கற்களைத் தலையணையாகக் கொண்ட ஊர் என்ற பொருளில் திண்டுக்கல் என்று பெயர் பெற்று விளங்குகிறது பூட்டுக்கு பெயர் பெற்ற மாவட்டம். மதுரைக்கு அருகில் அமைந்துள்ளதாலும், இயற்கையாகவே பல சுற்றுலா தலங்களை பெற்றிருப்பதாலும் இது மிகவும் அதிக அளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் மாவட்டமாக உள்ளது. திண்டுக்கல்லில் என்னவெல்லாம் பார்க்கலாம் எங்கெல்லாம் செல்லலாம், திண்டுக்கல்லில் என்னென்ன கிடைக்கும் என்பன உட்பட பல தகவல்களை இந்த சுற்றுலா வழிகாட்டியில் காண்போம்.
பழனி மலை தொடருக்கும் சிறுமலை மலைத்தொடருக்கும் இடையே இந்நகரம் அமைந்துள்ளது மற்றும் விவசாயம் செய்வதற்க்கு ஏற்ற வளமான நிலத்தை பெற்றுள்ளது. திண்டுக்கல் நகரம் பிரியாணி நகரம், பூட்டு நகரம், ஜவுளி மற்றும் தோல்பதனிடும் நகரம் என்ற பல்வேறு பெயர்களில் பிரபலமானது.
திண்டுக்கல்லில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்
300 ஆண்டுகள் பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், புனித ஜோஸப் தேவாலயம், பெகாம்பூர் பெரிய பள்ளிவாசல், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில், காசி விஸ்வநாதன் கோவில், காமாட்சியம்மன் கோவில்,தாடிகொம்பு பெருமாள் கோவில், அபிராமி அம்மன் ஆலயம், ஆஞ்சனேயர் ஆலயம் என ஆன்மீகம் புகழும் அழகிய மாவட்டமாக இருக்கிறது இந்த திண்டுக்கல்.
இது மட்டும் இல்லாமல், திண்டுக்கல்லின் இயற்கை வனப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும், இன்னொரு முக்கியமான கண்கவர் பகுதி வைகை, மருதை மற்றும் மஞ்சலாரு நதிகள் சங்கமமாகும் இடமாகும். மலையேறுபவர்கள் இந்நகரில் உள்ள சிறுமலையில் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.
ஆத்தூர் காமராசர் ஏரி, காமராசர் சாகர் அணை முதலியன திண்டுகல்லை சுற்றி அமைந்துள்ள பிற முக்கிய சுற்றுலா அம்சங்கள்.
கொடைக்கானல் மலை, பழநி மலை, சிறுமலை, திண்டுக்கல் கோட்டை இவை மிக முக்கியமாக கட்டாயம் யாரும் தவறவிடக்கூடாத இடங்களாகும்.
மறக்காமல் பிரியாணியையும் சுவைத்துவிட்டு வாருங்கள்.
எப்படி எப்போது செல்வது
விமான வசதி
திண்டுக்கல்லுக்கு அருகிலேயே மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது.
தொலைவு - 85 கிமீ
பயண நேரம் - 1.30மணி
ரயில் வசதிகள்
திண்டுக்கல்லில் ரயில் நிலையம் உள்ளது.
இணைப்பு - மதுரை, கோவை, சென்னை
சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம்,கன்னியாகுமரி,தூத்துக்குடி செல்லும் ரயில்கள் திண்டுக்கல் வழியாக செல்கின்றன. இதுதவிர திண்டுக்கல்லுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
மதியம் 1.30 மணிக்கு வைகை விரைவு வண்டியும், அதன்பின் மாலை 5.30மணிக்கு குமரி விரைவு, அடுத்து பொதிகை, நெல்லை,பாண்டியன்,செங்கோட்டை,நாகர்கோவில்,முத்துநகர்,அனந்தபுரி,பழனி,மட்கோவன்,திருச்செந்தூர் என அதிக ரயில் வசதியைக் கொண்டது திண்டுக்கல் மாவட்டம்.
பேருந்து வசதிகள்
சென்னை,கோவை,பெங்களூர்,கன்னியாகுமரி என நான்கு திசைகளிலிருந்தும் பேருந்துகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது திண்டுக்கல் மாநகரமும் அந்த மாவட்டமும்.
கொங்கு நாடா? பாண்டியநாடா?
திண்டுக்கல் மாவட்டம் கொங்கு நாட்டைச் சேர்ந்ததா, இல்லை பாண்டிய நாட்டைச் சேர்ந்ததா என்ற விவாதம் சில சமயங்களில் எழும்.
திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டஞ்சத்திரம் ஆகிய வட்டங்கள் கொங்கு நாட்டையும், திண்டுக்கல், கொடைக்கானல், ஆத்தூர்,நிலக்கோட்டை, நத்தம் வட்டங்கள் பாண்டிய நாட்டையும் சேர்ந்தன ஆகும்.
வரலாற்று பொக்கிஷங்கள் பல இருந்திருந்தாலும் இப்போது வரை வரலாற்று சின்னமாக அதிகம் பேசப்படுவது ஹைதர் அலி கட்டிய ஒரு கோட்டைதான்.
மாவட்டத்தைப் பற்றி
தமிழக அரசின் அதிகாரப் பூர்வ தகவலின் படி, திண்டுக்கல் மாவட்டம் 6266 சகிமீ பரப்பளவு கொண்டது.
திண்டுக்கல் மாவட்டம் இரும்பு மற்றும் கற்பாறைகள் அதிகம் கொண்ட பகுதி ஆகும். இதனாலேயே கோட்டைகளும், பூட்டும் இங்கு பிரபலம்
திண்டுக்கல்லிலிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சின்னாளப்பட்டி கைத்தறிக்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும். கலை அம்சங்கள் நிறைந்த புடவைகள், சுங்குடி புடவைகள் ஆகியன இங்கு சிறப்பாகும்.
வெங்காயம், மற்றும் வேர்க்கடலைக்கு மிகவும் பெயர் பெற்றது திண்டுக்கல். இங்கிருந்து கோவை, ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு பரிமாற்றம் நிகழ்கிறது.
இனி ஒவ்வொரு சுற்றுலாத் தளங்கள் குறித்தும் தனித்தனியாக காண்போம்.
திண்டுக்கல் கோட்டை
திண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது.
‘திண்டு' என்றால் தலையணை என்று அர்த்தம், ‘கல்' என்றால் மலை என்று அர்த்தம். இந்த மலையானது
இந்நகரத்தை துருத்தி கொண்டு தலையணை போன்ற வடிவத்தில் காணப்படுவதால் இந்த பெயர் வந்தது.
இந்த மலைகளின் உச்சியில் திண்டுக்கல் கோட்டையானது அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில் இருந்து திண்டுக்கல் நகரை முழுவதுமாக பார்த்து ரசிக்க முடியும்.
இந்த மலை உச்சியில் உள்ள சுத்தமான காற்று உங்கள் சோர்ந்த ஆன்மாவிற்கு ஒரு புத்துணர்வை தரும்.
தாடிக்கொம்பு பெருமாள் கோயில்
தாடிக்கொம்பு பெருமாள் கோயில் திண்டுக்கல்லில் இருந்து 5 கி.மீ தொலைவில் திண்டுக்கல் கருர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலின் முக்கிய தெய்வம் அழகர் கடவுள். இந்த கோயிலின் முக்கிய திருவிழா தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஆங்கில மாதமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வருகிறது.
திருவிழாவின் போது 12 நாட்கள் பூஜையானது நடைபெறுகிறது.
300 வருட பழமை கொண்ட பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்
பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது.
ராஜா ஹைதர் அலி அவர்களின் இளைய சகோதரி, அம்மீர்-உன்-நிஷா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயரால் இந்த மசூதி அன்போடு பெகாம்பூர் என்று திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில்
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் தேவி மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழங்கால கோவில் சிலை சிறந்த ஆட்சியாளர் திப்பு சுல்தான் மூலம் நிறுவப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலைகள், முருகன், மதுரை வீரன், காளி மற்றும் துர்கா சிலைகள் காணப்படுகின்றன.
கோவில் அமைப்பு ஒரு சதுர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒரு அறங்காவலர் குழு இந்த கோவில் நிர்வாகத்தை நடத்துகிறது.
சின்னாளப்பட்டி
சின்னாளப்பட்டி திண்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும்.
வாடிப்பட்டி மாதா கோயில், ஆத்தூர் காமராஜர் அணை, சிறுமலை மலைதொடர், குத்தாலம்பட்டி நீர் வீழ்ச்சி, அதிசயம் தீம் பார்க் போன்ற பல சுற்றுலா இடங்கள் இதன் அருகாமையில் உள்ளன.
சின்னாளப்பட்டியில் நடத்தப்படும் அழகர் திருவிழா மக்கள் கூட்டத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களுடன் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.
பறவை ஆர்வலர்கள் விரும்பும் ஏரி
காமராஜர் ஏரி மற்றும் காமராஜர் அணை ஆத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கின்றன.
காமராஜர் ஏரியானது 400 ஏக்கர் பரந்து மேற்கு தொடர்ச்சி மலை நோக்கி அமைந்துள்ளது.
காமராஜர் ஏரி மற்றும் அணையை சுற்றி வாழைத் தோட்டங்கள் , தென்னை மரங்கள், ஏலக்காய் தோட்டங்கள் சூழப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் இந்த பகுதியை வசிப்பிடமாக கொண்டுள்ளதால் பறவை ஆர்வலர்கள் மத்தியில் இந்த இடம் மிக பிரபலமானது.
பழநி மலை
பழம் நீ அப்பா, ஞானப் பழம் நீ அப்பா எனும் பாடலில் இருந்து பழநி அல்லது பழனி என்ற சொல் உருவானதாக சிலரால் நம்பப்படுகிறது. பழம் மற்றும் நீ எனும் இரு சொற்கள் இணைந்ததே பழனி என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள தண்டாயுதபாணி கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களின்போது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளுடன் முருக பக்தர்களும் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.
பழநி குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறீர்களா இதோ இதை சொடுக்குங்கள்.
கொடைக்கானல் மலை
திண்டுக்கல் மாவட்டத்தின் அழகிய மேற் கு தொடர் ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சிறப்பான சுற்றுலாத் தளம் கொடைக்கானல் மலை ஆகும். இங்கு கோடைக் காலங்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.
கோக்கர்ஸ் வாக்,
பியர் ஷோலா நீர்வீழ்ச்சி,
பிரையண்ட் பூங்கா,
கொடைக்கானல் ஏரி,
தற்கொலை முனை,
செண்பகனூர் அருங்காட்சியம்,
கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம்,
தூண் பாறைகள்,
குணா குகைகள்,
வெள்ளி நீர்வீழ்ச்சி,
டால்பின் நோஸ் பாறை,
குறிஞ்சி ஆண்டவர் கோயில்,
பேரிஜம் ஏரி
போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. இவை ஒரு நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சி அடைய வழி வகுக்கும்.