ஆடி மாதம் என்றாலே பல விசித்திரமான நிகழ்வுகள் விண்ணிலும் மண்ணிலும் தோன்றும். இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். மழை, வெயில், காற்று, காலம் என அனைத்தும் சற்று வேறுபடுவதை நாம் கண்கூடாக காண முடியும். பிறப்பு முதல் இறப்பு வரை நாமும் அந்த இயற்கையின் ஊடாகத்தானே பயணிக்கிறோம். பிறந்த நேரம் தொட்டு ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த இயற்கையைச் சார்ந்தே நடைபெறுகிறது. அந்த வகையில் ஆடி மாதத்தில் ஏற்படும் கால மாற்றத்தைக் காட்டிலும், வரும் ஆடி வெள்ளியன்று நிகழும் சிவப்பு நிலா சந்திர கிரகணத்தால் எந்த ராசிக் காரர்களுக்கு பரிகாரம் தேவை, அதை எத்தலத்திற்குச் சென்று செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.
சிவப்பு நிலா
வரும் ஆடி வெள்ளியன்று தோன்றும் சிவப்பு நிலாவானது இந்த நூற்றாண்டிலேயே மிக அதிக நேரம் வானில் தோன்றும் அரிய நிகழ்வாகும். கடந்த ஜனவரி மாதம் இதேப் போன்ற ஓர் நிகழ்வு தோன்றியது. அது, 58 நிமிடங்கள் 58 நொடிகள் வானில் இருந்தது. ஆனால் இப்போது வரப்போகும் சூப்பர் மூன் அதிக நேரம் வரை வானில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு சந்திர கிரகணம்
இரவு 11.53 மணியளவில் தொடங்கும் கிரகணம் நள்ளிரவு 12.59 மணி வரை முழு கிரகணமாக வானில் நீடிக்கும். முழு கிரகண மத்தி ஜூலை 28-ஆம் தேதியன்று நள்ளிரவு 1.51 வரை நீடிக்கிறது. நள்ளிரவு 2.43-க்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது. அதிக நேரம் இந்நிகழ்வு நீடிப்பதால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிகமாகப் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள அதற்கேற்ற தலங்களில் பரிகாரம் செய்வது சாலச்சிறந்தது.
எந்த ராசிக்குப் பாதிப்பு
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் தோன்றும் ரத்தச் சிவப்பு நிலா முழு சந்திர கிரகண நாளில் பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
அதிகமான பாதிப்புகள்
இவ்வாறு தோன்றும் சந்திர கிரகணத்தால் மேற்குறிப்பிட்ட நட்சத்திரம் உடையோருக்கு பாதிப்புகள் ஏற்படுவதோடு, ரிஷபம், சிம்மன், கன்னி, மகரம், கும்பம், ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சில பாதிப்புகளும் ஏற்படவுள்ளது. இதில் இருந்து விடுபட இந்த ராசி உடையோர் கீழ்வரும் திருத்தலங்களில் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என ஜோதிட வல்லுநர்களும், நட்சத்திர கணிப்பாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
திருநாகேஷ்வரம், ரிஷபம்
பலவிதப் புராணச் சிறப்புக்களை உடைய அற்புதமான தலம், திருநாகேஷ்வரம். சுசீலர் என்ற முனிவரின் மகனைத் தீண்டியதால் சாபம் பெற்றான் தக்ஷகன் எனும் பெயருடையவர் நாகராஜன். அவன் காச்யப முனிவரின் உபதேசத்தை அனுசரித்து செண்பக வனமாக விளங்கிய இத்தலத்திற்கு வந்து லிங்கம் பிரதிஸ்ட்டை வழிபட்டுச் சாபவிமோசனம் பெற்றான். இக்கோவிலில் பாண்டவர்களும் வழிபட்டுள்ளனர்.
தல அமைப்பு
கோவில் மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது. ஐந்து நிலைகளைக் கொண்ட கிழக்குக் கோபுர வாயில் வழியே நுழைந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரிணிக்கருகில் எழுந்தருளியிருக்கும் மழுவேந்திய விநாயகரை அவசியம் தரிசிக்க வேண்டும். உள்ளே நுழையும்போதே வலப்புறம் தனிக்கோவிலில் வீற்றிருக்கிறாள் அன்னை கிரிகுஜாம்பிகை. ஆடி வெள்ளியன்று தவறாமல் இத்தலம் சென்று வழிபட ரிஷப ராசிக்கு ஏற்பட்டுள்ள, ஏற்படவுள்ள தோஷங்களுக்கு பரிகாரம் நிவர்த்தி செய்யப்படும்.
எங்கே உள்ளது ?
திருநாகேஷ்வரம் காவிரிக் கரையில் உள்ள 127 சிவாலயங்களுள் ஒன்றாகும். தஞ்சாவூரில் இருந்து அய்யம்பேட்டை, நல்லூர் வழியாக 48 கிலோ மீட்டர் தொலைவிலும், வலங்கைமான் வழியாக 50 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருநாகேஷ்வரம் திருத்தலம்.
திருமணஞ்சேரி ராகு பகவான், சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவராக நீங்கள் இருந்தால் இந்த ஆடி வெள்ளியன்று தவறாமல் நீங்கள் செல்ல வேண்டிய இடம் திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஷ்வரர் ஆலயமாக இருக்கட்டும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் ராகு பகவானால் மடுமே உங்களது தோஷத்திற்கு பரிகாரம் கிட்டும்.
தல அமைப்பு
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் சிவனும், பார்வதி அம்மையாரும் கைகோர்த்த நிலையில் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர். இங்கே நவக்கிரகங்கள் கிடையாது. சுயம்பு மூர்த்தியாகச் சிவன் கருவறையில் காட்சியளிக்கிறார். தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்கள் இது 25-வது தேவாரத்தலமாகும்.
வழிபாடு
ராகு கிரக தோஷம் நிவர்த்தி செய்ய இத்தலம் சிறப்புடையது. ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டு குழந்தை பாக்கியம் அற்றவர்கள் இத்தல மூலவரை வேண்டிவாரம் தவறாமல் வெள்ளியன்று வழிபட்டால் ஒரு சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்சனை உள்ளிட்டவை கூட இங்கு வேண்டி நிறைவேறுவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.
சிம்ம ராக்காரர்களே
ஆடி வெள்ளியும், ரத்த சிவப்பு சந்திர கிரகணமும் ஒரு சேர வர சிம்ம ராசிக்கு ஏற்படும் தோஷத்தில் இருந்து பரிகாரம் தேட இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவது சாலச் சிறந்தது. பரிகாரம் மற்றுமின்றி இந்த கிரகணத்தால் ஏற்படும் சில அற்புதங்களையும் இந்த ராசியில் உணரச் செய்வார்.
திருமணத் தடையா ?
திருமண வரத்திற்கு நாடுமுழுவதிலும் புகழ்பெற்றது திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில். ஒரு முறை இங்கே வழிபட்டுச் சென்று விட்டால் போதும் எவ்வித தடைகள் வந்தாலும் குறிப்பிட்ட நாளில் திருமணம் நடைபெறும். திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை மிகவும் பிரசித்தமானது.
எப்படிச் செல்வது ?
அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருமணஞ்சேரியில் அமைந்துள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல நெய்வேலி, திருச்சி, பட்டுக்கோட்டை, சிதம்பரம் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் ராஜதுர்கை, கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆடி வெள்ளியன்று தவறாமல் செல்ல வேண்டிய தலம் திருவாரூர் அருள்மிகு ராஜதுர்க்கை அம்மன் கோவிலாகும். பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, மகம் நட்சத்திரக்காரர்கள், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசியுடையோர் அனைவருக்கும் யோகாதிபதியாக விளங்குபவள் இந்த ராஜ துர்க்கை அம்மையார்.
கோவில் சிறப்பு
பிற ஆலயங்களில் துர்க்கையை வடக்கு நோக்கிய பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்திருப்பர். ஆனால், இத்தலத்தில் கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி துர்க்கை அருள்பாலிக்கிறார். ஆடிவெள்ளியன்று இத்தலத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடு, மாபெரும் திருவிழாவாக இருக்கும்.
வழிபாடு
தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெற, தொழிலில் முன்னேற்றம் காண, கிரகணங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட இத்தலத்தில் சிறப்பு பரிகாரம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தோஷங்களில் இருந்து இங்கே உடனடி மோட்சம் கிடைக்கிறது.
நேர்த்திக்கடன்
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இக்கோவிலுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் வந்து அம்மனுக்கு ஆராதனை செய்து மாலையிட்டு வழிபட வேண்டும். சிலர், தங்களது வசதிக்கு ஏற்ப அம்பாளுக்குப் புடவை சாற்றுதல், பசு வெண்ணெய்யால் தீபம் ஏற்றுதல் உள்ளிட்டவற்றின் மூலம் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
எப்போது, எப்படிச் செல்வது ?
அருள்மிகு ராஜதுர்க்கை திருக்கோவில் நடை காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். திருவாரூர் பனகல் பார்க் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலே இத்தலம் அமைந்துள்ளது. திருவாரூர், மாநிலத்தின் முக்கிய நகரங்களான திருச்சி மற்றும் சென்னையில் இருந்து, சாலை வழியாக எளிதில் அடையும்படி அமைந்துள்ளது.
கொடுமுடி மகுடேஸ்வரர், மகரம்
ஆடி வெள்ளியில் தோன்றும் சிவப்பு சந்திர கிரகணத்தால் ஏற்படும் தோஷத்தில் இருந்து நீங்க மரக ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய தலம் கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் நடக்கும் நவக்கிரக பூஜை மிகவும் பிரசிதிபெற்றது. ஆடி வெள்ளியில் சிறப்பு யாகங்கள் நடக்கும்.
வழிபாடு
ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரம் செய்து திருமணத் தடை, குழந்தைப் பேறு தடை ஆகியவற்றில் இருந்து விடுபடுகின்றனர். நாக தோஷம் நீங்க இத்தல வன்னி மரத்தடியில் அருள்பாலிக்கும் நாகரை வழிபட்டுச் சுற்றிவர கிரகணத்தால் ஏற்படும் தோஷங்கள் விடுபடுகின்றன.
நேர்த்திக்கடன்
வேப்பமரமும், அரசமரமும் இணைந்து வளர்ந்துள்ள இத்தல மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகருக்குக் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி வழிபட்டால் திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.
தல சிறப்பு
இத்தலத்தில் வன்னி மரத்தடியில் உள்ள மூன்று முகம் கொண்ட பிரம்மன் பிரசித்தமானது. ஆதிசேஷனால் உருவாக கோவில் என்பதால் இங்கு நாகர்வழிபாடு விசேஷமானது. நாக தோஷம் நீங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் இங்கே வருவது வழக்கம்.
எங்கே உள்ளது ?
ஈரோடு மாவட்டம், திருப்பூண்டிக் கொடுமுடியில் அமைந்துள்ளது அருள்மிகு மகுடேஷ்வரர் கோவில். ஈரோடு - ஊஞ்சலூர் தேசிய நெடுஞ்சாலையில் 40 கிலோ மீட்டர் பயணித்தால் காவிரிக் கரையோரம் உள்ள இத்தலத்தை அடையலாம். கரூர், பெருந்துறை, திருப்பூர், நாமக்கல் என பிற மாவட்டங்களுடன் கொடுமுடி போக்குவரத்து இணைக்கப்பட்டுள்ளது.
ராஜகாளியம்மன் கோவில், திருவோணம்
மகர ராசி, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த சிவப்பு சந்திர கிரகணத்தால் பாதிப்பு ஏற்பட உள்ளதால் தெத்துப்பட்டி ராஜகாளியம்மனை வழிபடுவது சிறந்த பரிகாரமாக அமையும். இத்தலத்தில், சித்த ஆகம விதிப்படி கோட்சார நவக்கிரகம் பஞ்சலோகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
தல சிறப்பு
இத்தலத்தில் பரிவார கடவுள்களான கணபதி, காவல் அய்யனார், பாலமுருகன், கருப்பணசுவாமி, நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள ஆதிராஜகாளியம்மன் அத்திமரத்தால் உருவாக்கப்பட்டது. அஷ்டநாகர் சிலையில் 8 தலை பாம்பின் நடுவில் கிருஷ்ணன் நடமாடுகிறார்.
வழிபாடு
குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு, கேது, கிரகணம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரம் செய்யப்படுகிறது. குறிப்பாக மகர ராசியில் பிறந்தோர் இத்தலத்திற்குக் குடும்பத்தினருடன் வந்து வழிபட்டுச் செல்ல தோஷங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நீண்ட கால நம்பிக்கை.
எப்படிச் செல்வது ?
திண்டுக்கல் மாவட்டம், தெத்துப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு ராஜகாளியம்மன் ஆலயம். திண்டுக்கல்லில் இருந்து ஜங்கல்பட்டி, தடிக்கொம்பு வழியாக சுமார் 48 கிலோ மீட்டர் பயணித்தால் இத்திருத்தலத்தை அடையலாம். வடமதுரை, பழனி, வத்தலகுண்டு உள்ளிட்ட பற பகுதிகளில் இருந்தும் இத்தலம் வந்தடைய போக்குவரத்து வசதிகள் உள்ளன.
அர்த்தநாரீஷ்வரர் ஆலயம், கும்பம்
நீங்கள் கும்ப ராசிக்காரரா ?. அப்ப வரும் ஆடி வெள்ளி சந்திர கிரகண நாளில் இந்த கோவிலுக்கு தவறாம போயிடுங்க. ஏன்னா, சிவப்பு சந்திர கிரகணத்தால் அதிகமா பாதிக்கப்போவது நீங்களாகத்தான் இருக்கும். திருச்செங்கோடு, அர்த்தநாரீஷ்வரர் ஆலயம், கிரகணத்தால் ஏற்பட்ட தோஷத்தில் இருந்து பரிகாரமளிக்கக் கூடிய தலமாக விளங்குகிறது.
வழிபாடு
இத்தலத்தில் சுமார் 60 அடி நீளத்திற்கு ஐந்து தலை நாகத்தில் சிலை படிக்கட்டின் அருகில் அமைந்துள்ளது. நாகதோஷம், ராகு - கேது தோஷம், காள சர்ப்ப தோஷம், சந்திர கிரகண தோஷம், சூரிய கிரகண தோஷம் உள்ளிட்டவற்றார் பாதிக்கப்பட்டோர் இந்த நாகராஜாவையும், அருகில் உள்ள நவக் கிரகங்களையும் ஒரு சேர வழிபட தோஷங்கள் விலகி ஓடும்.
தல சிறப்பு
நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு நகரத்தில் இருக்கும் அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் 900 மீ உயரத்தில், இருபாலினம் கலந்து அர்த்தனாரீஸ்வரராக காட்சியளிக்கிறார். இங்கு குடிகொண்டிருக்கும் அர்த்தனாரீஸ்வரரின் உடலில் சக்தி அல்லது பார்வதி தேவி கலந்திருப்பது ஆண் மற்றும் பெண் சக்திகள் இரண்டறக் கலந்திருப்பதை உணர்த்துவதாக உள்ளது.
எப்படிச் செல்வது ?
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொடிமாடச் செங்குன்றூரில் அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஷ்வர் ஆலயம். சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் சங்கமிக்கும் புள்ளியில் இத்தலம் அமைந்துள்ளதால் மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் இங்கே எளிதாக வந்தடையலாம்.