உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். "ஒற்றை லட்டுக்கு கொட்டோ கொட்டுது பார் துட்டு" என்ற சினிமா வசனம் போல திருப்பதி உண்டியல் காணிக்கை நிரம்பி நாள்தோறும் நிரம்பி வழிகிறது. அதிகப்படியான பணத்தை கணக்கிடுவதற்கு இடம் பற்றாக்குறையாக இருந்ததால் தேவஸ்தானம் சார்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் அந்த கட்டிடத்தில் திருமலையானின் உண்டியல் காணிக்கை கணக்கிடப்படும். காணிக்கை பணம் கணக்கிடுவதை பக்தர்கள் வெளியில் இருந்து பார்க்கும் வகையில் அந்த வளாகத்தில் கண்ணாடி சுவர்கள் பொருத்தப்பட்டுள்ளன!
கோடிகளை காணிக்கையாக பெறும் ஏழுமலையான்
தினந்தோறும் 70,000 முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் வரை திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்கின்றனர். கலியுகவரதனாக நம்மை காத்து அருளும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கையை அளித்து மகிழ்கின்றனர். கடந்த ஜனவரி 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி அன்று மட்டும் திருப்பதியில் கிட்டத்தட்ட 7.68 கோடி ரூபாய் காணிக்கையாக வந்துள்ளது. இதுவே ஒரு நாளில் இதுவரை கிடைத்த அதிகபட்ச காணிக்கையாம். ஆண்டுக்கு ரூ.1000 கோடி முதல் 1200 கோடி வரை கிடைக்கிறது. மேலும் ஒரு டன் எடையுள்ள தங்க நகைகள் காணிக்கையாக கிடைக்கின்றன.
திருப்பதி கோவிலுக்கு உள்ளே காணிக்கை கணக்கெடுப்பு
தினமும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3 முதல் 5 கோடி வரை உண்டியலில் காணிக்கையாக வசூலாகிறது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், ஆபரணங்கள் ஆகியவற்றை கோவிலுக்கு உள்ளேயே கணக்கிட்டு பணத்தை வங்கிகளில் தேவஸ்தான நிர்வாகம் செலுத்தி வருகிறது. காணிக்கையாக கிடைக்கும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்திற்கு பாதுகாப்பாக எடுத்து சென்று அங்கு அவற்றை பத்திரப்படுத்தி வருகின்றனர்.
காணிக்கை கணக்கிட இடவசதி பற்றாக்குறை
தினந்தோறும் கோடிக்கணக்கில் பணம் வருவதால் அதனை கணக்கிட முடியாமல் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சிரமப்பட்டு வந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் இடத்தில் இட பற்றாக்குறை உள்ளதால் புதிய கட்டிடம் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் நிதி உதவியுடன் கோவிலில் இருந்து 250 மீட்டர் தொலைவில் ரூ.23 கோடியில் புதிய பரகாமணி கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடத்தை கடந்த பிரமோற்சவத்தின்போது திருமலைக்கு வந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். ஏழுமலையான் கோவிலில் இருந்து உண்டியலை கிரேன் மூலம் எடுத்துச் சென்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட உள்ளது.
நிறைவுப்பெற்ற பணிகள்
உண்டியலை எடுத்துச் செல்லும் கிரேன் மற்றும் எந்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததால் பிப்ரவரி 5 ஆம் தேதி புதிய கட்டிடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். உலகிலேயே பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட உள்ளது.
ஏழுமலையான் காணிக்கையை நீங்களும் பார்க்கலாம்
காணிக்கை பணம் கணக்கிடுவதை பக்தர்கள் வெளியில் இருந்து பார்க்கும் வகையில் அந்த வளாகத்தில் கண்ணாடி சுவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதி நவீன சிசிடிவி கேமராக்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே நம்பர் 1 பணக்கார கோவிலான திருமலை திருப்பதி வெங்கடேச பெருமானின் காணிக்கைகள் முதல் முறையாக கோவிலை விட்டு வெளியே எடுத்துச் சென்று கணக்கிடப்பட இருக்கிறது. நீங்கள் திருப்பதி சென்றால் காணிக்கை கணக்கிடப்படும் இடத்தை மறக்காமல் பார்த்து வாருங்கள்!