நீலேஷ்வரம் மகாராஜாக்களின் அரசாட்சி செயல்பட்டு வந்த இடமான நீலேஷ்வரம், பேக்கல் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 'நீலகண்ட' மற்றும் 'ஈஸ்வர்' ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து நீலேஷ்வரம் என்று அறியப்படுகிறது. இந்தப் பகுதி கேரளாவின் முக்கிய கலாச்சார மையமாக திகழ்ந்து வருகிறது. நீலேஷ்வரம் நகரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அரண்மனை தொல்பொருள் துறையினரின் நாட்டுப்புறவியல் மையமாக கருதப்படுகிறது.
இதுதவிர நீலேஷ்வரம் நகரம் கவுஸ் எனப்படும் பல்வேறு ஆலயங்களுக்க்காகவும் பிரபலம். இங்கு உள்ள யோகா மற்றும் கலாச்சார மையங்களில் மூலிகை குளியல், சேற்றுக் குளியல் போன்ற இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலேஷ்வரம் நகரின் கிழக்கு எல்லையாக மேற்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கே லக்ஷ்வதீப்பும், வடக்கே காசர்கோடும், தெற்கு எல்லைகளாக வயநாடு மற்றும் கோழிக்கோடு நகரங்களும் அமைந்திருக்கின்றன. மேலும் நீலேஷ்வரம் நகரின் இயற்கை சூழலும், காயல் நீர்பரப்பின் வசீகரிக்கும் தோற்றமும் உங்களுக்கு மறக்க முடியாத சுற்றுப் பயண அனுபவமாக அமையும்
நித்யானந்தாஷ்ரம் குகைகள்
கேரளாவின் ஹோஸ்துர்க் நகரத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நித்யானந்தாஷ்ரம், சுவாமி நித்யானந்தாவால் நிறுவப்பட்டது. இங்கு மொத்தம் 45 குகைகள் செம்பூராங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த குகைகள் புகழ்பெற்ற ஹோஸ்துர்கா கோட்டைக்கு வெகு அருகில் அமைந்திருக்கிறது.
நித்யானந்தாஷ்ரம் குகைகள் தியானம் செய்வதற்கு வெகுப் பொருத்தமான இடம். இதன் காரணமாக உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த குகைகளை தேடி வந்து செல்கின்றனர். இங்கு அமர்ந்திருக்கும் நிலையில் காணப்படும் சுவாமியின் பஞ்சலோக சிலை மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த குகைகள் காசர்கோடிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் நித்யானந்தாஷ்ரம் குகைகளை நீங்கள் எந்த சிரமமுமின்றி அடையலாம்.
சந்திரகிரி கோட்டை
சந்திரகிரி கோட்டை தனக்கு ஒரு புறத்தில் தென்னை மரங்கள் எல்லையமைத்த சந்திரகிரி நதியையும், மறுபுறம் பிரம்மாண்ட அரபிக் கடலையும் கொண்டு மனதை மயக்கும் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோட்டையின் மேற்கு பாதுகாப்பு அரண் அமைந்துள்ள பகுதியிலிருந்து நீங்கள் கண்ணை கவரும் சூரிய அஸ்த்தமன காட்சியை கண்டு ரசிக்கலாம். சந்திரகிரி கோட்டை 17-ஆம் நூற்றாண்டில் பெடானூரை சேர்ந்த சிவப்ப நாயக் மன்னரால் கட்டப்பட்டது.
அப்போது கொளத்துநாடுக்கும், துளுநாடுக்கும் சந்திரகிரி நதிதான் எல்லையாக இருந்து வந்தது. இந்த இரு சாம்ராஜ்யங்களும் அந்த காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக விளங்கி வந்தன. அதன்பிறகு விஜயநகர பேரரசு துளுநாட்டை கைப்பற்றி சந்திரகிரியை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு சந்திரகிரி சுதந்திர பிரதேசமானதால், சந்திரகிரி கோட்டை அங்கு கட்டப்பட்டது. மேலும் அதன் பின்னர் சந்திரகிரி கோட்டை மைசூர் ஹைதர் அலியால் கைப்பற்றப்பட்டு, பின்னர் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் வசம் சென்றது. இப்போது இந்தக் கோட்டையை தொல்பொருள் துறையினர் பராமரித்து வருகின்றனர்.