இந்த பிரசித்தமான நல்சரோவர் பறவைகள் சரணாலயம் மத்திய ஐரோப்பாவிலிருந்து உணவையும் வெப்பத்தையும் தேடி வரும் புலம் பெயர் பறவைகளை அதிகமாக கொண்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இந்த விருந்தினர்கள் பட்டியலில் அடங்குகின்றன. ஏரிப்பகுதி மற்றும் சுற்றியுள்ள சதுப்பு நில பகுதியில் புழுக்களையும் பூச்சிகளையும் தேடி உண்டபடி புலம்பெயர் பறவைகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.
எப்போது செல்லலாம்
நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த ஏரியில் நீர் நிறைந்திருப்பதுடன் மீன்களும் அதிக அளவில் கிடைப்பது பறவைகளின் வருகையை அதிகமாக்குகிறது. இந்த ஏரி மற்றும் சுற்றியுள்ள 120 ச.கி.மீ பரப்பரளவிலான சதுப்பு நிலப்பரப்பு ஆகியவை 1969ம் ஆண்டில் அதிகாரபூர்வமாக பறவைகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
மானெக் சௌக்
மானெக் சௌக் எனும் இந்த இடம் பாபா மானெக் நாத் குருவின் பெயரால் அழைக்கப்படுகிறது. 15ம் நூற்றாண்டில் அஹமத் ஷா மன்னர் இப்பகுதியின் கோட்டையை நிர்மாணிக்கும்போது தனது அபூர்வ சக்தியால் இந்த பாபா அந்த முயற்சிகளுக்கு தடங்கல் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதாவது காலையில் கோட்டை கட்டுமான வேலைகள் துவங்கும்போது பாபாவும் ஒரு பாயை முடைய ஆரம்பிப்பார்.
பாயும் பாபாவும்
மாலையில் அவர் முடைந்த பாயை விரிக்கும்போது அன்று கட்டப்பட்ட கோட்டையின் பாகம் இடிந்து விடும். அலுத்துப்போன அஹமது ஷா மன்னர் கடைசியில் ஒரு தந்திரத்துடன் பாபாவை அழைத்து ஒரு பாட்டிலை காட்டி அதற்குள் நுழைந்து காட்டினால் அவரது மாந்திரிக திறமையை ஒப்புக்கொள்வதாக சவால் விடுத்துள்ளார்.
Jaimil joshi
மானெக் சௌக் மார்க்கெட்
பாபாவும் அவ்வண்ணமே பாட்டிலுக்குள் தன்னை நுழைத்துக்கொண்டபோது அஹமது ஷா அந்த பாட்டிலை மூடி மண்ணில் புதைத்து விட்டார். இது இப்பகுதியில் சொல்லப்பட்டு வரும் கதை. தற்போது இந்த மானெக் சௌக் மார்க்கெட் பகுதியில் காலை நேரத்தில் காய்கறி வியாபாரமும், மதிய நேரத்தில் நகை வியாபாரமும், மாலை நேரத்தில் சிற்றுண்டி விற்பனையும் மும்முரமாக நடைபெறுகின்றன. இங்குள்ள கடைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக விஜயம் செய்வதால் பரபரப்பான மார்க்கெட் பகுதியாக இந்த மானெக் சௌக் காட்சியளிக்கிறது.
Uwais
நுண்கலை மையம்
ஒரு நுண்கலை மையமான இந்த வளாகத்தில் பல பிரசித்தமான ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பிரபல ஓவியரான பி.வி. ஜோஷி இந்த வளாகத்தை நிர்மாணித்துள்ளார். ஓவியக்கலை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான அம்சங்களையும் அமைதி சூழலையும் இது கொண்டிருக்கிறது.
காந்தி ஆஷ்ரம்
அஹமதாபாத் விஜயத்தில் சிறப்பிடம் பெறும் ஒரு புனிதமான ஸ்தலமாக இந்த காந்தி ஆஷ்ரம் புகழ் பெற்றுள்ளது. மானுட வரலாற்றிலேயே அஹிம்சா வழியில் அரசியல் மாற்றத்தை உருவாக்கிட முடியும் என்று உலகிற்கு நிரூபித்த காந்திஜி இங்குதான் தனது முக்கியமான செயல்பாட்டு கேந்திரத்தை ஒரு ஆசிரம வடிவத்தில் 1917ம் ஆண்டில் உருவாக்கினார்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள தண்டி யாத்திரை இங்கிருந்துதான் துவங்கப்பட்டது. தற்போது காந்திஜியின் வரலாற்று நினைவுகள் மற்றும் ஞாபகார்த்த பொருட்கள் போன்றவற்றை தாங்கி நிற்கும் நினைவு ஸ்தலமாக இந்த காந்தி ஆஷ்ரம் (சபர்மதி ஆஷ்ரம்) வீற்றிருக்கிறது. சுய தேவைகளை சுயமாக பூர்த்தி செய்து கொள்வது குறித்த தனது பரிட்சார்த்த முயற்சிகளை இந்த ஆசிரம வசிப்பிடத்தில் காந்திஜி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nabil786
ராட்டை
ராட்டையில் நூல் நூற்பது, தறி நெய்வது மற்றும் காதி இயக்கத்தை பரப்புவது போன்ற செயல்பாடுகளில் அவர் இந்த ஆசிரமத்தில் வசித்தபடி ஈடுபட்டிருந்தார். முன்கூட்டியே பதிவு செய்துகொண்டால் இங்கு பார்வையாளர்களுக்கு காட்சி விளக்கம் அளிக்கும் வழிகாட்டியுடன் கூடிய ‘உள் வளாக சுற்றுலா சேவை'யும் வழங்கப்படுகிறது. மஹான் நிவாஸ், உபாசனா மந்திர், ஹிருதய் குஞ்ச், வினோபா-மீரா-குடில், நந்தினி, உத்யோக் மந்திர், சோம்நாத் சாத்ராலயா, டீச்சர்ஸ் நிவாஸ் போன்ற அம்சங்களை இந்த ஆசிரம வளாகத்தில் பார்வையாளர்கள் காணலாம்.
Jigar Brahmbhatt
காந்தி ஸ்மாரக் சங்க்ரஹாலயா
காந்தி ஸ்மாரக் சங்க்ரஹாலயா எனும் அருங்காட்சியகம் மற்றும் காட்சிக்கூடத்தில் காந்திஜியின் கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை பார்க்கலாம். இங்குள்ள ஆவணக்காப்பகத்தில் பல நூல்கள், வாழ்த்து மடல்கள், புகைப்பட மூலங்கள், ஆவணங்கள் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன. ஹிருதய் குஞ்ச் எனும் குடில் மஹாத்மாவும் கஸ்தூரிபாவும் வசித்த இருப்பிடமாகும்.
வினோபா-மீரா-குடில் என்பது ஆச்சார்யா வினோபா மற்றும் மீராபென் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்திய இருப்பிடமாகும். உபாசனா மந்திர் என்பது ஆசிரம உறுப்பினர்கள் ஒன்று கூடி பிரார்த்தனை செய்யும் இடமாகும். இப்படி எல்லா அம்சங்களும் காந்தி ஆஷ்ரமத்தில் அவற்றுக்குரிய பிரத்யேக அடையாளத்துடன் அதே சமயம் காந்திஜியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாக வீற்றிருக்கின்றன.
Sanyam Bahga
ஸ்வாமிநாராயண்
இந்த அக்ஷர்தாம் கோயில் சனாதன ஹிந்து தர்மத்தை பின்பற்றும் ஸ்வாமிநாராயண் பிரிவுக்கான கோயிலாகும். இளஞ்சிவப்பு நிற மணற்பாறை கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலின் உள்ளே இந்த மார்க்கத்தை உருவாக்கிய ஸ்வாமிநாராயணின் தங்க முலாம் பூசிய சிலை வீற்றிருக்கிறது. இது தவிர ஸ்வாமி குணாதிதானந்த் மற்றும் ஸ்வாமி கோபாலந்த் ஸ்வாமி ஆகியோரின் சிலைகளும் இந்த சிலையின் இரு புறமும் காணப்படுகின்றன. அக்ஷர்தாம் கோயில் மூன்று தளங்களை உள்ளடக்கியிருக்கிறது. ஹரி மண்டபம் என்பது பிரதான தளமாகவும், விபூதி மண்டபம் மேல் தளமாகவும், பிரசாதி மண்டபம் தரைத்தளமாகவும் அமைந்துள்ளன. ஏழு தூண்கள், 210 சாரங்கள், 25 குமிழ் மாட கோபுரங்கள் மற்றும் 8 ஜரோகாக்கள் ஆகியவற்றை இந்த கோயில் கொண்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் கலையம்சம் நிரம்பிய சிற்பப்பொறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் இந்த கோயில் கட்டுமானத்தில் எங்குமே இரும்பு அல்லது வேறு உலோகம் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
Harsh4101991
சல்லடை சன்னல் அமைப்பு
கல்லில் வடிக்கப்பட்ட நுணுக்கமான சல்லடை சன்னல் அமைப்பு வேலைப்பாடுகளையும் இந்த கோயிலில் பார்க்கலாம். கோயில் வளாகத்தில் சனாதன ஹிந்து மார்க்கத்தின் வரலாறு மற்றும் இதர தகவல்கள் குறித்த காட்சிப்பட திரையிடல் தினமும் நடத்தப்படுகிறது. வேதங்கள், புராணங்கள் மற்றும் பழமையான ஹிந்து புனித நூல்களிலிருந்து முக்கிய கருத்துகள் இந்த திரைக்காட்சியில் எடுத்துக்காட்டப்படுகின்றன. கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைவழிப்பாதை அமைப்பில் 356 தூண்கள் வீற்றுள்ளன என்பது ஒரு குறிப்பிடத்தக்க்க தகவலாகும். அறிஞர்கள் மற்றும் தத்துவ ஆர்வலர்கள் விரும்பும் வகையில் சமூக ஒற்றுமை குறித்த ஆராய்ச்சிக்கான ஒரு மையமும் இந்த கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
vaibhav shukla