலும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் கமண்ட்டில் தெரிவிக்கவும்.
Ishwar
முக்தேஸ்வருக்கு எப்படி செல்வது
விமானம் மூலம் செல்ல
அருகிலுள்ள விமான நிலையம் 100 கிமீ தொலைவிலுள்ள பாந்த்நகர் ஆகும். மேலும் டெல்லி விமான நிலையம் முக்தேஸ்வருக்கு அருகிலுள்ள பன்னாட்டு விமான நிலையமாகும். பாந்த் நகரிலிருந்து வாடகை வண்டிகள் மூலம் முக்தேஸ்வரை எளிதில் அடையலாம்.
ரயில் மூலம் செல்ல
முக்தேஸ்வரிலிருந்து மிக அருகில் இருக்கும் ரயில் நிலையம், காத்டோகம் ரயில் நிலையமாகும். 73 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து வாடகை வண்டிகள் மூலம் முக்தேஸ்வரை அடையலாம்.
சாலை மூலமாக
புதுடெல்லி, காத்டோகம் ஆகிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் மற்றும் சாலை வசதிகள் உள்ளன.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் செல்வது சிறந்தது. அல்லது சென்னையிலிருந்து ரயில்களில் செல்லும் முறையை இங்கு பார்க்கலாம்.
ரயில் மூலம் சென்னையிலிருந்து
சென்னையிலிருந்து மீரட்டுக்கு 2211கிமீ ரயிலில் பயணித்து அங்கிருந்து முக்தேஸ்வரை அடையலாம்
சென்னையிலிருந்து 2351 கிமீ ஹரித்வாருக்கு ரயிலில் பயணித்து பின் வாடகை வண்டிகள் மூலம் முக்தேஸ்வரை 280 கிமீட்டரில் அடையலாம்.
சென்னை காஸியாபாத் வழியாகவும் முக்தேஸ்வரை அடையலாம்.
முருதேஷ்வருக்கு எப்படி செல்வது
சென்னை மற்றும் கோயம்புத்தூரிலிருந்து முக்தேஸ்வரை எளிதில் அடையலாம். அல்லது கன்னியாகுமரியிலிருந்தும் கேரள மாநிலம் வழியாக முக்தேஸ்வரை அடையமுடியும்.
சென்னையிலிருந்து இயக்கப்படும் ரயில்கள்
வெஸ்ட்கோஸ்ட் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.30 மணிக்கும், மங்களூர் சென்ட்ரல் ரயில் காலை 9 மணிக்கும்,மதியம் 12.25 மணிக்கும், மங்களூர் சந்திப்பு ரயில் மதியம் 12 மணிக்கும் இருக்கிறது. இரவில் பயணிக்க விரும்புபவர்கள் 9.45 மணிக்கு செல்லும் மங்களூர் சென்ட்ரல் ரயிலை பயன்படுத்தி பயணிக்கலாம்.
கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்கள்
ஏர்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5 மணிக்கும், பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8 மணிக்கும், திருநெல்வேலி ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் இரவு பத்து மணிக்கும், நாகர்கோயில் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 4.30 மணிக்கும் இயக்கப்படுகின்றன.