ஆலப்புழா நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அழகிய கிராமமான மாராரிக்குளம், மஞ்சள் மணற்பரப்புடன் எழில் ஓவியமாய் காட்சியளிக்கும் அதன் மாராரி கடற்கரைக்காக மிகவும் புகழ்பெற்றது. மாராரிக்குளம் கிராமத்து மக்கள் இன்றும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாரம்பரிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இந்த இடத்துக்கு ஒரு சுற்றுலா சென்று வரலாமா?
வாழ்வாதாரம்
மாராரி கடற்கரை வாழ் மக்களில் பெரும்பாலானோர் சனல் தயாரிக்கும் தொழிலிலேயே ஈடுபடுவதால் மாராரிக்குளம் கிராமம், கயிறு மற்றும் சனல் தயாரிப்புக்காக பிரத்தியேகமாக அறியப்படுகிறது. மேலும் மீனவர்கள் அதிகமாக வாழும் பகுதியான இங்கு நீங்கள் மீனவர்களோடு மீனவர்களாக கடலில் படகுப் பயணம் செய்து அவர்களின் போராட்டங்களையும், சந்தோஷத்தையும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை பெறுவதோடு, உங்களுக்கு அது ஒரு வித்தியாசமான சுற்றுலா அனுபவமாகவும் இருக்கும்.
Pavan Lulla
கொக்கமங்கலம் தேவாலயம்
மாராரிக்குளம் கிராமத்தின் பிரதான யாத்ரீக மையமாக செயின்ட் தாமஸ் அவர்களால் நிறுவப்பட்ட கொக்கமங்கலம் தேவாலயம் அறியப்படுகிறது. கன்னி மேரிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் தும்போலி எனும் கடற்கரை நகரத்தில் அமைந்திருக்கிறது. மாராரிக்குளம் கிராமத்துக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது கொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம், அரூர், அருந்தன்கால், பூச்சக்கால், பணவல்லி, வெலோர்வட்டம் போன்ற இடங்களுக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
Pavan Lulla
மற்ற ஆன்மீக தளங்கள்
அதோடு கட்டிடக் கலைக்கு பெயர்போன சிவன் கோயில், சேர்தலா கார்த்தியேணி கோயில், காஞ்சிகுங்க்லரா கோயில் போன்ற ஹிந்துக் கோயில்களையும் நீங்கள் மாராரிக்குளம் சுற்றுலா வரும் போது பார்க்கலாம். மேலும் பயணிகள் மாராரிக்குளம் கடல் பகுதியில் கட்டுமரத்தில் பயணம் செய்வது, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம்.
Pavan Lulla
அர்த்துங்கல் தேவாலயம்
அர்த்துங்கல் தேவாலயம் ஆலப்புழா நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அர்த்துங்கல் என்ற சிறிய கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு முக்கிய யாத்ரீக மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. போர்த்துகீசியர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அர்த்துங்கல் தேவாலயம், அர்த்துங்கல் செயின்ட் போரேன்'ஸ் தேவாலயம் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது.
இந்த தேவாலயம் பாதிரியார் ஜாக்கோமா பெனிக்கோவின் நினைவாக மீண்டும் 1638-ஆம் ஆண்டு புத்துப்பித்து கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1647-ஆம் ஆண்டு இத்தாலியின் மிலன் நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட செயின்ட் செபாஸ்டியனின் சிலை இந்த தேவாலயத்தில் நிறுவப்பட்டது. அர்த்துங்கல் தேவாலயம் ஆலப்புழா நகருக்கு உட்டபட்ட பகுதியில் பாரிஷ் அந்தஸ்து பெற்ற முதல் தேவாலயமாகும். அதோடு ஆலப்புழாவின் முதல் பெசிலிக்காவாகவும், கேரளாவின் ஏழாவது பெசிலிக்காவாகவும் அர்த்துங்கல் தேவாலயம் பிரபலமாக அறியப்படுகிறது.
Challiyil Eswaramangalath Vipin
அர்த்துங்கல் பீச்
அர்த்துங்கல் பீச் தனிமையின் ஏகாந்தத்தை சுகிக்க விரும்பும் எந்த ஒரு பயணிக்கும் மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இந்த கடற்கரையில் எல்லையில்லாமல் நீண்டு செல்லும் பனை மரங்களும், கிராப்புற வாழ்க்கையின் சாரத்துடன் கரையோரங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் மீன் பிடி படகுகளும் அர்த்துங்கல் பீச்சை வித்தியாசமான சுற்றுலா தலமாக விளங்கச் செய்து கொண்டிருக்கின்றன. அர்த்துங்கல் பீச்சுக்கு பகல் 3.30 முதல் 4.30 வரையிலான காலங்களில் நீங்கள் வரும்பட்சத்தில் சூரியனின் கதிர்கள் பட்டு தங்கம் போல தகதகக்கும் மணற்பரப்பின் கவின் கொஞ்சும் தோற்றத்தை கண்டு ரசிக்கலாம். அர்த்துங்கல் தேவாலயத்துக்கு வரும் ஏராளமான பக்தர்களின் கூட்டத்தை நீங்கள் அர்த்துங்கல் கடற்கரையிலும் பார்க்கலாம். மேலும் அர்த்துங்கல் பீச் அதன் மீன், இறால், கோழி மற்றும் மாட்டுக்கறி சந்தைக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.
Suresh Babunair
மாராரிக்குளம் பீச்
கேரளாவின் அமைதியான கடற்கரைகளில் ஒன்றான மாராரிக்குளம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் பனைமரங்களும், மனித காலடிச் சுவடுகள் படாமல் பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பும் மாராரிக்குளம் கடற்கரையை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக திகழச் செய்துகொண்டிருக்கின்றன. மாராரிக்குளம் கடற்கரையின் வெண்மணற்பரப்பில் கால்பதித்து நடப்பதும், தங்கம் போல தகதகக்கும் சூரியனின் இளஞ்சூட்டு ஸ்பரிசத்தை சுகித்துகொண்டும் உலா வருவதே பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும். அதோடு இந்தக் கடற்கரையை சுற்றி அமைந்திருக்கும் கோயில்களும், தேவாலயங்களும் மாராரிக்குளம் பீச்சின் அழகுக்கு அழகு சேர்க்க கூடியவை. மாராரிக்குளம் பீச்சில் நீங்கள் வாலி பால் விளையாடுவது, பாராசைலிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கடலில் நீந்தித் திளைக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள வேண்டியே இந்தக் கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
nborun