பனி மூடிய மலைகளாலும், பசுமையான காடுகளாலும் சூழப்பட்ட பெரிய நகரம் தான், ஹிமாச்சல பிரதேசத்தின் சிவாலிக் மலைகளில் அமைந்திருக்கும் நஹன். 1621-ம் ஆண்டு நகான் கரன் பிரகா என்ற அரசரால் உருவாக்கப்பட்ட நகரம் இது. ரக்ஷாபந்தன் விழா நாட்களில் அவர் தொடங்கி வைத்த பட்டம் விடும் வழக்கம் இங்கே இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழ்ந்த துறவி ஒருவரின், தோழனாக இருந்த நஹர் என்பவரின் பெயரையே இந்த இடம் பெற்றதாக நம்பப்படுகிறது. அரசரொருவர் தன்னைத் தாக்க வந்த சிங்கத்தை கொல்ல எத்தனித்த போது, இங்கிருந்த துறவி 'கொல்லாதே' என்ற பொருளைத் தரும், 'நஹர்' என்ற வார்த்தையை சொன்னார்.
பாபா பன்வாரி தாஸ் என்ற துறவியால் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவம் இன்றளவும் இந்த நகரத்தின் பெயராக நிலைத்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 932 மீ உயரத்தில் அழகுற அமைந்திருக்கும் நஹன் நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுகெட்டி பாஸில் பூங்கா, சிம்பல்பாரா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ரேணுகா வனவிலங்கு சரணாலயம் ஆகிய கண்கவர் சுற்றுலாத் தலங்களை காண முடியும்.
நஹன் பல்வேறு கோட்டைகள், கோவில்கள் மற்றும் ஏரிகளையுடைய நகரமாகும். 3214 மீட்டர்களை எல்லைகளாக கொண்டுள்ள ரேணுகா ஏரி ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் மிகப்பெரிய ஏரியாகும். இந்து புராணங்களில் வரும் ஜமதக்னி முனிவர் மற்றும் அவருடைய புதல்வர் பரசுராமருடன் இந்த ஏரி தொடர்புபடுத்திப் பேசப்படும் இடமாகும். நஹன் நகரத்தின் தினசரி நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் இடங்களாக சௌகான், பிக்ராம் பாக் மற்றும் காதர்-கா-பாக் ஆகிய இடங்கள் உள்ளன. உள்ளூர் கோவில்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், ரோசின் ரூ டர்பென்டைன் தொழிற்சாலை ஆகியவை பார்வையாளர்களைக் கவரும் பிற இடங்களாகும்.
நகரின் மையப்பகுதியிலுள்ள ராணி தால் என்ற இடம் மிகப்பெரிய கோவிலையும், அதன் பின்னணியில் ஒரு குளத்தையும் கொண்டதாக இருக்கிறது. ராஜ வம்ச புகழ் வாய்ந்த ராணி தால் 'குயின்ஸ் லேக்' என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு தான் நஹன் பகுதியை ஆட்சியாளர்கள் வழக்கமாக ஓய்வெடுக்க வருவார்கள். சமீபத்தில், இந்த இடம் பொது மக்களுக்கான சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது. ராணி தால் குளம் மற்றும் தோட்டங்களில் சுற்றித் திரியும் வாத்துகள் மற்றும் கொக்குகளின் கூட்டங்கள் அந்த இடத்தின் அழகை மேலும் கூட்டுவதாக அமைந்திருக்கின்றன.
இங்குள்ள மால் சாலை இளைஞர்களைக் கவரும் மற்றுமொரு சுற்றுலாத் தலமாக இருக்கிறது. நஹனில் உள்ள கோட்டைகளில் மிகப்பழமையானதாக விளங்கும் ஜைதக் கோட்டை, கோர்க் இனத் தலைவரான ரஞ்சோர் சிங் தாபா என்பவராலும் அவரைப் பின்பற்றியவர்களாலும் கட்டப்பட்டதாகும். அவர்கள் முதலில் நஹனில் உள்ள கோடடையைத் தாக்கி அழித்து விட்டு, அதில் மிஞ்சியிருந்த பொருட்களை வைத்து ஜைதக் மலையின் மீது ஜைதக் கோட்டையை கட்டினார்கள். மேலும் மதத் தலங்களான ஜகந்நாதர் கோவில், ரேணுகா கோவில் மற்றும் திரிலோக்பூர் கோவில் ஆகியவை முதன்மையான பார்வையிடங்களாக உள்ளன. ரான்ஸர் அரண்மனை மற்றும் பக்கா தலாப் ஆகிய இடங்கள் நஹனின் பாரம்பரியத்தை காட்டும் பார்வையிடங்களாகும்.
ஜமு சிகரம் மற்றும் சூர்தார் சிகரம் ஆகிய இடங்கள் மலையேற்றம் மற்றும் மலை விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்ற பிற பார்வையிடங்களாகும் நஹனிற்கு சுற்றுலா வர திட்டமிடுபவர்கள் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் அனைத்து நாட்களிலும் பார்க்கத் தகுதியான நஹன் பகுதியில், மார்ச் மாதம் முதல் ஜுன் மாதத்தின் இறுதிவரை கோடைகாலம் இருக்கும். இலையுதிர் காலங்களில் கூட சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு பசுமையைப் போர்த்தியபடி கண்கவரும் காட்சிகளையும், மலையேற்றத்தையும் வழங்கும் இடமான நஹனிற்கு சுற்றுலாப்பயணிகள் இலையுதிர் காலத்திலும் வரலாம். குளிர்காலத்தில் நஹன் ஜில்லென்ற, உறைபனி சூழ்நிலையில் இருக்கும்.