உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாக்குல எச்சில் ஊற ஆரம்பிச்சிரும். அந்த அளவுக்கு உடுப்பிக்கூடவே உணவு என்னும் எண்ணமும் சேர்ந்தே வரும். கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி இங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் இதன் உணவுச்சுவைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாவில் ஊறும் அளவுக்கு மத்வா இனத்தவரின் தென்னிந்திய பாணி உணவுத்தயாரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவர்கள் காலங்காலமாக தெய்வப்பிரசாதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இன்றும் அந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பவர்கள். சரி வாங்க நாம ஒரு எட்டு உடுப்பிக்கு போய்ட்டு வந்துடுவோமே..
உடுப்பி
உடுப்பி நகரம் பெங்களூரிலிருந்து 400 கி.மீ தூரத்திலும் மங்களூரிலிருந்து 54 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த ஸ்தலம் முக்கியமாக இங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. 1000 ஆண்டுகள் பழமையை கொண்டதாக கருதப்படும் சிவன் கோயில் ஒன்றும் உடுப்பிக்கு அருகிலுள்ள எல்லூர் எனும் இடத்தில் உள்ளது. இந்து மத குரு மத்வாச்சாரியார் அவர்களால் நிறுவப்பட்ட உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் இங்குள்ளது. கடவுளுக்கான நைவேத்தியங்களை சுத்தமுடனும் சுவையுடனும் எளிமையான தயாரிப்பு முறையுடனும் சமைப்பதில் பாரம்பரிய அனுபவமுள்ள உடுப்பி பிராம்மணர்களின் கீர்த்தி கர்நாடக மாநிலத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் பரவியிருப்பது குறிப்பிட த்தக்கது. அதிலும் உடுப்பி தோசை மற்றும் அதன் துணை உணவுகள் மிகவும் பிரசித்தமானவை.
Abdulla Al Muhairi
தொன்னம்பிக்கை கதை
16ம் நூற்றாண்டில் கனகதாஸர் எனும் தாழ்ந்த குலத்தை சேர்ந்த பக்தர் கிருஷ்ண பகவானை தரிசிக்க விரும்பியதாகவும், கோயிலுக்குள் செல்ல அவருக்கு அனுமதி இல்லாததால் அவர் ஜன்னல் வழியாக கிருஷ்ணபஹவானை தரிசிக்க முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. தன்னை தரிசிப்பதற்காக பக்தன் படும் அவஸ்தையை கண்ட கிருஷ்ண பஹவான் தானே அவன் இருக்கும் திசையை நோக்கி திரும்பி அவனுக்கு தரிசனம் தந்ததாகவும் அந்த ஐதீகக்கதை முடிகிறது.
Hegades.
உடுப்பியில் பார்ப்பதற்கு என்னென்ன உள்ளன
கிருஷ்ணர் கோயிலை தவிர்த்து இங்கு மல்பே என்னும் இடத்தில் அமைந்த அழகிய கடற்கரைகளும், எல்லூர் ஷீ விஷ்வேஷ்ரர் கோயிலும் உள்ளன. உடுப்பி நகரம் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளால் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. உடுப்பிக்கு அருகில் மங்களூர் விமான நிலையம் உள்ளது. இங்குள்ள கிருஷ்ண மடத்துடன் இணைந்த ஒரு குருகுலப்பள்ளி ஒன்றும் இங்குள்ளது. இங்கு வைணவ மரப்புக்கான த்வைத தத்துவங்கள் போதிக்கப்படுகின்றன. எல்லா தரப்பினரின் நிதிநிலைக்கும் ஏற்றபடி பலவகையான தங்கும் விடுதிகள் இங்கு அமைந்துள்ளன. பலவிதமான கைவினைபொருட்கள் மற்றும் விளையாட்டுப்பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. எல்லா கிருஷ்ணர் கோயில்களையும் போல இங்கும் முரசு பொம்மைகள் விற்கப்படுகின்றன.
Ashok Prabhakaran
சந்திரமௌளீஸ்வரர் கோயில்
உடுப்பியிலுள்ள பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இதன் புராதனமான தோற்றத்தின் காரணமாக இது உடுப்பியின் ஆஜ்யா என்று அழைக்கப்படுகிறது. பரவலான ஐதீகத்தின்படி பக்தர்கள் கிருஷ்ணர் கோயிலுக்கு செல்வதற்கு இங்கு வந்து வழிப்பட்டு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. சாளுக்கிய கட்டிடக்கலைக்கு நல்ல ஆதாரமாக இந்த கோயில் விளங்குகிறது. இது 6 அல்லது 7ம் நூற்றாண்டில் கட்டப் பட்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. அனந்தீஸ்வரர் கோயில் கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் இதுவும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலுக்கு பின் ஒரு சுவாரசியமான புராணக்கதையும் சொல்லப்படுகிறது. ஒரு முறை சந்திரக்கடவுள் தக்ஷ பிரஜாபதியால் சபிக்கப் பட்டதாகவும் அதனால் சந்திரக்கடவுள் இங்கு சிவனை நினைத்து தவம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. சிவனாகிய ஈஸ்வரனை துதித்து சந்திரக்கடவுள் தவம் செய்த இடம் என்பதால் இந்த கோயிலுக்கு சந்திரமௌளீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்துள்ளது. இந்த கோயில் மணிப்பால் நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும் மால்பே நகரத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலும், மங்களூரிலிருந்து 60 கி.மீ தொலைவிலும், குண்டப்பூரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் மங்களூரில் அமைந்துள்ளது.
அனேகுட்டே
அனேகுட்டே என்பதற்கு யானை மலை என்று பொருள். இது முக்கிய இந்துக்கடவுளான விநாயகருக்குரிய நிலமாக கருதப்படுகிறது. பரசுராம ச்ருஷ்டியின்படி ஏழு முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுவதால் இது முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக கருதப்படுகிறது. பரசுராமரால் உருவாக்கப்பட்ட கோயிலாகவே இது கருதப்படுகிறது. வெள்ளியால் உருவாக்கப்பட்ட விநாயகக்கடவுள் இங்கு பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றார். இந்த விக்கிரகம் பற்றிய ஒரு முக்கியமான அம்சம் இது நின்ற கோலத்தில் காட்சியளிப்பதாகும். பக்தர்கள் தங்கள் எடைக்கு எடை நேர்த்திப்பொருட்களை காணிக்கை அளிப்பதற்கான துலாபாரம் இந்த கோயிலில் உள்ளது. கோயிலைச் சுற்றிலும் பார்கவ புராணத்தின் சம்பவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்தக்கோயில் அமைந்துள்ள இடமான கும்பாஷி குண்டபூரிலிருந்து 9 கி.மீ தூரத்திலும், மங்களூரிலிருந்து 84 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இந்த இடம் தேசிய நெடுஞ்சாலை எண்: 17ன் வழித்தடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மங்களூர், உடுப்பி மற்றும் குண்டப்பூரிலிருந்து அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன. அருகிலுள்ள விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் உள்ளது.