சோழ பேரரசின் கீழ் செயல்பட்ட தமிழகப் பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே செழிப்பான நகரமாக விளங்கியதற்கு முக்கியக் காரணம் காவிரி. சோழர் வம்சத்தினரின் வளர்ச்சி, வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் பகுதியிலேயே தொடங்கியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே காவிரியின் செழிப்பான பெருமைகளை பண்டைய தமிழ் இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அதனை நம்பியிருந்த மக்களை கைவிட்டதில்லை. காவிரி குறித்தும், சோழர்கள் குறித்தும் இன்னும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
தமிழகத்தில் சோழர்கள்
கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் சில குக்கிராமங்களை ஆட்சி செய்து வந்த சிற்றரசர்கள் வாணிபத்தில் வீழத் துவங்கினர். பழைய சோழமண்டலப் பகுதிகளான உறையூர், பழையாறு போன்ற இடங்களில் சோழர்களின் ஆட்சிக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்கள் குறுநிலப் பரப்பை ஆட்சி செய்யத் துவங்கினர். விவசாயம், கடல் கடந்த வாணிபம் என பத்தாம் நூற்றாண்டுகளில் சோழ பேரரசு ஆட்சி தனது காலை பலமாக ஊன்றியது.
பண்டைய சோழ நாடு
தமிழக மரபுப்படி பண்டைய சோழர் நாடு தற்போதைய தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் வளத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான மதிப்பும், முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
காவிரித் திருவிழா
இன்று காவிரியில் வெள்ளம் வந்தால் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது, அவ்வப்போது சில சேதங்களும் ஏற்படுகிறது. ஆனால், முன்னொரு காலத்தில் வருடம் முழுவதும் வற்றாது ஓடும் காவிரி ஆற்றுப் படுகையில் பருவ காலத்தில் வரும் அதிகப்படியான வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சோழர்களின் தலைநகரம்
திருச்சி அடுத்துள்ள உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன்பு சோழர்களின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட காவிரிப் பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகரமாகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன.
தஞ்சாவூர்
சோழ நாட்டின் மற்றுமொரு முக்கிய நகரமாக இருந்தது தஞ்சாவூர். 9 ஆம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக இது இருந்துள்ளது. விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகளைக் குவித்தார். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் செயல்பட்டுள்ளனர். இருப்பினும், தஞ்சாவூர் முக்கிய நகரமாக விளங்கியது.
கும்பகோண அரண்மனை
கும்பகோணத்தில் சோழர்களின் அரண்மனையா ?, ஆம். கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் சோழர்களின் அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயே அருள்மொழி தேவேச்சுரம் என்னும் கோவிலும் இருந்துள்ளது. தொடர்ந்து, முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரிய அரண்மனை கட்டியதைத் தவிர உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.