திருவள்ளூர் மாவட்டம் சென்னையை ஒட்டி வடக்கு பக்கத்தில் இருக்கும் மாவட்டம் ஆகும். சென்னைக்கு வருகை தருபவர்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்கும் அதிக அளவில் சுற்றுலா செல்கின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுலா அம்சங்களைப் பற்றி தெரியப்படுத்துவது அவசியமாகிறது. வாருங்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களைப் பற்றி காண்போம்.
திருவள்ளூரில் எங்கெல்லாம் செல்லலாம்
அருள்மிகு விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் திருவள்ளூர் மாவட்டத்தின் சிறப்பான கோவில் ஆகும். திருவள்ளூரில் அருள்மிகு வீரராகவசுவாமி கோவில், வடிவுடை அம்மன் உடன் அமர்ந்த தியாகராசர் கோவில், பவானி அம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், பழவேற்காடு, பழவேற்காடு ஏரி, பூண்டு நீர்த்தேக்கம், பட்டினத்தார் சமாதி, பழையனூர், சுருட்டப்பள்ளி கோவில், சுருட்டப்பள்ளி நீர்வீழ்ச்சி, உப்பேரி பறவைகள் சரணாலயம் என இன்னும் நிறைய சுற்றுலா தலங்கள் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.
பழவேற்காடு
வங்கக் கடலும், பக்கிங்காம் கால்வாய் நீரும் கலக்கும் இடம் இதுவாகும். மிகப் பெரிய உப்பு ஏரி இது. இங்கு அருகிலேயே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 153.6 சகிமீ ஆகும்
இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற் கரை காயல் இது ஆகும்.
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் 100 வகையான பறவைகளுடன், 160 வகை மீன் இனங்களும், 12 வகை இறால்களும், 19 வகை மெல்லுடலிகளும் வாழ்ந்துவருகின்றன.
பழவேற்காடு பற்றி தெரிந்து கொள்ள சொடுக்குங்கள்
ஆன்மீகம்
அருள்மிகு விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர்
சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் திருவள்ளூர் அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது, அமைந்திருக்கிறது.
மிகப் பிரம்மாண்டமாக 32 அடி உயர விஸ்வரூப வடிவிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது, ஒரே கல்லில் ஆனது. பச்சை நிறத்தில் இருக்கும் இந்த சிலை தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிறுத்தத்திலிருந்து திருவள்ளூர் நகரை அடைவதற்கு புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் சென்னை பன்னாட்டு விமான நிலையமாகும்.
திருத்தணி முருகன் கோவில்
திருத்தணியிலுள்ள அழகான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலைக்குன்றுகளின் மேல் ஒரு கிரீடம் போலவும் இரு புறங்களும் வியக்கத்தகு பரந்த காட்சியைக் கொண்ட மலைகளின் மத்தியில் இது அமைந்துள்ளது.
ஆடிகிருத்திகை திருவிழாவில் தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இத்திருவிழாவின் போது திருத்தணி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் திரளாக திரண்டு வருகின்றனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான பக்தர்கள் மலர் காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க வருகின்றனர்
திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தைத் தவிர்த்து சந்தன வேணுகோபாலபுரம் ஆலயமும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது. இந்த ஆலயத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் சென்னையின் மேற்குப்பகுதியில் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கிறது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள்(வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும்.
புராதன காலத்தில் இப்பகுதியிலிருந்த வனப்பகுதி மருத்துவ குணம் மிகுந்த மூலிகைத்தாவரங்களை கொண்டிருந்ததாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. இருப்பினும் தற்போது திருவேற்காடு பகுதி தேவி கருமாரியம்மன் கோயிலுக்காக புகழுடன் அறியப்படுகிறது.
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டுவருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.