செப்டம்பர் 26 இல் தொடங்கிய நவராத்திரி திருவிழா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமாக கொண்டாடப்பட்டுகிறது. இந்த ஒன்பது இரவுகள் பத்து பகல்களில், துர்கா தேவியின் ஒன்பது வெவ்வேறு வடிவங்களும் கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டிலும் நவராத்திரி விழா களைக்கட்டிவிட்டது.
சென்னையில் உள்ள நவராத்திரி சிறப்பு ஸ்தலங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் நம்மை வரவேற்கின்றன. விழாக்கோலம் பூண்டு இருக்கும் இந்த பிரபலமான நவராத்திரி சிறப்பு ஸ்தலங்களை காண இதுவே சரியான நேரம்!
சென்னை மற்றும் சென்னைக்கு அருகே அமைந்து இருக்கும் இந்த பிரசித்திப் பெற்ற அம்மன் கோவில்களுக்கு செல்வதற்கு இதோ உங்களுக்கு ஒரு சரியான கைடு!
காளிகாம்பாள் கோவில், ஜார்ஜ் டவுன்
சென்னையில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களின் பட்டியலில் காளிகாம்பாள் கோவில் முதலிடம் வகிக்கிறது. ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்படும் பாரிஸ் கார்னரில் இந்த புனித ஸ்தலம் அமைந்துள்ளது. தேவி காமாட்சிக்காக அர்பணிக்கப்பட்ட இக்கோவிலில், அன்னை ஸ்ரீ காளிகாம்பாளாக காட்சி தருகிறார்.
காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு உண்டான சம புனிதத்தன்மை இக்கோயிலுக்கும் உண்டு. தேவியின் காலடியில் சங்கராச்சாரியார் ஸ்ரீ ஆதி சங்கரர் நிறுவிய அர்த்தமேரு உள்ளது. மராட்டிய மாமன்னர் சிவாஜி, வாழ்ந்த காலத்தில் இங்கு வந்து வழிபாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர்
எலியாட் கடற்கரையில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் சந்தேகத்திற்கு இடமின்றி சென்னையில் பார்க்க வேண்டிய முக்கிய நவராத்திரி சிறப்பு ஸ்தலமாகும். லட்சுமி தேவியின் எட்டு வடிவங்களையும் இங்கு நாம் ஒரு சேர தரிசிக்கலாம்.
ஒவ்வொரு வடிவமும் வெற்றி, சந்ததி, செழிப்பு, செல்வம், தைரியம், வீரம், உணவு மற்றும் அறிவு ஆகியவற்றைக் குறிக்கிறது. நான்கு தளங்களில் கொண்ட இந்த கோவிலில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தானியலட்சுமி சன்னதிகள் முதல் தளத்தில் உள்ளது, மகாலட்சுமி மற்றும் மகா விஷ்ணு சன்னதிகள் இரண்டாவது தளத்தில் உள்ளது, மூன்றாவது மாடியில் சாந்தலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் மற்றும் நான்காவது மாடியில் தனலட்சுமி சன்னதி உள்ளது.
காமாட்சி கோவில், மாங்காடு
சென்னையின் குன்றத்தூருக்கும் பூந்தமல்லிக்கும் இடைப்பட்ட புறநகர்ப் பகுதியில் புகழ்பெற்ற மாங்காடு காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடியதால் உலகம் முழுவதும் இருளில் மூழ்கியது என்று நம்பப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, சிவபெருமான் அவரைக் கடுமையான தவம் செய்யச் சொன்னார். இப்போது கோயில் இருக்கும் இடத்தில்தான் காமாக்ஷி அம்மன் தவம் செய்ததாக கூராப்படுகிறது. சிவபெருமான் அவற்றது பக்தியால் மிகவும் நெகிழ்ந்து, அவர் முன் தோன்றி அன்னையை மணந்தார். எனவே இங்குள்ள காமாக்ஷியை வழிபடும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
வடிவுடையம்மன் கோவில், திருவொற்றியூர்
ஞான சக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில், ஞானமும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள் புரிகிறார்.
மேலும், நாள் தோறும், உச்சிக் காலை பூஜையின் போது, சிவப்பு நிற சேலை உடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப் படைக்க, பக்தர்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேற அருள் புரிகிறார்.
பூலோகத்தில், முதன்முறையாக இத்திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுவதால், இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், ஆதிபுரிஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த நவராத்திரி வேலையில் நீங்கள் இக்கோவிலுக்கு சென்று வருவது சிறப்பு.
பவானி அம்மன் கோயில், பெரியபாளையம்
சென்னை அருகே பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் கோவிலாகும். பவானி தாயே இக்கோயிலின் பிரதான தெய்வம் ஆகும். வார இறுதி நாட்கள், நவராத்திரி, ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.
குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் கோரப்பிடியிலிருந்து தப்பித்து அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில் இக்கோவிலிலேயே தங்கி விட்டாராம்.
தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவேற்காட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன் கோவிலை அணுகலாம். தேவி கருமாரியம்மன் பல்வேறு ரூபங்களில் இங்கு பல திருவிளையாடல்கள் நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது.
'வேண்டும் வரங்களை தருவாள் கருமாரி' என்ற புகழ்பெற்ற வாசகமே உள்ளது. நவராத்திரி காலத்தில் இங்கு சென்று வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.
ஆகவே மேற்கூறிய அனைத்து நவராத்திரி சிறப்பு ஸ்தலங்களையும் இந்த ஒரு வாரத்திற்குள் பார்த்துவிடுவது மிகவும் சிறப்பு. ஆகவே இப்போதே திட்டமிடுங்கள்! அம்பிகையின் ஆசி பெற்றிடுங்கள்!