கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், வடக்கு மலபார் கடற்கரையோரப் பகுதிகளில் பய்யோலி கிராமம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் சொந்த ஊராக இந்த பய்யோலி கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.
உணவு சுற்றுலா
பய்யோலி கிராமம் அதன் தனித்துவம் மிக்க உணவு வகைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதிலும் பய்யோலி கோழி பரிச்சாட்டு என்று அழைக்கப்படும் பய்யோலி சிக்கன் ஃபிரையின் சுவையை போல நீங்கள் வேறெங்கும் ருசித்திருக்க முடியாது. இந்த வகை சிக்கன் ஃபிரையை சிவப்பு மிளகாய் மற்றும் பலதரப்பட்ட மசாலா வகைகளை கொண்டு வித்தியாசமான முறையில் பய்யோலி நகரவாசிகள் அவர்களுக்கே உரிய பாணியில் தயார் செய்வார்கள். எனவே இந்த சிக்கன் ஃபிரையை ஒருமுறை சுவைத்துப் பார்த்தாலும் நீங்கள் உங்கள் வாழ் நாள் முழுக்க இதன் ருசியை மறக்க மாட்டீர்கள்.
சுற்றுலா வரும் போது காணவேண்டியவை
பய்யோலி கிராமத்துக்கு சுற்றுலா வரும் போது நீங்கள் குஞ்சாலி மரக்கார் மியூசியம், வெல்லியம்கல்லு மற்றும் திருக்கொத்தூர் பெருமாள்புரம் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். இதில் திருக்கொத்தூர் பெருமாள்புரம் கோயில் பய்யோலி பீச்சுக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலை கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து சுலபமாக அடைந்து விட முடியும்.
பய்யோலி பீச்
கேரளாவின் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றான பய்யோலி பீச் அமைதியான சுற்றுச் சூழலை கொண்டிருப்பதால் பிரபலமான சுற்றுலா மையமாக திகழ்ந்து வருகிறது. இந்தப் பகுதிகளில் கடல் ஆழமற்று காணப்படுவதால் நீங்கள் பல்வேறு நீர் விளையாட்டுகளில் ஆனந்தமாக ஈடுபடுவதோடு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கடலில் நீந்தித் திளைக்கலாம். இப்பகுதிகளின் விருந்தோம்பல் பண்பும், உணவு வகைகளும் உங்களை இந்த இடத்தின் அடிமையாகவே மாற்றி விடும்.
அரிய வகை உயிரினங்கள்
பய்யோலி பீச்சில் நீங்கள் ஆலிவ் ரிட்லி ஆமைகள் போன்ற அரிய வகை உயிரினங்களை பார்த்து ரசிக்கலாம். அதிலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முட்டையிட்டு அடை காப்பதற்காக இந்த வகை ஆமைகள் நூற்றுக் கணக்கில் பய்யோலி கடற்கரைக்கு வரும். இதனால் ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் காணும் அரிய காட்சி போன்று நீங்கள் பய்யோலி கடற்கரையிலேயே வெகு அருகில் பார்த்து ரசிக்க முடியும்.
தொல்பொருள் துறை
பய்யோலி கிராமத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குஞ்சாலி மரக்கார் மியூசியம், குஞ்சாலி மரக்கார்கள் எனும் போர் வீரர்களின் குடிசையில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு பழங்கால வாட்கள், பீரங்கி குண்டுகள், குத்துவாட்கள், சிறிய கத்திகள் போன்ற போராயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியகம் தற்போது மாநில தொல்பொருள் துறையினரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது