இந்து சமயத்தின்படி இந்த அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மா. அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவராக விஷ்ணுவும், அழித்தல் தொழிலைச் செய்பவராகச் சிவனும் கருதப்படுகின்றனர். இந்துக் கடவுளரில் மிகவும் முக்கியமான இம்மூவரையும் மும்மூர்த்திகள் எனக் குறிப்பிடுவர். இவ்வாறு இந்த ஒட்டுமொத்த உலகத்தையே படைத்து, ஒவ்வொரு செயல்களையும் வடிவமைத்து வழங்குவதாகக் கருதப்படும் பிரம்மாவின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த நிதீஸ்வரர் என்ற சிவன் எங்கே அருள்பாலிக்கிறார் என தெரிந்துகொள்வோம் வாங்க.
பிரம்ம புராணம்
பிரம்ம புராணத்தின்படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி இந்த உலகத்தையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், உணர்வு ஆகியவற்றைப் பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலகர், புலஸ்தியர், கிரது முதலிய சப்த ரிசிகளையும் படைத்தவர். சுவயம்புமனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். இவர்களின் மகன் மனு என அறியப்படுகிறது. மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர் என்றும் பெயர் வந்ததாகத் தெரிகிறது.
Ms Sarah Welch
வரம் தரும் பிரம்மன்
மும்மூர்த்திகளுள் ஒருவர் என்பதால், வரம் கொடுக்கும் தகுதியுடைய கடவுளாக பிரம்மா உள்ளார். அரக்கர்களுக்கு வேண்டிய வரத்தினை தருபவராகவும், அவர்கள் பெற்ற வரத்தின் காரணமாக அவர்கள் அழிவதற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமரிசியையும், பெருவிரலிருந்து தட்சணையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்திரர்களை பிரம்மா உருவாக்கினார் என மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது.
Tktru
தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர்
இவ்வாறு படைத்தல் என்னும் மாபெரும் சக்தி கொண்ட பிரம்மாவிற்கு கனிவுகொண்ட சிவன் தலையெழுத்தை மாற்றி எழுதிய திருத்தலம் தமிழகத்தில் எங்கே, எப்படி உள்ளது ? அத்தலத்திற்குச் சென்று வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என தெரியுமா ?
Wayoyo
எங்கே உள்ளது ?
விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோவில். விக்கிரவாண்டி, பேரணி வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். திண்டிவனத்தில் இருந்து வராகப்பட்டு வழியாக வெறும் 10 கிலோ மீட்டர் பயணித்தாலும் நிதீஸ்வரர் கோவிலை அடையலாம்.
கோவில் சிறப்பு
உலகில் உள்ள அனைத்து ஜீவன்களின் தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவன் வீற்றிருக்கும் தலம் இது என்பது இக்கோவிலின் சிறப்பாகும். செல்வங்களின் கடவுளாக போற்றப்படும் குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலம் இது. மேலும், சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் பிரம்மாவுக்கு திருவுருவச் சிலை காணப்படுவது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.
Gazal world
புண்ணியத் தலம்
பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக் கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோவில்கள் தவிர்த்து, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும் நடைமுறை இல்லை. இப்படி இருக்க இத்தலத்தில் பிரம்மனுக்கு உருவ வழிபாடு இருப்பது அதிசயங்களில் ஒன்றாகவே உள்ளது.
Vaishni
திருவிழா
சிவ பெருமானுக்கு உகந்த நாட்களாகப் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி அன்று இத்திருத்தலத்தில் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாட்களில் மூலவர் மற்றும் சன்னதியில் உள்ள கனகதிரிபுரசுந்தரி ஆகியோருக்குச் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்படுகின்றன.
Akhilvijayannooranad
நடைதிறப்பு
அருள்மிகு நிதீஸ்வரர் கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.
Ssriram mt
வழிபாடுகள்
இல்லறத்தில் ஐஸ்வர்யங்கள் பெருகவும், குழந்தை வரம், தொழிலில் முன்னேற்றம், வீடு, வாகன யோகம் உள்ளிட்டவை கிடைக்கவும், சூனியம் உள்ளிட்ட கெடுதல்களில் இருந்து விலகவும் இங்கு பிரார்த்தனைகள் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
Muthukumaran pk
நேர்த்திக்கடன்
பூச நட்சத்திரம், பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் இத்தலத்தில் உள்ள சிவ பெருமானை வழிபட்ட அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தொல்லை விலகும் என்பது தொன்நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர் அம்பாளின் பாத அடியில் வெண்ணெய் வைத்து வேண்டிவர குழந்தை பாக்கியம் கிடைக்கும். இக்கோவிலில் மேற்கு நோக்கியவாறு உள்ள ஈசனின் நேர்ப்பார்வையில் அமைந்துள்ள காலபைரவரை தேய்பிறை அஸ்டமி நாட்களில் நெய் தீபம் வைத்து வேண்டுவதன் மூலம் குடும்பச் சண்டைகள் தீர்ந்து, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.
Ssriram mt
சோழரின் கலையம்சம்
ராஜராஜ சோழரால் தமிழகத்தில் பல பகுதிகளில் பல கோவில்கள் கட்டமைக்கப்பட்டுள்ன. இதனைச் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்களின் கல்வெட்டுகளில் இருந்தும், கலைநயத்தில் இருந்தும் அறிய முடிகிறது. அவ்வாறு சோழர் கட்டிய கோவிலில் அம்மனவே வியந்து வணங்கிய கோவில்தான் அன்னம்புத்தூரில் உள்ள நிதீஸ்வரர் ஆலயம். இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் என கண்டறியப்படுகிறது.
KARTY JazZ
எப்படிச் செல்வது ?
சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக 128 கிலோ மீட்டர் பயணித்தால் திண்டிவனத்தை அடையலாம். அங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் தான் அன்னம்புத்தூர் அருகே நிதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து 39 கிலோ மீட்டர் பயணித்தும் அன்னம்புத்தூர் நிதீஸ்வரர் கோவிலை அடையலாம்.