இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக நவராத்திரி கொண்டாட்டம் ஏற்கனவே களைக்கட்ட தொடங்கிவிட்டது! மஹாலய அமாவாசை முடிந்த கையோடு நவராத்திரி விழா தொடங்கிவிடுகிறது. புரட்டாசி பிறந்த உடனே, தமிழ்நாடு முழுவதும் நவராத்திரி அதிர்வின் சாயல்களை நாம் உணரலாம்.
இந்த ஒன்பது இரவுகள் பத்து பகல்களில், தேவியின் ஒன்பது வெவ்வேறு வடிவங்கள் நடெங்களிலும் வழிபடப்படுகின்றன. தமிழ்நாட்டில் தேவிக் கோவில்களில் நவராத்திரி கொண்டாட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இங்குள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் கோவில்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த பிரபலமான கோவில்களின் அழகினைக் காண கண் கோடி வேண்டும்! நவராத்திரி காலத்தில் அன்னையின் ஆசியைப் பெற நீங்கள் கீழ்க்கண்ட கோவில்களுக்கு செல்ல வேண்டும்!
மதுரை மீனாட்சி கோவில்
உலகெங்கிலும் இருந்து பக்தர்களை ஈர்க்கும் மதுரை மீனாட்சி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவிலாகும். கோவில் வளாகமே வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது நாள் நவராத்திரி திருநாட்களில் மீனாட்சி அம்மனுக்குச் சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்படும். இந்த நேரத்தில் அம்மனை தரிசிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
காமாட்சி அம்மன் கோவில்
தமிழ்நாட்டிலும் அதைச் சுற்றிலும் பல அம்மன் கோயில்கள் இருந்தாலும், மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த கோயிலாகக் கருதப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலாகும். நவராத்திரியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேங்களும் ஆராதனைகளும் அலங்காரங்களும் மேற்க்கொள்ளப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவில்
சுயம்புவாக போற்றப்படும் இந்த மாரியம்மன் வீற்றிருக்கும் சமயபுரம் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ற அம்மன் கோவிலாகும். இங்கு சாதரணமாக வந்து தரிசித்து செல்வதே மிகவும் விசேஷம் என்று கூறப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டத்தில் இக்கோவிலை தவற விடலாமா?
சென்னை காளிகாம்பாள் கோவில்
சென்னை மையத்தில் ஜார்ஜ் டவுனில் திராவிட கட்டிடக்கலை அழகோடு காளிகாம்பாள் கோவில் பார்ப்போரை தன்வசப்படுத்துகிறது. மாபெரும் மராட்டிய வீரரான சத்ரபதி சிவாஜி மகாராஜ் கூட 17ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுள்ளாராம். நவராத்திரி காலத்தில் காளிகாம்பாளை நிச்சயம் தரிசிக்க வேண்டும்.
திருக்கடையூர் அபிராமி கோவில்
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதஷாந்தி, சதாபிஷேகம் ஆகியவற்றை செய்ய நாம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு தான் வருகை தர வேண்டும். அபிராமி தாய் பக்தருக்காக காட்சியளித்த அற்புத ஸ்தலம் இதுவாகும். நவராத்திரி நேரங்களில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள், அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஸ்ரீபுரம் பொற்கோயில்
தமிழ்நாட்டின் தெற்கு வேலூரில் உள்ள திருமலைக்கொடியில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில் பார்ப்பதற்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாக நட்சத்திர வடிவத்திற்குள் அமைந்து இருக்கிறது. முழுக்கோவிலும் தங்கப் படலத்தால் மூடப்பட்டு ஜொலிக்கிறது. நவராத்திரி நேரத்தில் இங்கு வருவது மிகவும் விசேஷமானது!
மேற்கூறிய அனைத்துக் கோவில்களிலும் நவராத்திரியை முன்னிட்டு அன்னைக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த நவராத்திரி காலத்தில் அன்னையை தரிசிப்பது, நமக்கும் நம் வாழ்விற்கும் பல நன்மைகளை பயக்கும்!