கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து, பாலக்காடு மாவட்டத் தலைநகரம் பாலக்காட்டுக்கு செல்வது தினந்தினம் ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளின் அன்றாட பணி. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி எல்லையில் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். நாம் சுற்றுலாவுக்காக செல்லப்போகிறோம். நினைத்துப்பாருங்கள். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள்,. அதில் எத்தனை மொழிகள். எல்லைகளில் இருப்பவர்கள் அன்றாடம் இரு மாநில மக்களின் பழக்கவழக்கங்கள், மொழிகள், உணவுகள் என எல்லாவற்றையும் நேரில் காண்பர். அதைப்போல இந்த சுற்றுலாவிலும் நாம் இரண்டு மாநில மக்களின் பழக்கவழக்கங்களையும், இரு மாநில எல்லைகளில் உள்ள சுற்றுலாத் தளங்களையும் காண்போம்.
பொள்ளாச்சி - பாலக்காடு
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பாலக்காடு. தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு நுழையும் போது முதலில் நாம் காலடி வைப்பது பாலக்காடு மாவட்டத்தில் தான். அதே போலவே கேரளத்திலிருந்து தமிழகத்துக்குள் கோயம்புத்தூர் மாவட்டம்தான் வரவேற்கும். அப்படி இருக்கையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் எல்லைப்புறங்களில் இரு மாநில மக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் கலந்திருக்கும். சுற்றுலாவுக்கு ஏற்ற மலைகளும், நீர் ஓட்டங்களும் கூடவே இயற்கை அழகுகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றை காண்போம் வாருங்கள்.
பாலக்காடு கோட்டை
பாலக்காடு நகரில் அமைந்திருக்கும் பாலக்காடு கோட்டை திப்புவின் கோட்டை என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோட்டை 1766-ஆம் ஆண்டு திப்புவின் தந்தை ஹைதர் அலி மகாராஜாவால் கட்டப்பட்டது.
பாலக்காடு கோட்டையை பெரும்பாலும் மைசூர் ஆட்சியாளர்களால் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இதற்கு அருகில் கோட்ட மைதானம் என்று அழைக்கப்படும் கோட்டை மைதானம் விசாலமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
இந்த மைதானத்தில்தான் திப்பு சுல்தானின் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட விலங்குகளை அடைத்து வைக்கும் கோட்டில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த மைதானம் இன்று விளையாட்டுகள் மற்றும் பொருட்காட்சிகள் நடத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவை தவிர பாலக்காடு கோட்டைக்கு அருகில் உள்ள ஹனுமான் கோயில் மற்றும் இந்திய தொல்பொருள் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் திறந்த வெளி கலையரங்கம் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம்.
கல்பாத்தி கோயில்
கேரளாவில் உள்ள தொன்மையான சிவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் கல்பாத்தி கோயில், கல்பாத்தி விஸ்வநாத சுவாமி ஆலயம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த சிவன் கோயிலின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அது நம்மை 1425-ஆண்டுக்கு அழைத்துச் சென்று விடும்.மேலும் பாலக்காடு நகரத்துக்கு அருகிலுள்ள கல்பாத்தி கிராமத்தில் அமைந்திருக்கும்
இந்தக் கோயில் தென்னிந்திய கலாச்சார வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பதால் 'தென்னிந்தியாவின் வாரணாசி' என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற கோயில் திருவிழாக்களில் ஒன்றான கல்பாத்தி ரத்தோல்சவம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கல்பாத்தி கோயிலில் கொண்டாடப்படும். அப்போது அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு வீதியில் பவனி வரும் தேர்கள் காண்போரை அப்படியே சொக்க வைத்து விடும்.
இந்த ரத்தோல்சவம் அல்லது தேர்த்திருவிழா பாலக்காடு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களை ஈர்ப்பதோடு, இந்தப் பகுதியின் சுற்றுலாத் துறை வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வருகிறது. கல்பாத்தி கோயிலக்கு அருகில் பிராமணர்கள் வாழும் நிறைய அஹ்ரகாரங்கள் அமைந்திருக்கின்றன. இந்த அஹ்ரகாரங்கள் கேரள சுற்றுலாத் துறையால் 'பாரம்பரிய பாதுகாப்பு திட்டத்தின்' கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகின்றன.
பாலக்காட்டின் மற்ற தளங்கள்
இந்த பாலக்காட்டில் இன்னும் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. ஜயின் கோட்டை, ஒட்டப்பாலம், தோனி அருவி, பரம்பிகுளம் ஆகிய இடங்கள் பாலக்காட்டின் முக்கிய சுற்றுலாத் தளங்களாகும்.
DEEPAK SUDARSAN
மாசாணியம்மன் கோயில்
மாசாணியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயிலில், மூலக்கடவுளின் திருவுருவம் பாம்பின் உடலைக் கொண்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபடுவோரின் பிரர்த்தனைகள், சுமார் மூன்று வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று நம்பப்படுவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள், அம்மனுக்கு உகந்த நாட்களாதலால், இவ்விரு நாட்களிலும், பக்தர்கள் வருகை, இங்கு மிக அதிகமாக இருக்கும்.
கோயிலின் மத்தியப் பகுதியில், பல வண்ணங்களில் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தீட்டப்பட்டுள்ள மாசாணியம்மனின் ஓவியம் ஒன்றைக் காணலாம். மாசாணியம்மன் கோயில், "நானன்" என்ற மன்னனுக்குச் சொந்தமான மரத்திலிருந்து மாம்பழம் ஒன்றை பறித்துத் தின்ற ஒரு பெண்ணின் பெயரில் அமைக்கப்பட்ட கோயில் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.
அப்பெண்ணின் செயலைக் கண்டு கோபமுற்ற மன்னன், அவளுக்கு மரண தண்டனை விதித்தான். பின்னாளில், "மாசாணி" என்ற பெயரில் உள்ளூர்வாசிகள், அப்பெண்ணை வழிபட ஆரம்பித்தார்கள். ராமபிரான், சீதையைத் தேடிய சமயம், இக்கோயிலுக்கு வருகை தந்து, தியானம் செய்தார் என்றும் சான்றோர்கள் கூறுகின்றனர்.
நெகமம்
நெகமம், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய பஞ்சாயத்து நகரமாகும். இவ்விறு நகரங்களுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 14 கி.மீ. ஆகும். பரந்து விரிந்து கிடக்கும் தென்னந்தோப்புகள், இவ்விடத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன. இங்கு போய், இதன் அழகைக் கண்டு ரசித்து வரலாம்.
ஆழியார்
பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவில், ஆழியார் ஆற்றுக்குக் குறுக்கே, 1959 மற்றும் 1969 ஆகிய வருடங்களுக்கு இடையில், கட்டப்பட்ட ஆழியார் அணையின் முக்கிய குறிக்கோள் நீர்ப்பாசனமாகும். இவ்வணை, சுமார் 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துக்கு, எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தற்சமயம், இந்த அணை பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
பொள்ளாச்சியின் மற்ற சுற்றுலாத் தளங்கள்
பொள்ளாச்சி நகரத்தின் மற்ற சுற்றுலா தளங்களை கணக்கிட்டால் மங்கி பால்ஸ், திருமூர்த்தி நீர்வீழ்ச்சி, மாரியம்மன் கோயில், முருகன் கோயில், சின்னார் வனவிலங்கு சரணாலயம், திருமூர்த்தி மலை, வனவிலங்கு சரணாலயம் என நிறைய இடங்கள் இருக்கின்றன.
Divyacskn1289