அன்றாட வாழ்வில் ஏன் இத்தனை சத்தம் நம்மைச் சுற்றி ?
வீடு, சாலைகள், பேருந்துகள், திருவிழாக்கள், கல்யாண மண்டபங்கள், சினிமா உட்பட ஒரு இடம் பாக்கி இல்லாமல் சத்தம் பேரிரைச்சலாக அலைந்து கொண்டிருக்கிறது. அதிலும், குறிப்பாக, செல்போன், FM ரேடியோக்கள் வந்தபின் அமைதி, பாலு மஹேந்திரா படங்களில் மட்டுமே காணக்கூடிய பொருளாக மாறிவிட்டது. தினமும் ஒரு மணி நேரமாவது எந்த சத்தமும் இல்லாமல் பூரண அமைதியோடு இருக்க முடியாதா என்ற ஏக்கம் வருகிறது.
சொல்லப் போனால், அலுவலகத்தில் உள்ள அமைதிகூட நம் வீடுகளில் இல்லை. தூங்கும் நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலும் டிவி அல்லது செல்போன் அலறிக் கொண்டிருக்கிறது. சரி, அதிலாவது ஒரு மென்மை இருக்கிறதா? Reality Show என்ற பேரில், பங்கேற்பாளர்கள் முதல் தொகுத்து வழங்குபவர்கள் வரை காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். இனி வரும் காலத்தில், அமைதி என்பது வார்த்தையோடு மட்டும் போய்விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்படி பட்ட சூழலில், சில நாட்களாவது எந்த சத்தமும் இல்லாமல் நிம்மதியாய் இருக்க வேண்டுமென்று விரும்புவர்களுக்கு இந்தியாவில் சில சிறந்த இடங்கள் இருக்கிறது.
ஆரோவில் - புதுச்சேரி
Photo Courtesy : McKay Savage
இது, பல தேசத்து மக்கள் ஒன்றாக வாழும் ஒரு டவுன்ஷிப். இங்கு, குடியிருப்பு, தொழிற்சாலை, சர்வதேச, கலாச்சார எனப் பல மண்டலங்கள் இருக்கின்றன. முற்றிலும் இயற்கை சார்ந்த இயங்குதல், மொழி, இனம், நாடு பேதங்கள் இல்லாமல் பல தேசத்து மக்கள் ஒன்றாக வாழும் இடம். எந்தவித இரைச்சல், சத்தங்கள் இல்லாமல், பறவைகளின் கீச்சொலியும், காற்றின் சல சலப்பும் மட்டுமே கேட்கும் ஒரு அற்புதமான இடம்.
மத்ரிமந்திர் எனும் உலக உருண்டை வடிவில் இருக்கும் இடம் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது. துளி சத்தம் மற்றும் வெளிப்புற தொந்தரவுயில்லாமல் தியானம் செய்வதற்கு மிகவும் ஏற்ற இடம்.
பன்காங் ஏரி, லடக்
Photo Courtesy : Sidharthkochar
பிரமாண்ட மலைகள், துளி மாசில்லாத அழகான ஏரி, என இயற்கை எழில் பொங்கும் ஒரு இடம் இந்த பன்காங் ஏரி. வழக்கமான சுற்றுலா தளங்கள் போல் கடைகள், குப்பைகள், மக்கள் நெரிசல் என எதுவும் இல்லாத இடம். இதனாலேயே பல இயக்குனர்களின் கனவு இடமாகத் திகழ்கிறது. உயிரே படத்தில் வரும் என்னுயிரே பாடல் முதல் 3 Idiots படத்தின் இறுதிக்காட்சி வரை எண்ணற்ற படங்களின் படப்பிடிப்புகள் இந்த இடத்தில் நடந்திருக்கிறது.
சைலன்ட் வேலே தேசியப் பூங்கா
Photo Courtesy : Cj.Samson
இந்தப் பூங்கா, பாலக்காடு மாநிலத்தில் உள்ள, மன்னார்கட் டவுனிலிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது.
மொத்தம் 236 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த பூங்காதான் கேரள மாநிலத்தின் மிகப்பெரும் தேசிய பூங்கா. இந்த இடம், ராபர்ட் விக்ட் என்ற தாவரவியலாளரால் 1847'ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
1970'களில், நீர்மின் நிலையம் அமைக்க இந்த இடத்தை தேர்வு செய்த போது பெரும் போராட்டம் வெடித்தது. கடைசியில், அரசு, திட்டத்தை கைவிட்டது. சிங்கவால் குரங்கு எனும் அரியவகை குறங்கினங்கள் வசிக்கும் ஒரு முக்கிய தேசிய பூங்கா இது.
ஏலகிரி, வேலூர் மாவட்டம்
Photo Courtesy : cprogrammer
ஏலகிரி என்னும் மலைவாசஸ்தலம், வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் இருக்கிறது. ஏலகிரி, கடல் மட்டத்தில் இருந்து 1,410 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது.
ஏலகிரி மலை, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலா இடமாக இல்லாவிட்டாலும் இதன் அமைதியான சூழல், சலகாம்பாறை நீர்வீழ்ச்சி மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவற்றைக் காண பலர் வருகின்றனர்.
சலகம்பாறை நீர்வீழ்ச்சி, மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. நிலாவூரில் இருந்து 6 கி.மீ மலைப் பயணத்தின் மூலமாக நீர்வீழ்ச்சியை அடையலாம்.
இதுதவிர பூங்கானூர் ஏரி மற்றும் குழந்தைகள் பூங்காவும் இருக்கிறது.