காட்டு மயிலுக்கான சரணாலயமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த நன்னஜ் பகுதி முதலில் திரு பி. எஸ். குல்கர்னி எனும் பறவை ஆராய்ச்சியாளரால் 1971ம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்சமயம் இது எல்லோராலும் அறியப்பட்ட சரணாலயமாகவும் சர்வதேச சுற்றுலா மையமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. காட்டு மயில் இங்கு உள்ளூர் மொழியில் 'மல்தோக்' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிய வகை பறவையாகும். மயிலைப்போன்று இருக்கும் இந்தப் பறவை மயில் அல்ல.
எப்படி இருக்கும்
உருவத்தில் பெரிதாகவும் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம் கலந்து தோற்றமளிக்கும் இது சாதாரணமாக வறண்ட மற்றும் வறண்ட புல்வெளிப்பகுதிகளில் வசிக்கிறது. ஆண் காட்டு மயில் 122 செ.மீ நீளமும் பெண் காட்டு மயில் 92 செ.மீ நீளமும் இருக்கும்.
இந்த சரணாலயம் ஏறக்குறைய 8500 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இதற்குள் 14 ம் நூற்றான்டில் கட்டப்பட்ட ஒரு முஸ்லிம் கோட்டையும் காணப்படுகிறது.காட்டு மயில் தவிர இந்த வனவிலங்கு சரணாலயத்தில் கீரி, இந்திய நரி, கறுப்பு மான் மற்றும் ஓநாய் போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.
Madhukar B V
எப்படி செல்வது
மகராஷ்ட்டிரா மாநிலம் சோலாப்பூரிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ள நன்னாஜ்ஜிலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது இந்த காட்டுயிர் மயில் சரணாலயம். சோலாப்பூரிலிருந்து 40 நிமிடங்களில் இந்த இடத்தை அடையலாம்.
அருகிலுள்ள இடங்கள்
ஆசர் மஹால் என்று அழைக்கபடும் இந்த வரலாற்று சின்னம் (கட்டிடம்) அப்போதைய அரசாட்சியின் நீதி மண்டபமாக திகழ்ந்துள்ளது. முகமது அடில் ஷா மன்னரின் மேற்பார்வையில் இது 1646ம் ஆண்டு எழுப்ப ப்பட்டுள்ளது.
இந்த நினைவுச்சின்னம் மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை தாங்கி நிற்பது குறிப்பிட த்தக்கது.நீதி மண்டபமாக மட்டுமன்றி இறைத்தூதர் முகமதுவின் தாடி ரோமங்கள் புனிதப்பொருளாக இங்கு பாதுகாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியும் நுட்பமான கலை அம்ச வேலைப்பாடுகளை கொண்டுள்ளது. இந்த மண்டபத்தின் மேல் தளத்தில் அற்புதாமான ஃபிரஸ்கோ ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டபத்தில் வருடா வருடம் ‘உர்ஸ்' திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த மண்டபத்தின் முன் பகுதியில் ஒரு சதுர வடிவ குளம் காணப்படுகிறது. இங்கு அரச குடும்ப பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த்தாக சொல்லப்படுகிறது. இங்குள்ள மூன்று குளங்களில் இது பெரிதாகவும் 15 அடி ஆழத்துடனும் காணப்படுகிறது. மற்ற இரண்டு குளங்கள் அளவிலும் ஆழத்திலும் சிறிதாக காணப்படுகின்றன.
இந்த வரலாற்று சின்னத்தின் பின் பகுதியில் பார்த்தால் ஒரு பழைய மசூதியின் இடிபாட்டு மிச்சங்களைக் காணலாம். அழகிய வேலைப்பாடுடன் கூடிய வாயிற்பகுதி இந்த மசூதியில் காணப்படுகிறது.
குறிப்புகள் காணப்படும் பல கல்வெட்டுக்கற்கள் இங்கு காணப்படுகின்றன. ஆசர் மஹால் தற்சமயம் இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப் படுகிறது.
ஹிப்பர்கா ஏரி
ஹிப்பர்கா ஏரியும் அதை ஓட்டியுள்ள ஏக்ரூக் குளமும் சேர்ந்து உருவானது தான் இந்த ‘ஏக்ரூக் ஹிப்பர்கா ஏரி' ஆகும். இந்தக் குளம் சோலாப்பூர் பகுதி ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது உருவாக்கப்பட்டுள்ளது.
அப்போதைய ஆங்கிலேய தளபதி அதிகாரி ஒருவரால் இது திட்டமிடப்பட்டுள்ளது.வருடம் முழுதும் நீர் நிரம்பி காணப்படும் இந்த ஏரி சோலாப்பூர் மாவட்டம் முழுமைக்குமான நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது. ஏக்ரூக் நீர்த்திட்டம் தக்காண பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நீர்த்திட்டமாக கருதப்படுகிறது.
கோல் கும்பத்
சோலாப்பூர் நகரத்திலிருந்து 100 கி.மீ தூரத்தில் பீஜாப்பூரின் ஒரு பகுதியாக இந்த கோல் கும்பத் (அல்லது கோல் கும்பஸ்) அமைந்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய கலைப்பெருமையை பிரதிபலிக்கும் இதன் கட்டிடக்கலை அம்சத்துக்காக இது இந்தியாவிலேயே அதி முக்கியமான பிரசித்தி பெற்ற ஒரு வரலாற்று கலைச்சின்னமாக அறியப்படுகிறது.
கோல் கும்பத் என்ற பெயருக்கு ரோஜாக் கோபுரம் (குமிழ் கோபுரம்) என்பது பொருளாகும். ரோஜா மற்றும் தாமரை மலர் இதழ்கள் விரிந்தது போன்ற விதானக்கட்டமைப்பினை இந்த குமிழ் கோபுரம் பெற்றுள்ளதால் ரோஜாக்கோபுரம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் இந்த கலைச்சின்னம் பீஜாப்பூர் சுல்தான் மொஹம்மது அடில் ஷாவின் சமாதி மண்டபமாகும். 1656ல் காபூலைச் சேர்ந்த யாக்கத் எனும் அக்காலத்திய கீர்த்தி பெற்ற கட்டிடக்கலை நிபுணரால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
18000 சதுர அடிப்பரப்பில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட கலைச்சின்னத்தின் உள் ‘குவி விதான அமைப்பு' உலகின் தலைசிறந்த உள்விதான வடிவமைப்புகளில் ஒன்றாகும்.
இந்த மண்டப குவி விதானத்தின் மேல்மாடப்பகுதி அதிநுட்பமான ஒலியியல் தன்மையுடன் கட்டப்பட்டு‘ஒலிமாடம் (whispering gallery) என்று அழைக்கப்படுகிறது. இந்த மாடப்பகுதியில் எழுப்பப்படும் எந்த ஒரு சிறு சத்தமும் அதன் எதிர்ப்பகுதிகளில் துல்லியமாக எதிரொலிக்கப்படுகிறது. அது மட்டுமன்றி பல நுட்பமான கட்டிடக்கலை அம்சங்களின் உன்னத வடிவமைப்பாக இந்த குவிவிதானம் காட்சியளிக்கிறது.
பார்ப்பதற்கு எளிமையாக அதே சமயம் வரலாற்று காலத்தின் கட்ட்டக்கலை மஹோன்னதத்தை பறை சாற்றும் இந்த கும்பத் சின்னம் ‘தக்காண கட்டிடக்கலையின் உச்சம் ‘ என்று அழைக்கப்படுகிறது.
Ashwatham