Search
  • Follow NativePlanet
Share
» »பாண்டிச்சேரியில் ஒரு நாள்!

பாண்டிச்சேரியில் ஒரு நாள்!

By

பாண்டிச்சேரியை ஆண்டு வந்த கலைகளின் தாயகம் என்றறியப்படும் பிரான்ஸ் தேசம் வளமான கலாச்சாரத்தையும், அற்புதமான கட்டிடக்கலையையும் இந்த நகரத்திற்கு பரிசாக வழங்கிச் சென்றுள்ளது.

இப்போதும் பாண்டிச்சேரியில் எங்கும் வியாபித்து இருக்கும் பிரெஞ்சு கலாச்சாரமும், பாரம்பரியமும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உண்மையில் பிரெஞ்சு தேசத்தில் இருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும்.

பாண்டிச்சேரியில் ஒருநாள் பொழுதை கழிப்பதென்பது சொர்கத்தின் வாயிலை தொட்டுத் திரும்புவது போல. ஏனெனில் மாறுபட்ட கலாச்சாரம், அற்புதமான கட்டிடங்கள், ருசியான உணவு வகைகள், எல்லாவற்றுக்கும் மேலாக அமைதியும் ஏகாந்தமும்.

நீங்கள் பாண்டிச்சரி வந்தால் சுன்னாம்பாறு போட் ஹவுஸிலிருந்து உங்கள் பயணத்தை தொடங்குவது சிறப்பான தொடக்கமாக இருக்கும்.

அதன் பின்னர் அரிக்கமேடு, பொட்டானிக்கல் கார்டன், பிரெஞ்சு வார் மெமோரியல், பாண்டிச்சேரி கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என்று ஒரு உலா வந்தீர்கள் என்றால் சொர்கத்தின் வாயிலை தொடுவது என்றால் என்னவென்று உங்களுக்கு விளங்கும்.

இவை யாவும் 50 கிலோமீட்டர் சுற்றளவில் அருகருகேயே அமைந்துள்ளது நம் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு சுற்றிப்பார்க்கவும் எளிமையாக இருக்கும்.

சுன்னாம்பாறு போட் ஹவுஸ்

சுன்னாம்பாறு போட் ஹவுஸ்

பாண்டிச்சேரி ரயில் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது சுன்னாம்பாறு போட் ஹவுஸ். இந்த சுன்னாம்பாறு பகுதியில் பேரடைஸ் பீச் எனும் அழகிய கடற்கரை ஒன்று உள்ளது. இங்கு கொஞ்சி கொஞ்சி துள்ளி விளையாடும் டால்ஃபின்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அதோடு இங்குள்ள சுன்னாம்பாறு பீச் அண்ட் பேக்வாட்டார் ரிசார்ட் பயணிகளுக்காக படகு பயணம், டிரெக்கிங், பிக்னிக் போன்றவற்றை ஏற்படுத்தி கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் இங்கு பீச் வாலிபால் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டும் பொழுதை கழிக்கலாம். மேலும் இந்த பகுதியில் நீங்கள் இரண்டு மூன்று நாட்கள் தங்க விரும்பினால் அட்டகாசமான குடில்கள் மரங்களின் உச்சியில் காத்துக்கொண்டிருக்கின்றன.

அரிக்கமேடு

அரிக்கமேடு

அரிக்கமேடு பகுதியில் மார்ட்டிமோர் வீலர் என்பவர் 1940-களில் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அரிக்கமேடு பகுதி கருதப்படுகிறது. அதோடு வீலரின் கூற்றுப்படி சோழர் காலத்தில் மீனவ கிராமமாகவும், துறைமுக நகரமாகவும் இருந்த அரிக்கமேடு பகுதியில் சோழப் பேரரசிற்கும், ரோமானிய பேரரசிற்கும் இடையே வணிகப் போக்குவரத்து நடந்துள்ளது. மேலும் ரோமானிய பேரரசின் கலைநயத்தை விளக்கும் மட்பாண்டங்கள் பெருமளவில் அரிக்கமேட்டில் கிடைத்து வருகின்றன. எனவே நீங்கள் பாண்டிச்சேரி வரும்போது அரிக்கமேட்டை தவறவிட்டுவிடாதீர்கள்.

பொட்டானிக்கல் கார்டன்

பொட்டானிக்கல் கார்டன்

பாண்டிச்சேரியில் 1826-ம் ஆண்டு திறக்கப்பட்ட பொட்டானிக்கல் கார்டனில் அரிய வகை தாவர இனங்கள் காணப்படுவதால் அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அதிக அளவில் கவர்கிறது. 22 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்துள்ள பொட்டானிக்கல் கார்டன் பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளிவரும் தெற்கு வாயிலுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. இங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 1500 வகை தாவர இனங்கள் காணப்படுவதால் தென்னிந்தியாவின் மிகச் சிறந்த பொட்டானிக்கல் கார்டனாக இது கருதப்படுகிறது. மேலும் இங்குள்ள மீன் காட்சியகம் பயணிகளுக்கு நீர் வாழ்க்கை குறித்த தனித்துவமான அனுபவத்தை தருவதோடு, இங்கு காணப்படும் பல்வேறு வகையிலான மீன் இனங்கள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான ரயில் வண்டி, நடனமாடும் நீரூற்று, சில அரிய வகை அலங்கார மீன்களையுடைய காட்சியகம் மற்றும் 6 நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரெஞ்சு வார் மெமோரியல்

பிரெஞ்சு வார் மெமோரியல்

முதல் உலகப் போரில் உயிர்நீத்த பிரெஞ்சு வீரர்களின் நினைவாக பிரெஞ்சு போர் நினைவுச் சின்னம் பாண்டிச்சேரியில் எழுப்பப்பட்டுள்ளது. 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம், ஒவ்வொரு ஆண்டும் பாஸ்டில் தினமான ஜுலை 14-ம் நாள் (பிரெஞ்சுப் புரட்சி நடந்த நாள்) இறந்து போன பிரெஞ்சு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மின்னும் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த நிகழ்வு இன்றளவும் நடந்து வருவது பாண்டிச்சேரிக்கும், பிரான்சுக்கும் இடையேயான ஆழமான தொடர்பை விளக்குவதாக உள்ளது. பாண்டிச்சேரி ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் கௌபெர்ட் அவென்யூவில் உள்ள இந்த நினைவுச்சின்னத்திற்கு பயணிகள் வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லலாம்.

பாண்டிச்சேரி கடற்கரை

பாண்டிச்சேரி கடற்கரை

அரியான்குப்பம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்ட பிறகு ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக ஒரு காலத்தில் மிக அழகிய கடற்கரையாக இருந்த இதன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இது பரவலாக பாண்டிச்சேரி கடற்கரை என்றும் வீதி உலா கடற்கரை என்று பொருள்படும்படி ஆங்கிலத்தில் ப்ரோமேனேட் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தற்பொழுது கற்பாளங்கள் செயற்கை சுவர்களாக வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த கடற்கரையில் நடந்து செல்லவோ, நீச்சலடிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பிரெஞ்சு மொழியில் 'பொய்யான கடற்கரை' என்று அர்த்தப்படும் வகையில் 'லா பாஃக்ஸ்-ப்ளேஜ்' என்ற செயற்கை கடற்கரை ஒன்று இந்த கடல் சுவர்களுக்கு மேலே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மாலை வேளைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் கடற்கரை சாலையில் காலாற நடந்து செல்வது இனிமையான அனுபவமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பாண்டிச்சேரி நகரின் முக்கிய பார்வையிடங்களை பார்த்துக் கொண்டே செல்லும் வகையில் 1.5 கிமீ நீளத்திற்கு இந்த கடற்கரை நீண்டிருக்கிறது. எனவே இந்த கடற்கரை பாண்டிச்சேரியின் முக்கியமான சுற்றுலாப் பகுதியா

மணக்குள விநாயகர் கோயில்

மணக்குள விநாயகர் கோயில்

பாண்டிச்சேரியில் பிரெஞ்சு கம்பெனி கால் பதிப்பதற்கு முன்பே 1666-ஆம் ஆண்டு மணக்குள விநாயகர் கோயில் கட்டப்பட்டுவிட்டது. இந்த கோயில் அமைந்திருக்கும் பகுதியில் முன்பு எங்கும் மணல் பரந்து கிடந்ததோடு, அருகே ஒரு குளமும் இருந்ததால் இது மணக்குள விநாயகர் என்ற பெயரை பெற்றது. எங்கு பார்த்தாலும் சலமற்ற அமைதி நிரம்பியிருக்கும் இந்த கோயிலை நீங்கள் பாண்டிச்சேரி வரும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

அரவிந்தர் ஆசிரமம்

அரவிந்தர் ஆசிரமம்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பித்து பிரெஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரிக்கு தப்பி வந்த ஸ்ரீ அரவிந்த கோஸ் என்பவரால் 1926-ம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமம் நிறுவப்பட்டது. இந்த ஆசிரமதத்தை நிர்வகித்துக்கொண்டு 'அன்னை' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மீரா அல்பாஸ்ஸா அவர்கள் நவம்பர் 26, 1926-ம் நாள் முதல் அவர் இறக்கும் காலம் வரையிலும் இருந்தார். இங்கு மூன்று வயத்திற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் ஆசிரமத்தின் நிர்வாகத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே ஆசிரமத்திற்குள் புகைப்படம் எடுக்கவும் முடியும். காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையிலும் மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்த ஆசிரமத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் இங்குள்ள நூலகத்திதின் நூல்களை ஆசிரம அதிகாரிகளின் அனுமதியுடன் படிக்கலாம்.

ஆரோவில்

ஆரோவில்

பாண்டிச்சேரி ரயில் நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும் ஆரோவில் நகரம், பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களையும், கலாச்சாரங்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் வசித்து வருவதால் பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமமாக விளங்குகிறது இந்த நகரம். இந்த நகரம் மக்களால் 'அன்னை' என்று அன்புடன் அழைக்கப்படும் மீரா அல்பாஸ்ஸா என்ற வெளிநாட்டவரால் நிறுவப்பட்டதாகும். நாடு, கலாச்சாரம் முதலிய கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் ஒருமைப்பாடு மற்றும் உலகளாவிய அமைதியுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் ஒன்றாக வாழச் செய்து அதன் மூலம் அமைதி மற்றும் வளர்ச்சியை உருவாக்குவதே இந்த நகரம் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும். இந்நகரத்தில் அமைந்துள்ள மாத்ரிமந்திர் அதன் கட்டிடக்கலைக்காக பயணிகளை கவரும் முதன்மையான சுற்றுலா பகுதியாகும். அதோடு இந்நகரத்திற்கு அருகிலிருக்கும் ஆரோ கடற்கரை ஓய்வெடுக்க மிகவும் ஏற்ற இடமாகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X