மணிப்பூரின் தலைநகரம் இம்பால் கண்கவரும் இயற்கையழகு மற்றும் வனவிலங்குகளை காண ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாகும். புகழ் பெற்ற போலோ விளையாட்டின் தாயகம் இம்பால் என்பதை அறியும் போது உங்களின் புருவம் ஆச்சரியமாக உயருவதை தவிர்க்க முடியாது. மேலும், இம்பாலில் எண்ணற்ற பழமையான நினைவுச் சின்னங்கள், கோவில்கள் மற்றும் வரலாற்று சின்னங்களும் உள்ளன. இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற இம்பால் போர் மற்றும் கோஹிமா போர்களினால் இம்பாலின் பெயர் சரித்திரத்தில் இடம்பெற்றது. இவை மட்டுமல்லாமல் மேலும் பல சுற்றுலாதலங்களையும் தன்னகத்தே கொண்டு, மணிப்பூர் மாநிலம் சுற்றுலாவில் பெரும்பங்கு வகிக்கிறது. ஸ்ரீ கோவிந்தாஜீ கோவில், காங்லா அரண்மனை, போர் கல்லறைகள், இமா கெய்தெல் என்ற பெண்களால் மட்டுமே நடத்தப்படும் சந்தை, இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் இங்கிருக்கும் சில கண்கவரும் தோட்டங்கள் ஆகியவை இவ்விடத்தை சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற பகுதியாக வைத்திருக்கின்றன. மியான்மர் நாட்டின் நுழைவாயிலாக இருக்கும் சன்டெல் என்ற மாவட்டமும் மணிப்பூர் மாநில சுற்றுலாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. மாறுபட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளையுடை சன்டெல் மற்றும் தெமங்லாங் மாவட்டங்கள் மணிப்பூரின் உயிர்-பன்முகதன்மைக்கு எடுத்துக் காட்டுகளாக திகழ்கின்றன. சரி மணிப்பூரில் உள்ள பூங்காக்களுக்கு சென்று வரலாமா?
மணிப்பூர் விலங்கியல் தோட்டங்கள்
அரிய வகை விலங்குகளை பாதுகாப்பதற்காகவே மணிப்பூர் விலங்கியல் தோட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. இம்பால்-காங்சுப் சாலையில், இம்பால் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த தோட்டங்கள் சுமார் எட்டு ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கிறது. உண்மையிலேயே அழிவுறும் நிலையிலுள்ள சில உயிரினங்களை பாதுகாத்து வைத்திருக்கும் இந்த இடம் 'மணிப்பூரின் ஆபரணப் பெட்டி' என்ற புகழ்பெற்றிருக்கிறது.
லிஸ்ஸோம் மற்றும் ப்ரோ-ஆன்ட்லெர்டு தியாமின் மான்கள் (சங்காய் மான்கள்) மணிப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள புகழ் பெற்ற அரிய உயிரினங்களாகும். 55 வகை பறவையினங்களும் மற்றும் 420 வகை விலங்கினங்களும் இந்த விலங்கியல் மையத்தில் பாதுகாப்பாக உள்ளன. மேலும், அழியும் நிலையிலுள்ள 14 விலங்கினங்களும் இங்கு உள்ளன.
இந்த விலங்கியல் தோட்டத்திற்கு தெற்குப் பகுதியில் மணிப்பூர் வேளாண்மை பல்கலைக்கழகமும், மேற்கில் லாங்கோல் சாலையும் உள்ளன. பிற பகுதிகள் நெல் வயல்களால் சூழப் பட்டுள்ளன. சோர்வடைந்த உடலுக்கு மணிப்பூர் விலங்கியல் தோட்டத்தின் பசுமையான காட்சி புத்ததுணர்ச்சி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த இடத்தில் ஒரு முழு நாளை செலவிடுவது நல்லது.
Mongyamba
சம்பல்-லெய்-செக்பில் தோட்டம்
இம்பால் நகரத்தின் மையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கும் சம்பல்-லெய்-செக்பில் தோட்டம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த தோட்டத்தில் தான் 61 அடி உயரம் கொண்ட சம்பல்-லெய்-செக்பில் என்ற புதர் வகைகள் உள்ளன. இதன் மிதமிஞ்சிய உயரத்தின் காரணமாகவே இந்த புதர்கள் 1991-ம் ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்திலும், 1999-ம் ஆண்டில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றன.
சம்பன் லெய் என்ற மணிப்புரி வார்த்தையில் 'சம்பன்' என்றால் வேலி என்றும், 'லெய்' என்றால் பூ என்றும் அர்த்தமாகும். மணிப்பூரின் பிரபலமான புதர் வகையான சம்பல்-லெய்-செக்பில் தாவரத்தின் தாவரவியல் பெயர் துரண்டா ரிபென்ஸ் லின் என்பதாகும். 1983-ம் ஆண்டு மோய்ராங்தெம் ஓகென்ட்ரா கும்பின் என்பவரால் கண்டறியப்பட்ட இந்த தாவரம், மணிப்பூரில் பரவலாகவே வீடுகளுக்கு வேலியாக பயன்படுத்தப்பட்டதால் சம்பன் லெய் என்று பெயர் பெற்றது.
தொடக்கத்தில் பொதுவான கண்காட்சிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த இந்த தாவரம், மேற்கொண்டு வளர்ந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை வந்த போது இந்த தோட்டத்திற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது. இந்த புதர்களுக்கு வான்வெளி பூக்கள் என்றும் ஒரு பெயருண்டு.
Mongyamba
ஹுங்ரெய் பூங்கா
டங்கன் பூங்கா, உக்ருள் மாவட்டத்தில் உள்ள பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். உக்ருள் மாவட்டத்தின் தலைமையகத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள `ஹுங்ரெய்' என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம் ஆகும்.
இது 1984-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள குழந்தைகள் பூங்கா பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது. எனினும், பல ஆண்டுகளாக பராமரிப்பின்மை காரணமாக, பூங்காவின் நிலை பெரிய அளவில் மோசமாகிவிட்டது. அரசாங்கம் டங்கன் சுற்றுச்சூழல் பூங்காவை ஊக்குவிக்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது பெரிய பூங்காவின் நிலையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் விளைவாக ஒரு குழந்தைகள் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தலைவர்கள் பூங்காவின் நிலைமையை மேம்படுத்துவது பற்றி தங்களால் ஆன பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவற்றுள் பூங்காவில் மரம் நடுவது முக்கியமான ஒன்றாகும்.
Tabish Qureshi
எல் ஷாடாய் பூங்கா
உக்ருளில் உள்ள, ஏராளமான திறந்த வெளிகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை கவர்ந்தாலும், இங்குள்ள பூங்காக்கள் பல்வேறு வழிகளில் அவர்களை மகிழ்விக்கின்றது. உக்ருள் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள எல் ஷாடாய் பூங்கா அவற்றுள் மிக முக்கியமானது. இது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது. .
நகரத்தின் மத்தியில் உள்ள காரணத்தால், இப்பூங்காவில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிரம்பியிருக்கும். இங்குள்ள பெரியவர்கள் பூங்காவை சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, குழந்தைகள் திறந்த மைதானத்தில் விளையாடி மகிழ்வதை காணலாம். இந்த பூங்கா நகரத்தின் பிற பகுதிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளதால் பூங்காவை அடைவதற்கு எராளமான பேருந்துகள், தனியார் வண்டிகள், மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் எளிதில் கிடைக்கின்றன.
பூங்காவிலுள்ள அழகான பூக்கள் தனது நிறங்களை வானில் தூவி இந்த பூங்காவை வண்ணமயமாகச் செய்கின்றன. பூத்து குலுங்கும் மரங்களின் நிழல்களில் நடந்து செல்வது நமது சோர்வடைந்த உடலுக்கும், மனத்திற்கும் இதம் தரும் ஒரு இனிய நிகழ்வாகும். எல் ஷாடாய் பூங்கா, சுற்றுலா பயணிகள் தங்களுடைய ஒரு நாளை அனுபவித்து செலவழிக்கத் தக்க வகையில் அமைந்த ஒரு சிறந்த இடம் ஆகும்.
Mongyamba