கன்னிமை கெடாத தூய்மையுடன் ஒளிரும் அரபிக்கடல் கடற்கரைகள் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடர்களின் கம்பீரமான சரிவுகள், ஆரவல்லி மற்றும் சத்புரா மலைத்தொடர்களின் எழிற்தோற்றங்கள் மற்றும் வித்தியாசமான நில அமைப்பை கொண்டு காட்சியளிக்கும் கட்ச் ரான் வளைகுடாப்பகுதி ஆகியவை குஜராத் மாநிலத்தை ஒரு சுவாரசியமான சுற்றுலா பூமியாக அடையாளப்படுத்துகின்றன. தித்தால் எனும் கருப்பு மணல் கடற்கரை, மாண்டவி பீச், சோர்வாட் பீச், அஹமத்பூர் -மாண்ட்வி பீச், சோம்நாத் பீச், போர்பந்தர் பீச், துவாரகா பீச் என்று ஏராளமான அழகுக்கடற்கரைகள் குஜராத் மாநிலத்தில் நீண்டு கிடக்கின்றன. இயற்கை அழகு ஒரு புறம் இருக்க இந்தியா முழுமைக்கும் அறியப்படும் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலங்களும் இந்த குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளன. துவாரகா மற்றும் சோம்நாத் ஆகியவை இந்திய புராணிக மரபில் பிரதான இடத்தை பெற்றுள்ள புனித ஸ்தலங்களாக புகழ் பெற்றுள்ளன. இந்த ஊரில் இருக்கும் கோட்டைகள், மாளிகைகள், அரண்மனைகளுக்கு பின் பெரிய கதைகள் இருக்கின்றன. சரி குஜராத்தின் அந்த 8 அரண்மனைகளைப் பற்றி பார்க்கலாமா?
ராஜ்வந்த் அரண்மனை
ராஜ்பிப்லா சர்தார் சரோவர் அணையில் இருந்து சுமார் 36 கீ.மீ தொலைவில் உள்ள ஒரு நகரம் ஆகும். மேலும் இது பஹரூச்சில் இருந்து சுமார் 98 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ராஜ்பிப்லாவின் அடையாளமான ராஜ்வந்த் அரண்மனை பல்வேறு சினிமா நிறுவனங்களால் ஆண்டு முழுவதும் சினிமா பட சூட்டிங்கிற்காக ஆக்கிரமிக்கப்படுகிறது. இந்த நகரம் முற்காலத்தில் ராஜ்பிப்லா பேரரசின் தலைநகரமாக இருந்தது.
www.gujarattourism.com
அயினா மஹால்
புஜ் நகரின் ஹமீர்ஸர் ஏரியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளதான அயினா மஹால் அல்லது "கண்ணாடிகளின் கூடம்", ஒரு அற்புதமான மாளிகையாகும். 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, தேர்ந்த கலைநுட்ப வல்லுநரான ராம் சிங் மாலம் என்பவரால், இந்திய-ஐரோப்பிய பாணிகளைத் தழுவி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மஹால், மிக அழகான சில கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்டுள்ளது. இந்த மாளிகை, 2001 ஆம் வருடம் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது பெரும்பாலும் சிதைக்கப்பட்டு விட்டது; என்றாலும் பாதிப்புக்குள்ளாகாமல் தப்பித்த சில பகுதிகளைக் கொண்டு ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியகம் வருடத்தின் 365 நாட்களும் பொதுமக்கள் வந்து பார்க்கும் வண்ணம் திறந்து வைக்கப்படுகிறது.
Nizil Shah
லட்சுமி விலாஸ் மாளிகை
மஹாராஜா சயாஜிராவ் மேஜர் சார்லஸ் மாண்ட் அவர்களை நியமித்து கட்டத் துவங்கிய இந்த அரண்மனை . R.F.கிஸோல்மினால் கட்டி முடிக்கப்பட்டது, இந்தோ-சார்செனிக் பாரம்பரியத்தில் உருவாக்ப்பட்ட இந்த அரண்மனையில் இந்தியா, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வடிவமைப்புகளைக் காண முடியும். மொசைக் டைல்ஸ்கள், பல்வேறு வண்ணங்களாலான மார்பிள் கற்கள், எண்ணற்ற கலை வேலைப்பாடுகள், அற்புதமான நீரூற்றுகள் மற்றும் பார்வையை கொண்டிருக்கும் அரசவை ஆகியவை இந்த அரண்மனை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக வைத்துள்ளன. அந்த நாட்களிலேயே எலிவேட்டர் போன்ற நவீன வசதிகளை கொண்டதாக இந்த அரண்மனை இருந்தது. இதன் தர்பார் ஹாலில் உள்ள பெல்லிஸியின் வெண்கல, மார்பிள் மற்றும் களிமண் சிற்ப சேகரிப்புகளும், வில்லியம் கோல்ட்ரிங்கினால் வடிவமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் காண்பவரை மகிழ்விக்க காத்துக் கொண்டுள்ள காட்சிகளாகும். இந்த அரண்மனைக்கு உள்ளே இருக்கும் மோடி பாக் அரண்மனை மற்றும் மஹாராஜா பதே சிங் அருங்காட்சியகம் ஆகிய இடங்களும் காண வேண்டிய இடங்களாகும். மோடி பாக் அரண்மனைக்கு அருகில் மோடி பாக் கிரிக்கெட் மைதானத்தில், தேக்கினாலான தளத்தை கொண்டுள்ள டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் மைதானமும் உள்ளது. இராஜா இரவி வர்மாவின் ஓவியங்களில் பெருமளவினை பெற்று அவற்றை மஹாராஜா பதே சிங் சிறப்புற உருவகப்படுத்தியுள்ளார். இந்த மியூசியத்தில் மார்பிள் மற்றும் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய, சீன மற்றும் இத்தாலிய சிற்பங்களும் உள்ளன. அண்டை நாடுகளிலிருந்து சீனா மற்றும் ஜப்பானிய சிற்பங்களை மஹாராஜாவும் மற்றும் இத்தாலிய சிற்பங்களை இத்தாலிய சிற்பக் கலைஞரான பெலிஸியும் இங்கே உருவாக்கியுள்ளனர். இந்த அரண்மனைக்கு பார்வையிடுவதற்கு மஹாராஜாவின் செயலரிடம் முன் அனுமதி பெற வெண்டும்.
gujarattourism.com
ஷரத் பௌக்
ஷரத் பௌக், 1991-ஆம் ஆண்டில் கட்ச்சின் கடைசி மன்னரான மதன்சிங் இறக்கும் வரையில், அரச குடும்பத்தினரின் வசிப்பிடமாக இருந்துள்ளது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு விட்ட இந்த பிரம்மாண்டமான அரண்மனை, அழகிய கலைப்பொருட்களை கொண்டிருப்பதோடு, பூக்கும் செடிகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட செடிகளுடன் கூடிய அழகிய தோட்டத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனாலேயே, புலம்பெயர்ந்து செல்லும் சிறகுடைய விருந்தினர்களான செந்நாரைகள் சில, ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்த அரண்மனை, வெள்ளிக்கிழமை தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களிலும் திறந்து வைக்கப்படுகிறது.
gujarattourism.com
பிரக் மஹால்
9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அழகிய இத்தாலிய-கோத்திக் பாணி கட்டிடம், இங்கு வருவோர் பலருக்கு, முக்கியமாக பாலிவுட் பிரமுகர்களுக்கு, மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றும். ஏனெனில், இந்த கலைநயம் வாய்ந்த மாளிகையில், பிரபல இந்தித் திரைப்படங்களான ஹம் தில் தே சுகே சனம், லகான் மற்றும் இவற்றிற்கு முன் வெளிவந்த சில குஜராத்தி திரைப்படங்கள் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன. எனினும், 2001 இல் நிகழ்ந்த நிலநடுக்கங்களாலும், 2006 இல் நிகழ்ந்த கொள்ளையின் போது, கொள்ளையர்கள் பெருமதிப்புடைய ஏராளமான கலைப்பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாலும் இந்த மாளிகை மிகுந்த சிதைவுக்குள்ளாகியுள்ளது. ஆனாலும், இது பொதுமக்கள் வந்து பார்வையிடும் வண்ணம் திறந்து வைக்கப்பட்டுள்ளது; அதனால் இங்கு வரும் பார்வையாளர்கள் பிரதான அரண்மனைக் கூடத்தை சென்று பார்க்கலாம்; மேலும், இந்த நகரின் கொள்ளை கொள்ளும் அழகை முழுவதும் பார்த்து ரசிக்கக்கூடியதான மணி கோபுரத்துக்கும் சென்று பார்க்கலாம். இரண்டாம் ராவ் பிரக்மால்ஜி மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட பிரக் மஹால், 1865 ஆம் ஆண்டில், அப்போதே சுமார் 3.1 மில்லியன் செலவில் கட்டப்பட்டிருக்கிறது.
Nizil Shah
நவ்லாக்ஹா அரண்மனை
17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட எழில்மிகு அரண்மனையான இது தான் கோண்டலின் பழமையான கட்டடம். இந்த பழமையான மாட மாளிகையில் செதுக்கப்பட்ட வளைவுகள், ஈர்க்கும் வகையில் மேல் மாடங்கள், முற்றங்கள் மற்றும் அழகிய சுழல் படிக்கட்டுகளை காணலாம்.
இது போக இதனுள் ஒரு அழகிய அருங்காட்சியமும் உள்ளது. அரண்மனையின் தர்பாரில் சில அழகிய கலைப்பொருட்கள், உயிரற்ற வன விலங்குகள், கம்பீரமான பர்னிச்சர்கள் ஆகியவை காட்சி தருகின்றன.
அதே போல் இங்குள்ள அருங்காட்சியத்தில் பாகவட்சின்ஜி மகாராஜாவிற்கு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது பரிசுகள் மற்றும் தகவல்கள் அளிக்க பயன்படுத்தப்பட்ட வெள்ளிப் பெட்டிகள் இங்கே உள்ளன.
PC: Jaisimha Muthegere
விஜய் விலாஸ் அரண்மனை
1929-ஆம் வருடம் ராவ் விஜய்ரஜ்ஜி என்பவரால் கட்டப்பட்டது தான் விஜய் விலாஸ் அரண்மனை. ராஜ்புட் தோரணையில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் நடுவே ஈர்க்கும் வகையில் பெரிய குவிமாடம் உள்ளது. அதனை சுற்றி வங்காள தோரணையில் குவிமாடங்களை காணலாம். மேலும் வண்ணமயமான கண்ணாடிகளை கொண்ட ஜன்னல்கள் மற்றும் கற்களில் செதுக்கப்பட்ட அழகிய ஜன்னல்களையும் பார்க்கலாம். இங்கே புகழ் பெற்ற சில பாலிவுட் படங்களான லகான், ஹம் தில் தே சுக்கே சனம் போன்றவை படமாக்கப்பட்டிருக்கின்றன.
www.gujarattourism.com
பலராம் அரண்மனை
சுதேச பாலன்பூர் ஆட்சியாளர்களான லோகானிக்கள் வார விடுமுறை நாட்களில் தங்கி வேட்டையாடுவதற்காக உபயோகித்த இந்த பலராம் அரண்மனை தற்போது ஆடம்பர விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. 1920-களில் கட்டப்பட்ட, அரண்மனை மற்றும் மாளிகையின் தோற்றம் ஒரு நேர்த்தியான புதிய பாரம்பரிய கட்டிடக்கலையை சித்தரிக்கிறது. மிகப் பிரம்மாண்டமாக சுமார் 13 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட இந்த அரண்மனையை சுற்றி பசுமையான புல்வெளிகள் மற்றும் வண்ணமயமான பூக்கும் தாவரங்களை உடைய ஒரு அழகிய சுற்றுச்சூழல் காணப்படுகிறது. இந்த அரண்மனை பாலன்பூர் நிலையத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
www.gujarattourism.com