நீலகிரி மாவட்டம், குளுகுளுவென்ற காலநிலையும், பசுமை நிறைந்த வனப்பகுதிகளும் நிறைந்த தென்னிந்தியா மட்டுமின்றி உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். ஊட்டி, கோத்தகிரி, தொட்டபெட்டா, கூடலூர், குன்னூர் என நீலகிரி மலைப் பிரதேசம் முழுவதுமே பல்வேறு சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதிலும், சீசன் காலங்களில் இங்கு பூத்துக் குலுங்கும் பூக்களைக் காண உலகின் மூலைமுடுக்கில் இருந்து எல்லாம் கூட பயணிகள் இங்கே வருவது வழக்கம். இந்நிலையில், ஒட்டுமொத்த நீலகிரி மலையும் 12 வருடம் கழித்து தற்போது நீலநிறமாக காட்சியளிப்பதில் பின்னணி என்ன என பார்க்கலாம் வாங்க.
குறிஞ்சி மலர்கள்
குறிஞ்சி மலர்கள் என்றாலே தனிச்சிறப்பு பெற்றவை தான். மற் பூக்களைப் போல அல்லாமல் குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இப்பூக்கள் பூக்கும். அதுவும் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே என்பதால் பலராலும் விரும்பக்கூடிய மலராக இது உள்ளது. குறிப்பாக, மலைப் பிரதேசங்களில் மட்டுமே இவ்வகையான பூக்கள் பூக்கும்.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியங்களில் மலையும் மலை சார்ந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்பட்டது. மலைகளில் இந்த மலர்கள் அபூர்வமாக மலர்வதால், இந்த மலர்களின் பெயரிலேயே மலைப் பகுதிகளையும் அழைக்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர், மிதமான வெப்பநிலை நிலவும் பகுதிகளில் மலர்வதுண்டு.குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் குறிஞ்சிப் பூ பூத்துக் குலுங்கும்போது மலைப் பகுதிகள் கவர்ச்சி அடைகின்றன.
நீலமான நீலகிரி
நீலகிரி மாவட்டமானது வருடம் முழுவதும் ஜில்லென்ற கால நிலையையும், மலை முகடுகளையும் கொண்டுள்ள பகுதி என்பதால் இங்கே அரிய வகையிலான பல மலர்களும், செடிகளும் பரவலாக காணப்படுகின்றன. அந்த வகையில் விதவிதமான குறிஞ்சி செடிகளும் இங்குள்ள மலைப் பகுதிகளில் உள்ளது.
குறிஞ்சி ரகங்கள்
நம் நாட்டில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட வகையில் குறிஞ்சி மலர்கள் உள்ளன. இவற்றில் சில வகைகள் 6 மாதங்களுக்கு ஒரு முறையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், சிலவை மூன்று மாதங்களுக்கு என பூக்கும் தன்மை உடையது. அவற்றுள் தற்போது நீலகிரியில் பூத்திருப்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி ஆகும்.
நீலகிரிக் குறிஞ்சி
நீலகிரி மலையில் மலரும் இரண்டு வகை குறிஞ்சிப் பூக்களில் சிறிய வகைக் குறிஞ்சிப் பூக்களை மினியேச்சர் குறிஞ்சி என அழைக்கின்றனர். இவற்றை இந்தப் பகுதி மக்கள் சோழா குறிஞ்சி மற்றும் கட்டசொப்பு எனவும் அழைக்கின்றனர். வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இந்த குறிஞ்சிப் பூக்கள் மலர ஏதுவான தட்ப வெப்பநிலை அமையும். ஆனால் செப்டம்பர் மாதத்திலேயே குறிஞ்சி பூப்பதற்கு ஏற்ற வெப்பநிலை நிலவ ஆரம்பித்ததால் மலர்கள் இப்போதே பூத்துக் குலுங்கத் தொடங்கிவிட்டன.
மலையை போர்த்திய மலர்
உதகை அருகிலுள்ள அணிக்கொரை, எப்பநாடு, சின்னக் குன்னூர் மற்றும் மஞ்சூர் பகுதியிலுள்ள முள்ளி, முக்கி மலைப் பகுதிகளில் நீல நிற குறிஞ்சி மலர்கள் அதிகளவில் பூத்துகுலுங்குகின்றன. குறிப்பா,க மலை முகடுகள் முழுவதும் ஏதோ போர்வை போர்த்தியது போல குறிஞ்சி மலர்கள் அலங்கரித்து காட்சியளிக்கின்றன.
வயதைக் கணிக்கும் குறிஞ்சி
நீலகிரி மலைக் காடுகளில் பல மலைவாழ் மக்களும் வசித்து வருகின்றனர். அவர்கள் மலையில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களைக் கொண்டே தங்களுக்கான வயதைக் கணிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். குறிஞ்சிச் செடிகளில், ஒரு சில 3 மாதத்துக்கு ஒருமுறையும், 7 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 17 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மற்றும் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன என்றும் கண்டுள்ளனர்.
தவறவிட்ராதீங்க
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை என ழுத்துக் குலுங்கும் இதுபோன்ற குறிஞ்சி மலர்களை அவ்வளவு எளிதில் காண முடியாது. ஆனால், தற்போது நீலகிரி, ஊட்டி பகுதியில் இப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வாய்ப்பிருந்தால் அனைவரும் ஒருமுறையேனும் சென்று இதனை கண்டு ரசித்து வர வேண்டும். தவறவிட்டால் அடுத்த 12 வருடம் காத்திருக்க நேரிடும்.